இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம் ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், சித்தி இத்னானி கதாநாயகியாகவும் நடித்து இருக்கின்றனர். மற்றும் பிரபு, ஆடுகளம் நரேன், தமிழ், பாக்கியராஜ், சிங்கம் புலி, தீபா, விஜி சந்திரசேகர், ரேணுகா ஆகியோரும் நடித்திருக்கிறனர்.
இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்கியிருக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார். பத்திரிகை தொடர்பு – Team Aim.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாகனேரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு கிராமம்தான் படத்தின் கதைக் களன்.
இந்த ஊரில் 100 ஏக்கர் நிலம்.. விவசாயம்.. மாடுகள், கழனிகள்.. தோட்டம் என்று சகல செல்வத்துடன் வாழ்ந்து வரும் நாயகி சித்தி இத்னானி, தன் கூடவே தனது அண்ணனின் பெண் குழந்தைகள் மூவரையும் வளர்த்து வருகிறார்.
இந்த பெண் குழந்தைகளின் அம்மாவான செந்தி அவரது தாய் வீட்டில் இருக்கிறார். செந்தியின் அப்பா மதுசூதனராவ். செந்தியின் உடன் பிறந்த தம்பியை திருமணம் செய்து கொள்ளும்படி சித்தி இத்னானியை டார்ச்சர் செய்கிறார்கள் அந்தக் குடும்பத்தினர். அதேபோல் சித்தி இத்னானியின் அக்கா கணவர் வீட்டில் இருக்கும் ஒரு மாப்பிள்ளையும் சித்தியை கல்யாணம் செய்து கொள்ள போட்டி போடுகிறார். இவர்கள் இருவரையுமே திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் சித்தி இத்னானி.
இதனால் சித்தி இத்னானியை பெண் கேட்டு யார் வருகின்றவர்களை மதுசூதனனின் உறவினர்கள் அடித்து விரட்டி விடுகின்றனர். சித்தி இத்னானி மீது கண் வைத்து அவரை வேவு பார்த்தும் வருகின்றனர்.
இந்த நேரத்தில் ஜெயிலில் இருக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்கிற ஆர்யாவை சந்திக்க முயல்கிறார் சித்தி இத்னானி. ஆனால் கடைசி நேரத்தில் ஆர்யாவை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகிறார் சித்தி இத்தானி.
தன்னை ஒரு பெண் சந்திக்க வந்ததை கேள்விப்பட்ட ஆர்யா ஜாமீனில் வெளியில் வந்தவுடன் நேராக சித்தி இத்னானியைத் தேடி அவரது ஊருக்கே வருகிறார். அங்கு சித்தி இத்னானியின் உறவினர்கள் ஆர்யாவை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். கூடவே வேறு ஒரு கும்பலும் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது.
ஆனால் தன்னை தாக்க வந்த அனைவரையும் அடித்து விரட்டிய ஆர்யா இதற்கான காரணத்தைத் தேடுகிறார். கடைசியில் சித்தி இத்னானி எப்பேர்ப்பட்ட இக்கட்டில் சிக்கியிருக்கிறார் என்பதை உணர்ந்த ஆர்யா, சித்தியை காப்பாற்ற அந்த ஊரிலேயே அவருடனேயே தங்க முடிவெடுக்கிறார்.
ஆர்யாவின் இந்த முடிவினால் அவருக்கும், சித்தி இத்னானிக்கும் தொடர்ந்து பல பிரச்சினைகள் எழுகின்றன. கொலை முயற்சிகளும் நடக்கின்றன. கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்த ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் மீதிக் கதை.
இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாப்பாத்திரமாக கிராமத்து இளைஞனாக நடித்துள்ள ஆர்யா ஆக்சன் கிங்காகவே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். அதிரடி, ஆக்ஷன் காட்சிகள் என்று படம் முழுவதுமே சண்டைக் காட்சிகள் நிரம்பி வழிவதால் சண்டைகள்தான் ஆர்யாவின் நடிப்பு என்றாகிவிட்டது.
கதாநாயகியான சித்தி இத்னானியின் முக அழகின் வசீகரத்தால் அவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் கண் சிமிட்டாமல் திரையைப் பார்க்க முடிகிறது. சிறந்த நடிப்பையும் கொடுத்திருக்கிறார். தனது கேரக்டருக்கேற்ற இயல்பான நடிப்பை காண்பித்துள்ளார் சித்தி இத்னானி.
முக்கியமான முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபு, ஜமாத் தலைவராக இருந்து கொண்டே மத நல்லிணக்கத்தையும், பிற மதத்தினர் குறித்த இஸ்லாமியர்களின் பார்வையையும் தனது கதாப்பாத்திரத்தின் மூலமாகவே பேசியுள்ளார். அவரின் சில வசனங்கள் இன்றைய அரசியலை ஞாபகப்படுத்துகின்றன.
ஆடுகளம் நரேனின் ஆக்ரோஷ நடிப்பு பயமுறுத்துகிறது என்றால் கே.பாக்யராஜின் தன்மையான நடிப்பு ரசிக்க வைக்கிறது. மேலும் ஏட்டு சிங்கம் புலியின் பயம் கலந்த நடிப்பும், தீபாவின் புலம்பலும், விஜி சந்திரசேகரின் திமிர்ப் பேச்சும், ரேணுகாவின் அடக்கமான, பாந்தமான அம்மா நடிப்பும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு சான்றாகத் தெரிகின்றன.
வேல்ராஜின் ஒளிப்பதிவுதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். பொட்டல் காட்டில் நடக்கும் சண்டைகளையும், ஊருக்குள் நடக்கும் சண்டைகளையும் அனல் பறக்க பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையை காதைக் கிழிக்கும் வகையில் போட்டுத் தாக்கியிருக்கிறார். சண்டை காட்சிகளில் காட்சிகளைவிடவும் ஒலிதான் மிரள வைக்கிறது.
சண்டை இயக்குநருடன் ஒத்துழைத்து படத் தொகுப்பாளர் மொத்தப் படத்தினையும் தொகுத்தளித்துள்ளார். ஆர்யாவை அறிமுகப்படுத்தும்போது காட்டப்படும் அனைத்து வன்முறை காட்சிகளையும் தொகுத்தவிதம் நமது நடு மண்டையில் ஆணியை இறக்குவதுபோல உள்ளது.
இயக்குநர் முத்தையா படங்கள் என்றாலே சாதி ரீதியான உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ளவையாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் சாதியத்திற்கும் மேலாக இரண்டு மதங்களுக்கு இடையிலான நட்பு, பாசம், துரோகம், கோபம், தாபம் எல்லாவற்றையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் திரைக்கதையில் யாருக்கு யார் எந்த வகையில் உறவு என்பதை கடைசிவரையிலும் புரிந்து கொள்ளவே முடியாத வகையில் படமாக்கியிருக்கிறார். அதோடு இடைவேளைக்குப் பின்பு ஆர்யா-பிரபு-ஆடுகளம் நரேன் கதையே அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் மீண்டும் சித்தி இத்னானியின் கதைக்குள் நுழைவதற்குள் நமக்கு மிகவும் போரடித்துவிட்டது.
மேலும் கடைசியில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக ஆர்யாவுக்கும், சித்தி இத்னானிக்குமான உறவு முறை வெளிப்படும்போது இது வேறய்யா என்றுதான் நாம் ஆசுவாசப்பட வேண்டியுள்ளது.
தொடர்ச்சியாக சண்டை காட்சிகளை வைத்துவிட்டு இடையிடையே பாடல்களையும், வசன காட்சிகளையும் வைத்திருக்கிறார் இயக்குநர். கமர்ஷியல் ஹீரோ என்னும் இடத்தைப் பிடிப்பதற்கு ஆர்யா முயற்சித்தாலும் அதுக்கு ரஜினி வழி ஒத்து வராது. ஏனெனில் ரஜினிக்கென்றே தனித்துவமான நடிப்பு ஒன்று இருந்தது. அந்த தனித்துவமான நடிப்பை ஆர்யா வளர்த்துக் கொண்டு இது போன்ற படங்களில் நடித்தால் அவருக்கும் நல்லது. ரசிகர்களுக்கும் நல்லது. தயாரிப்பாளர்களுக்கும் நல்லது.
RATING : 2 / 5