நடிகர் அசோக் குமார், நடிகை லீசா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ள படம் ‘பிரியமுடன் ப்ரியா’. இந்தப் படத்தை A.J.சுஜித் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100-வது படமாகும்.
இந்த ‘பிரியமுடன் ப்ரியா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தேனிசைத் தென்றல் தேவா, கங்கை அமரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் S.கதிரேசன், R.ராதாகிருஷ்ணன் இணைச் செயலாளர் செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் N.விஜயமுரளி, நடிகர் ‘காதல்’ சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் படத்தின் நாயகனான அசோக் பேசும்போது, “இதுவொரு குடும்ப விழா. கொண்டாட்டமாகவும் உள்ளது. இந்தப் படத்தில் பாடல்கள் சிறப்பாக உள்ளன. எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் இருவரும் பாடிய பாடல்களை இப்போதுதான் கேட்டேன். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100-வது படத்தில் இது அமைந்தது ஸ்பெஷல்தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை கொண்டாடும் ரசிகர்கள் அவரின் டைட்டில் வரும் போது வரும் பி.ஜி.எம். தேவாவின் இசைதான்.
நான் சினிமாவில் ஜீரோவில் இருந்து ஆரம்பிக்கும்போது ஒரு சில வாய்ப்புகள் தவறும். வாய்ப்பு கிடைத்தால்தான் நிரூபிக்க முடியும். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளது. எனக்கு தெலுங்கு அந்தளவுக்கு தெரியாது. கொஞ்சம்தான் தெரியும். ஆனாலும் தெலுங்கிற்கு நானே டப்பிங் பேசியுள்ளேன்…” என்றார்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. த.வேலு பேசும்போது, “ஒரு அரசியல்வாதியாக சினிமா விழாவில் நான் கலந்து கொண்டது எனக்கு புதியது. எங்கள் மயிலாப்பூர் மண்ணின் மைந்தன் ஸ்ரீகாந்த் தேவா .இசை என்றால் மயிலாப்பூருக்கு தனி இடம் உண்டு. அப்பா மேடையில் பிள்ளைக்கு விழா என்பது மிகப் பெருமையான விஷயம். தேவா அண்ணன் உற்சாகமானவர். உயர்ந்த தன்னம்பிக்கை கொண்டவர். ஸ்ரீகாந்த் தேவா அமைதி புயல்…” என்று வாழ்த்தினார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும்போது, “கங்கை அமரன், தேவாவுக்கு முதல் வணக்கம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவுக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரி விழாவில் என்ன பேச வேண்டுமோ, அதை சரியாக பேசினார் அசோக்.
படக் குழுவுக்கு வாழ்த்து. படம் எடுப்பது ஈசி. படத்தை வெளியிடுவதுதான் தற்போது கஷ்டம். படம் எடுக்கும்போது நமக்கு கஷ்டமே தெரியாது. ரிலீஸ் இருக்கிறதே மிக வலியானது. பிரசவம் போல…” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “ஸ்ரீகாந்த் தேவா 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார் என்பது அதிர்ச்சியான விஷயம். வெற்றி என்பது கலைஞனுக்கு அடுத்த விசயம்தான். Positive energyதான் முக்கியம். அதுதான் ஸ்ரீகாந்த் தேவாவை 100 படம் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
எத்தனை படம் ஹிட் கொடுத்தாலும் ஒரு படம் ஹிட் ஆகவில்லை என்றால், அவன் செல்லாத காசாக ஆகிவிடுவான், 2,000 ரூபாய் நோட்டு போல.. இதுதான் சினிமாக்காரனின் வாழ்க்கையும். தடுக்கி விழுந்தால் யாரும் உதவமாட்டான். இதுதான் சினிமா உலகம். அப்படி ஒரு உலகத்தில் 100-வது படம் கொடுப்பது மிகப் பெரிய சாதனை.
இளையராஜா எவ்வளவோ படங்கள் கொடுத்தார். அது அந்தக் காலக்கட்டத்தில் சாதாரண விசயம்தான். ஏனெனில் அது தமிழ் சினிமாவின் பொற்காலம். ஆனால் இந்தக் காலகட்டத்தில் 100 படம் கொடுப்பது எளிதல்ல.
ரஜினி வளர்ந்து வரும்போது ‘ப்ரியா’ ஹிட், விஜய் வளரும்போது ‘ப்ரியமுடன்’, ‘ப்ரியமானவளே’ ஹிட். இந்த படத்தில் 2 ப்ரியா இருக்கிறது. அப்போது நிச்சயமா டபுள் ஹிட்டுதான்.
100-வது படம் என்பதால் ஸ்ரீகாந்த் தேவா இந்தப் படத்திற்கு சிறப்பாக இசையமைத்திருக்கிறார். பொதுவாக இசை வெளியீட்டு விழாக்களில் இசையமைப்பாளரை ‘விழாவின் நாயகன்’ என்று சொல்வார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் தேவா இந்த விழாவில் ‘சாதனை நாயகன்’.
கங்கை அமரன், தேவா ஆகியோர் சம்பாதித்த சொத்து என்னவென்றால் அவர்களின் படைப்புகளும், பாடல்களுமே.. இதை அவர்கள் அனுபவிக்கிறார்களோ இல்லையோ, மக்கள் அனுபவிக்கிறார்கள். சினிமா இசையுடன் மக்கள் பயணிக்கின்றனர்.
சினிமாவில் எல்லாவற்றையும்விட ஆத்மார்த்தமான விசயம் எது என்றால், இசையமைப்பாளர்தான். அதன் பின் பாடலாசிரியர். எங்கு போனாலும் சினிமா பாடல்கள்தான். இப்போதைய காலகட்டத்தில் இயக்குநர்கள் படங்களில் பாடல் வைப்பதில்லை. அது மிகப் பெரிய ஆபத்து.
இன்றைய தலைமுறைக்கு இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்கள் இருக்கிறது. நாளைய தலைமுறைக்கு யார், எதை கொடுப்பார்கள்? Re-recording படத்துக்கே எதார்த்த மீறல்தான். பிறக்கும்போது தாலாட்டு, இறக்கும் போது ஒப்பாரி என எல்லாம் பக்கமும் இசைதான். இந்த படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்..” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “100 படத்தில் முதலில் இருக்கும் ஒன்று நான்தான். அந்த முதலுக்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால், நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனுக்குத்தான்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரபுதேவா நடிப்பில் உருவான படத்துக்கு ஒரு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். லண்டனில்தான் டியூன் போடுவேன் என்றார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு 3 நாட்களில் நின்று போனது. ஆனால் அந்த இசையமைப்பாளரால் மட்டுமே ஐசரி கணேஷுக்கு 2.5 கோடி நஷ்டம். இசையமைப்பாளர்கள் கொஞ்சம் இதயமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
தேவா அவருடைய சம்பளத்தை தந்தையிடம்தான் கொடுக்க சொல்வார். பெற்ற தாய், தந்தையை போற்றி வணங்குபவர்கள் கடைசி காலம்வரையிலும் நன்றாக இருப்பார்கள். இந்த படத்தில் நாயகர்கள் இருவரை மட்டுமே வைத்து பாடல் காட்சியை படமாக்கியுள்ளார்கள். ஆனால், மற்றவர்களாக இருந்தால் அவர்களுடன் நடனமாட நடனக் கலைஞர்களையும் கேட்டிருப்பார்கள். தற்போது ஒரு படத்தின் பாடலில் 2000 பேர் நடனமாடுகிறார்களாம்.
பல படங்களின் விழாவுக்கு நடிகர், நடிகைகள் வருவதில்லை. இந்த விழாவுக்கு ஹீரோ, ஹீரோயின் வந்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்..” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “நான் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்றுதான் சினிமா துறைக்கு வந்தேன். ஆனால் இயக்குநராகிவிட்டேன். நம் உணர்வுகளைத் தொடுவது மாதிரியான பாடல்கள் தற்போது வருவதில்லை. தற்போது படம் வெளியான முதல் நாள் தியேட்டர் ஹவுஸ்புல் ஆகி விட்டால் படம் வெற்றி என்கிறார்கள். 3-வது நாளிலேயே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்.
திரைத் துறையை தற்போது காப்பாற்றி கொண்டிருப்பது இசைதான். இசை இல்லாமல் தமிழ் சமுதாயம் இல்லை. இசை இல்லாமல் தமிழன் வாழவே முடியாது. அந்த வரிசையில் 100 படங்களுக்கு இசையமைத்தது சாதாரண விசயம் அல்ல. இயக்குநர் சுஜித்துக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும்..” என்று வாழ்த்தினார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது, “எனக்கு வாய்ப்பளித்த இந்தப் படக் குழுவுக்கு எனது நன்றி. விஜய் படத்துக்கு வாய்ப்பளித்த பேரரசுவுக்கு நன்றி. முதல் படம் வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டியராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோருக்கும் நன்றி.
என்னுடைய காட்பாதர் என் அப்பாதான். எனக்கு மியூசிக் பத்தி ஒண்ணுமே தெரியாது. எங்கள் குடும்பத்தை பார்த்து, பார்த்து கற்று இப்போது 100-வது படத்தில் வந்து நிற்கிறேன்.
எனக்கு படிப்பு வராது. வரலை. அப்போது “அடுத்து என்ன செய்ய போகிறாய்?” என்று அப்பா கேட்டபோது கீ போர்ட் வாங்கித் தர கேட்டேன். வாங்கித் தந்தார். அதை வைத்து இசையைக் கற்றுக் கொள்ளத் துவங்கிதான் நானும் இசையமைப்பாளரானேன். கடைசியில், என் அப்பாவுக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்து விட்டேன் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் இருக்கும் வானொலி பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடியது எனக்கு மிகப் பெரிய சந்தோசமாக இருக்கிறது. இந்த ‘பிரியமுடன் ப்ரியா’ படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்..” என்றார்.
‘தேனிசைத் தென்றல்’ தேவா பேசுகையில், “இந்த படத்தில் வானொலி பாடலை ஸ்ரீகாந்த் இசையமைத்தது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் 100 படங்களுக்கு இசையமைத்தற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கே.ராஜன்தான். ஸ்ரீகாந்த், கே.ராஜனை மறக்க கூடாது. அவர்தான் நமக்கு விளக்கேற்றி வைத்த தெய்வம். ராஜன் பேசுவது சண்டை போடுவது போலிருக்கும். ஆனால், அது நியாயமாக இருக்கும். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்..” என்றார்.
இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, “நாங்கள் இசையமைப்பாளர் ஆனதற்கு காரணம் என் அம்மாதான். இளையராஜா ஆர்மோனியத்தை தொடுவதற்கு முன்னரே, பேனாவால் பாடல் எழுதி மெட்டு போட சொன்னேன். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற நாடகத்துக்கு இசையமைக்கும்போது, என் காதலுக்காக பின்னணி இசை வாசித்தவர் இளையராஜா.
ஸ்ரீகாந்த் தேவா 100 படங்களை முடித்துவிட்டு, அடுத்து 101-வது படத்தையும் தொடர வேண்டும். இந்தப் படத்தில் வாணி ஜெயராம் பாடியிருக்கும் பாடலைக் கேட்டு மனம் ஏதோ செய்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த பாடல்கள் எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும்..” என்று வாழ்த்தினார்.