11:11 Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் தயாரித்துள்ள திரைப்படம் ‘வால்டர்.’
சிபிராஜ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படப் புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க, ‘சதுரங்க வேட்டை’ நாயகன் நட்டி மற்றும் சமுத்திரகனி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எழுத்து இயக்கம் – U.அன்பு, இசை – தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு – ராசாமதி, படத் தொகுப்பு – S. இளையராஜா, பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி, கலை இயக்கம் – A.R.மோகன், நடன இயக்கம் – தஸ்தா, புகைப்படங்கள் – தேனி முருகன், டிசைன்ஸ் – J.சபீர், சண்டை இயக்கம் – விக்கி, இணை தயாரிப்பு – Dr. பிரபு திலக், தயாரிப்பு மேற்பார்வை – K.மனோஜ் குமார், தயாரிப்பு – ஸ்ருதி திலக்.
சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் ‘வால்டர் வெற்றிவேல்’. தற்போது அதே ‘வால்டர்’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நாயகன் சிபிராஜ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசும்போது, “இந்தப் படத்தில் முக்கியமான ஒரு சமூகக் கருத்தைக் கூறியிருக்கிறோம். நீங்கள் அனைவரும் மக்களுக்கு அதனை எடுத்து செல்ல வேண்டும். படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி..” என்றார்.
படத் தொகுப்பாளர் இளையராஜா பேசும்போது, “இது எனது முதல் படம். வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் சிபிராஜ் அவர்களுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். சத்யராஜ் சாரின் ‘வால்டர்’ படம் போல் இந்தப் படமும் பெரிய வெற்றிப் படமாக இருக்கும். இப்படம் நன்றாக வர தொழில் நுட்பக் கலைஞர்கள்தான் காரணம். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்தப் படம் நிச்சயமாக சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.
நடிகை யாமினி சந்தர் பேசும்போது, “இந்த ‘வால்டர்’ எனக்கு ரொம்பவும் ஸ்பெஷலான படம். எனக்கு இது முதல் படம். இவ்வளவு பெரிய டீமுடன் நடித்தது மகிழ்ச்சி. எனக்கு ரொம்ப முக்கியமான கதாப்பாத்திரம் தந்துள்ளார்கள். படத்தில் இன்னும் நிறைய, நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது…” என்றார்.
நடிகை ரித்விகா பேசும்போது, “இந்தப் படத்தினை நாங்கள் அனைவரும் இணைந்து நல்ல முறையில் உருவாக்கியுள்ளோம். இப்போது உங்கள் கையில் கொடுத்துவிட்டோம். மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது உங்கள் கடமை. உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறோம்…” என்றார்.
நடிகர் அபிஷேக் பேசும்போது, “இயக்குநர் அன்பு எனக்கு ஒரு நல்ல படத்தினை தந்துள்ளார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தில் சிபிராஜ், சமுத்திரகனி, நட்டி ஆகியோருடன் நடித்தது சந்தோஷம். எனக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. படம் பாருங்கள் ஆதரவு தாருங்கள்…” என்றார்.
நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலா பேசும்போது, “எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. இந்தப் படத்தில் சிபிராஜ் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. என்னுடைய கதாப்பாத்திரம் அற்புதமாக உள்ளது. நல்லா நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறஏன். நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..” என்றார்.
தயாரிப்பாளர் பிரபு திலக் பேசும்போது, “இங்கு நான் நிறைய பேச நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரின் கடமை சினிமாவில் மிகப் பெரிது. மிக முக்கியமானது. கதை கேட்பதில் ஆரம்பித்து அது உருவாகி அதனை கொண்டு சேர்ப்பதுவரை, அது பெரும் கடமை.
ஒரு சினிமாவால் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும். சினிமாவில் சமூகத்திற்காக ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் அந்த காலத்திலேயே பெரும் புரட்சி ஏற்படுத்தும் படங்கள் வந்திருக்கிறது. சமூகத்தை பாதிக்கக் கூடிய அல்லது சமூகத்திற்கான தேவையை கொண்டு போய் சேர்ப்பதுதான் சினிமாவின் வேலை.
இரண்டு சமூக மக்கள் எங்கோ சண்டை போட்டுக் கொண்டதை சினிமாவாக்கி சம்பாதிப்பது சினிமாவின் வேலையல்ல. ஒரு சிறு திரைக்காட்சிகூட சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு மிகப் பெரும் ஆயுதம் இந்த சினிமா. அப்படிப்பட்ட சினிமாவில் வேலை செய்யும் வாய்ப்பு தந்த என் அம்மாவிற்கும் மற்ற அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
ஒரு கோவிலின் கர்பகிரகத்தில் கிடைக்கும் அமைதி எனக்கு சினிமாவில் கிடைக்கிறது. எனது டீமுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என் குடும்பமாக அவர்கள் என்றென்றும் என்னுடன் இருப்பார்கள்.
இந்த ‘வால்டர்’ திரைப்படம் ஒரு கமர்ஷியல் கலந்த படம். இதிலும் சமூகத்திற்கு தேவையான ஒரு விசயத்தை பற்றி பேசியுள்ளோம். நம் அடுத்த தலைமுறையை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இன்று படம் உங்கள் முன் வந்துள்ளது. நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.
நடிகர் நட்ராஜ் சுப்பிரமணியம் பேசும்போது, இந்த ‘வால்டர்’ திரைப்படம் மிகச் சிறப்பான திரைக்கதை கொண்ட படம். இயக்குநர் கதை சொன்னபோதே எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. என்னிடம் சொன்ன மாதிரியேதான் படத்தையும் எடுத்துள்ளார். இந்தப் படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். சிபிராஜுடன் நடித்தது சந்தோஷம். அவர் நடித்தபோது அவர் அப்பாவை பார்ப்பது போலவே இருந்தது. சமுத்திரகனி என் நெருங்கிய நண்பர். அவருடன் வேலை பார்த்ததும் சந்தோஷம். தயாரிப்பாளரின் குடும்பமே காவல் துறை சம்பந்தப்பட்டது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இந்தப்படத்தை தயாரித்துள்ளார்கள். இந்தப்படம் எல்லோரையும் கவரும் படைப்பாக இருக்கும்…” என்றார்.
இயக்குநர் U.அன்பு பேசும்போது,. “சிபிராஜ் ஸாரிடம் இந்த வால்டர் படத்தின் கதையுடன் இன்னும் இரண்டு கதைகளையும் சொன்னேன். ஆனால் சிபிராஜ் ஸார் இதைத்தான் தேர்ந்தெடுத்தார்.
அந்த நாள் முதல் இப்போதுவரை இந்தப் படத்தில்தான் பயணம் செய்திருக்கிறேன். இந்தப் படம் அதற்கு தேவையானதை எடுத்து கொண்டு அதுவாகவே முழுமை பெற்றிருக்கிறது. படம் நல்லபடியாக வந்துவிட்டது.
இந்தப் படம் முழுமையாக உருவாகி நிற்க தயாரிப்பாளர்தான் காரணம். அவருக்கு நன்றி. சிபிராஜ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவருக்கும் எனது நன்றி. நட்டி அண்ணன் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். படக்குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
இனி எல்லாமே பத்திரிகையாளர் கைகளில்தான். நீங்கள்தான் ஒரு படத்தை வெற்றிப் படமாக மாற்றக் கூடியவர்கள். ஒரு படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பீர்கள். இந்தப் படத்தை நீங்கள் நிச்சயமாக ரசிப்பீர்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்…” என்றார்.
நடிகர் சிபிராஜ் பேசும்போது, “சினிமாவில் ஒரு நல்ல படம் அதற்கு தேவையானதை அதுவே தேடிக் கொள்ளும் என்பார்கள். அது எப்படி என்று யோசிப்பேன். ஆனால், இந்தப் படத்தில் அது நடந்தது. ஐந்து வருடமாக உழைத்து, இந்தப் படத்தை பல தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று, பெரும் கஷ்டங்களுக்கு பிறகு இப்போது இயக்கியுள்ளார் அன்பு.
இறுதியில் இப்படம் ஒரு நல்ல பொறுப்பான தயாரிப்பாளரிடம் வந்து சேர்ந்துள்ளது. இப்படத்தில் நட்டி நடிக்கிறார் எனும்போதே எனக்கு பயமாக இருந்தது. அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அப்பாவுடனும், வடிவேல் சாருடனும் நடிக்கும்போது பயமாக இருக்கும். எப்படி இவர்கள் முன் நடிப்பது என்று. அதே மாதிரிதான் நட்டி சார் முன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக ஆதரவாக இருந்தார்.
இந்தப் படம் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து இப்போது ஒரு நல்ல நிலையை வந்தடைந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் சாட்டிலைட் விற்றுவிட்டது. இதனால், படத்தின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.