full screen background image

ஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..!

ஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..!

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து, நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது’.

டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது பத்து வயது மகள் நேஹா இருவருமே தந்தை மகளாக நடித்துள்ளனர்.  இவர்கள் தவிர,  நடிகர் பாலாசிங்  மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்..  மேலும்  திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் சின்னத்திரை அனுபவம் கொண்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

#PayanangalThodarkirathu (6) 

விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரசாந்த் பிரணவ் என்பவர் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன்  இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளார்.

படத்தில் இரண்டு பாடல்களை கவிஞர்கள் தாமரை மற்றும் பழனிபாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். இது தவிர, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தலைவாரிப் பூச்சூடி’ என்கிற பாடலையும், இந்த படத்தில் சூழலுக்குத் தகுந்தவாறு இணைத்துள்ளனர்.

தந்தை, மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்களான ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணந்தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

#PayanangalThodarkirathu (4)

இயக்குநர் அபிலாஷ் தற்போது கேரளாவில் வசிப்பவர்தான். ஆனால் அவர் வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில்தான்.

2008-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்த காலகட்டத்தில் அபிலாஷ், சினிமாவிற்கு முயற்சி செய்து கொண்டே அனிமேஷன் தொழில் நுட்ப பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 

அந்தச் சமயத்தில் தன்னிடம் படித்த இலங்கை மாணவர்கள் பலரும் சொன்ன அவர்களுடைய துயரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கேட்டு ரொம்பவே மனம் வருந்தியிருக்கிறார் அபிலாஷ். 

அவர்களது துயர அனுபவங்களை உலகத்தினர் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈழத்தை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க எண்ணினார் அபிலாஷ்.

இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக் கொடி காட்டினாலும், வியாபார காரணங்களால் இப்படத்தைத் தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை. 

#PayanangalThodarkirathu (3)

கால ஓட்டத்தில் வேறு படங்களுக்கு அபிலாஷ் முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், இந்த படத்தின் கதையைக் கேட்டு பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இந்தப் படத்தில் நடிப்பதுடன் தானே தயாரிக்கவும் முன் வந்திருக்கிறார். 

மிக அழகாக, தரமாக  இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நடத்தி முடித்துவிட்டார்கள்.. சில காரணங்களால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் அபிலாஷ், “போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.

#PayanangalThodarkirathu (4) 

அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள்  பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் இந்த இருவரும். இந்தச் சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை இந்தப் படம் அழகாக சொல்லியிருக்கிறது…” என்றார்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தை இங்கே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இயக்குநர் அபிலாஷும், தயாரிப்பாளர் ராமச்சந்திரனும்.

Our Score