full screen background image

“மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் இடையில் சிக்கும் கணவன்” – இதுதான் கதை..!

“மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் இடையில் சிக்கும் கணவன்” – இதுதான் கதை..!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில்,  நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்’.

இப்படம் வரும் மே 26-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக் குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் பாடலாசிரியர்  மோகன்ராஜா பேசும்போது, “இந்தப் படத்தில் ‘உசுராங்கூட்டில்..’ என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப் படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்துதான். பல முறை விவாதத்திற்குப் பின் ‘உசுராங்கூட்டில்..’ என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத்திற்கு பிறகே பாடல் முடிவாகும். கடைசியில் என்னை நம்புங்கள் என்பேன். நம்பி வருவார்.

இந்தப் படம் இலக்கணம் மீறா தலைப்பு, இலக்கணம் மீறத் துடிக்கிற கதை. மிக அற்புதமாக இயக்கியுள்ளார். கல்யாணமானவர்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்த்தால் தன் எக்ஸ் உடன் நாகரீகமாகப் பழகுவார்கள். மனைவியுடன் அன்பாக இருப்பார்கள்.

ஜெய்யுடன் முன்பே எஸ்.ஏ.சி. சார் படத்தில் பாட்டெழுதி உள்ளேன். ஐஸ்வர்யா மேடமுடன் வேலை பார்க்க வேண்டுமென ஆசை, அவர் இப்போது பெரிய ஸ்டார் ஆகிவிட்டார் வாழ்த்துக்கள்.  இந்தப் படத்திற்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

பாடலாசிரியர் விக்னேஷ் பேசும்போது, “இந்த ‘தீராக் காதல்’ எனக்கு மிக  முக்கியமான படம். ஏனெனில் இது இசையமைப்பாளர் சித்துவின் படம். நாங்கள் இருவரும் நீண்ட நாள் நண்பர்கள். ஜெய் சாரின் ‘வாமனன்’ படத்தில் வரும் பாடல்களுக்கு நான் அடிமை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பாடல் மட்டுமில்லை.. படத்தில் வரும் அனைத்து பாடலும் நன்றாக வந்துள்ளது, படக் குழுவிற்கு வாழ்த்துகள். நன்றி..” என்றார்.

இசையமைப்பாளர் சித்து குமார் பேசும்போது, “திங்க் மியூசிக் சந்தோஷ் மூலம்தான் இயக்குநர் ரோகின் எனக்கு அறிமுகமானார். என்னை இந்தப் படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி.  லைக்கா போன்ற நிறுவனத்தில் படம் செய்வது மகிழ்ச்சி.

எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த சில சம்பவங்களை இந்தப் படம் ஞாபகப்படுத்தும். சிலருக்கு இந்தப் படம் விழிப்புணர்வு தரும். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்…” என்றார்.

நடிகர் அப்துல் லீ பேசும்போது, “ரோகின் சாருக்கு இது மூணாவது படம். அவருடைய மூணாவது படத்துலயும் நான் இருக்கிறேன் என்பதே சந்தோஷம். ஐஸ்வர்யா மேடம், ஷிவதா மேடம் இருவரும் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். ஜெய் சாரை ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே ரொம்ப பிடிக்கும். நான் வியந்து பார்த்த பிரபலங்களுடன் நடிப்பது சந்தோஷம். இந்தப் படத்தில் நீங்கள் ரிலேட் பண்ணிக் கொள்ள நிறைய இருக்கும். இந்தப் படத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி…” என்றார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் ரோகின் வெங்கடேசனுக்கு நன்றி. ஜெய் சார் போன்ற பெரிய ஹீரோவுடன் வேலை பார்க்கிறோம் என்ற உணர்வை, வந்தவுடன் இயல்பாகப் பழகி, போக வைத்துவிட்டார். ஷிவதா மேடமுடன் ‘அதே கண்கள்’ படத்திலும் வேலை பார்த்துள்ளேன். ஐஸ்வர்யா மேடமும் இயல்பாக இருந்தார். நடிகர்கள் சிறப்பாக இருக்கும் போது எங்களது வேலை எளிதாகிவிடும். இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த கேரக்டர் அம்ஜத் கேரக்டர்தான். சிறப்பாக நடித்துள்ளார். இயக்குநர் நிறைய சுதந்திரம் தந்தார்…” என்றார். 

நடிகர் அம்ஜத்  பேசும்போது, “நான் மேடை ஏறிப் பல நாட்கள் ஆகிவிட்டது, இந்த வாய்ப்பினை  அளித்த ரோகினுக்கு நன்றி. படத்தின் முழுக் கதை பற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய பகுதி மட்டும்தான் எனக்குத் தெரியும், ஒட்டு மொத்த கதையும் அதற்குப் பின்னர்தான் தெரியும். என்னுடைய கதாபாத்திரம், தனித்துவமாக இருக்கும்..” என்றார்.

எழுத்தாளர் ஜி. ஆர். சுரேந்திர நாத்  பேசும்போது, “இந்த தீராக் காதல் கதையை உருவாக்கியதே ஒரு தனிக் கதை. நானும், ரோகினும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படம் பார்க்கப் போனோம். அப்போது ரோகின் இந்த மாதிரி படம் தமிழில் பண்ண வேண்டும் என்றார். எழுத்தாளருக்கு கிரடிட் தந்தால், அது நடக்கும் என்றேன். நான் தர்றேன் என்றவர், இப்படத்தில் திரைக்கதை வசனம் தனியாக கிரடிட் தந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.

முன்பு எக்ஸ் லவ்வர்களை சந்திப்பது மிகவும் அரிது. ஆனால் இந்த ஜெனரேஷனில் மனைவியைவிட, எக்ஸ் லவ்வருடன்தான் அதிகமான டச்சில் இருக்கிறார்கள். இந்தப் படம் நடக்கும்போது, என் தாய் தந்தையரை உடல் நிலை காரணமாக இழந்தேன். பணத்தின் மீது, உறவின் மீது என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்தேன். ஆனால் நம்பிக்கை இழக்காத ஒன்று இந்தப் படத்தின் கதைதான். இந்தக் கதையின் உணர்வுகளை.. நடிகர்கள் நன்றாக நடித்தால்தான் ரசிகர்களிடம் போய்ச் சேரும். ஜெய், ஐஸ்வர்யா, ஷிவதா மூவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.

டான்ஸ் மாஸ்டர் ராதிகா பேசும்போது, “முதன்முதலாகப் படத்திற்கான வேலைக்குப் போகும்போதே எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடனம் ஆடுபவர்கள். எனவே கலக்கி விடலாம் என நினைத்தேன். இயக்குநர் எனக்கு ரெண்டு விதிமுறைகளை விதித்தார். ஒன்று டான்ஸ்  இருக்க கூடாது. மற்றொன்று ஒருவரை ஒருவர் தொட்டு நடிக்கக் கூடாது. இதைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும், நானும் இயக்குநரும் சேர்ந்து பேசி இந்தப் படத்திற்கான பாடல்களை வடிவமைத்தோம், சூப்பராக வந்துள்ளது. இப்படத்திற்கான வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி…” என்றார்.

நடிகை ஷிவதா பேசும்போது, “இதற்கு முன்பு ரோகினுடன் அதே கண்கள் படத்தில் வேலை பார்த்துள்ளேன்.  அப்போதே அவரிடம் அடுத்து என்ன எனக் கேட்டேன். காதல் கதைதான் என்றார். என்னை நடிக்க வைப்பீர்களா? என்று கேட்டேன். இந்தக் கதையை அனுப்பினார். நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்தேன். ஐஸ்வர்யா  அடுத்தடுத்து வித்தியாசம் வித்தியாசமாகப் படம் நடித்துக் கலக்கி வருகிறார். அவர் என் நடிப்பு பிடித்திருக்கிறது என்று சொன்னது பெருமை. ஜெய் கலாய்த்துக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பில் உறுதுணையாக இருந்தார். ஒளிப்பதிவாளர் என்னை அழகாகக் காட்டியுள்ளார். சித்து மிக நல்ல பாடல்களை தந்துள்ளார். சுரேந்தர் சாரிடம் இது யாருடைய கதை எனக் கேட்டேன். சிரித்தார். இந்தப் படம் எல்லோருக்கும் ஈஸியாக கனக்ட் ஆகும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்…” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “எல்லா கதைகளுக்குப் பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதே போல் எனக்கும்  இயக்குநர் ரோகினுக்கும்,  இரண்டு வருடக் கதை உண்டு.

நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாகவே படம் பண்ண வேண்டியது. எங்களின் கதையைக் கேட்டு, லைக்கா நிறுவன தமிழ் குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார்.  அது எனக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது. ஆனால் படம் லேட்டாகவே.. படம் நடக்க வேண்டுமெனத் திருப்பதி மலை ஏறி நேர்த்திக் கடன் செலுத்தினோம். அங்கு இருந்தபோதுதான் இந்த  அதிசயம் நடந்தது. தமிழ் குமரன் ஸார் போன் செய்து, “இந்தப் படத்தை நாம் செய்யலாம்” என்றார். இந்தப் படம்  மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும், ஜெய்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் ஒரே முடிவாக இருந்தார், ஏன் என்று தெரியவில்லை. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷிவதாவின் தீவிர ரசிகை நான். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. அனைவரும் அதனை ரசிப்பீர்கள். ஒட்டு மொத்த படக் குழுவினரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.

நடிகர் ஜெய் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை, கதையாகக் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று ஒரு குழப்பம் இருந்தது, ஆனால் எனக்கு இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தது. அவரது அதே கண்கள் படத்தை 4 முறை பார்த்துள்ளேன்.

இந்த மாதிரி இயக்குநரிடம் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது சந்தோஷம். ஒளிப்பதிவாளர் ரவி என்னை இந்தப் படத்தில் அழகாகக் காண்பித்துள்ளார்.  பாடல்களும், இசையும் அருமையாக வந்துள்ளது.

சித்துவின் ரசிகன் நான். இந்தப் படம் அனைவருக்கும் தங்களுடைய சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வைப் போல் இருக்கும், இதற்காக மொத்த குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர்.

ரோகின் மிகப் பெரும் புத்திசாலி. அவருடைய பணி தனித்துவமாக இருக்கும், படத்தில் இரண்டு நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். ஐஸ்வர்யாவின் பெரும் ரசிகன் நான். தயாரிப்பாளர் லைக்கா தமிழ் குமரனுக்கு நன்றி. ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் எனது நன்றி…” என்றார்.

இயக்குநர் ரோகின் வெங்கடேசன் பேசும்போது, “இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த லைக்காவிற்கு நன்றி. ஆசைப்பட்ட வாழ்க்கை, ஆசைப்பட்ட பொருள், ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காம போறதுதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம். இது பாலகுமாரன் சார் எழுதியது. எல்லாருடைய வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.

இது என்னோட இரண்டாவது படமா வந்திருக்க வேண்டியது. சுரேந்திரன் சார் நிறையக் காதல் கதைகளை எழுதியிருக்கிறார். இந்தக் கதை ஒரு அற்புதம். அவரோடு நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என்னோடு எப்போதும் உடன் நின்றிருக்கார்.

இந்தக் கதை வேற ஒரு புரடக்சனுக்கு பண்ண வேண்டியது. அந்த தயாரிப்பாளர் சுதன்தான் ஐஸ்வர்யாகூட கனக்ட் பண்ணிவிட்டார். அவர் வேறு படங்கள் செய்து கொண்டிருந்தபோதும் இந்தப் படம் பத்தி அவ்வப்போது பேசிக் கொண்டே இருப்பார்.

சுதன் இந்தப் படத்தினை செய்யவில்லை என்ற போதுதான் லைக்காவிடம் போனோம். பல அடுக்குகள் தாண்டி, இந்தப் படம் ஓகே ஆனது. ஹீரோ எனும்போது ஜெய்தான் என் ஞாபகத்திற்கு வந்தார். ஏன் ஜெய் என்றால், பார்ப்பவர்களுக்குக் கதையில் இந்தாள் இதை செய்திருப்பான் எனத் தோன்ற வேண்டும், அது அவர் முகத்தைப் பார்த்தால் மட்டுமே இருக்கும்.

ஷூட்டிங் செம்ம கலகலப்பாக இருக்கும். ஆனால் ஷாட்டின்போது அட்டகாசமாக நடித்து அசத்திவிடுவார்கள்.  ஜெய் வசனம் இல்லாதபோதுதான் மாட்டிக் கொள்வார். என்னை நடித்துக் காட்டச் சொல்வார். நான் கேவலமாக நடிப்பேன். நீங்களே நடித்து விடுங்கள் என்பேன்.

ஐஸ்வர்யா மேடம் எதுவானாலும் அசத்திவிடுவார், ஆனால் டயலாக்கை அவ்வப்போது மாற்றி விடுவார். ஆனால் அங்கேயே நான் மாற்றிப் பேசுங்கள் என அடம் பிடிப்பேன். மற்றபடி அவர் அட்டகாசமாகச் செய்துவிடுவார். ஷிவதா மேடம் மிக புரபஷனல். வந்தால் அவர் வேலையை சிறப்பாகச் செய்து விடுவார். வ்ரித்தி குழந்தைகளை நடிக்க வைப்பதுதான் கஷ்டம்,  ஆனால் வ்ரித்தி எங்களுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு தந்தார். மிக அட்டகாசமாக நடித்துள்ளார்.

அம்ஜத் என் எல்லாப் படத்திலும் இருக்கிறார். தன் கேரக்டருக்காக கடுமையாக உழைக்கக் கூடிய நடிகர். மிகச் சிறந்த நண்பர். ரவி எல்லாமும் அவரிடம் சொல்ல முடியும். என்னைவிட இந்தக் கதை மீது நம்பிக்கை கொண்டவர்.

எடிட்டர் பிரசன்னாவும், நானும் ஒன்றாக படித்தவர்கள். என்னை டென்ஷனே இல்லாமல் பார்த்துக் கொள்வார். டெக்னிகல் டீமில் எல்லோருமே மிகக் கடுமையாக உழைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் மிக முக்கியமானவர் சித்து, இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, வீட்டில் காதலை ஒத்துக் கொள்ளவில்லை என்றார். அப்புறம் ஒத்துக்கொண்டு கல்யாணம், ஹனிமூன் எல்லாமே இந்தப் படத்திலேயே பார்த்துவிட்டார். இந்தப் படத்தின் காதல், சோகம் அனைத்துக்கும் அழகாக இசை தந்துள்ளார். என் குடும்பத்திற்கு நன்றி. தீராக் காதல் உங்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்…” என்றார்.

இப்படம் வரும் மே 26-ம் தேதியன்று உலகமெங்கும்  திரைக்கு வருகிறது.

 
Our Score