full screen background image

கீனோ – சினிமா விமர்சனம்

கீனோ – சினிமா விமர்சனம்

இதுவரை உலக திரைப்படங்களில் சொல்லப்படாத கதைக் களத்தில் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் ‘கீனோ’.

இத்திரைப்படத்தில் மகாதாரா பகவத் மாஸ்டர் கந்தர்வா (அறிமுகம்), ரேணுகா சதீஷ் (அறிமுகம்), கண்ணதாசன், ராஜேஷ், கோபி ஷெட்டி, இவர்களோடு பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மகாதாரா பகவத், தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படப் பதனிடுதல் (Film Processing &DI) பிரிவில் முதல் மாணவராக தமிழ்நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை டாக்டர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர்.

ஒளிப்பதிவு – ஆலிவர் டென்னி, படத் தொகுப்பு – கிருத்திகா காந்தி, எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் – சிவம், பத்திரிக்கை தொடர்பு – பெருதுளசி பழனிவேல். இணை தயாரிப்பு – மகாதரா பகவத், ஆர்.கே. திவாகர், தயாரிப்பு – கிருத்திகா காந்தி. எழுத்து, இசை & இயக்கம் – ஆர்.கே.திவாகர்.

இந்தத் திரைப்படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கி இருக்கும் ஆர்.கே.திவாகர், தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குதல் துறையில் பயின்று சிறந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று ஏவி.எம். மெமோரியல் விருது மற்றும் தங்கப் பதக்கமும் பெற்றவர்.

இவர் இயக்குநர் கதிரிடம் ‘காதல் வைரஸ்’ படத்தில் உதவி இயக்குநராகவும், இயக்குநர் மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’, ‘நந்தலாலா’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி கிருத்திகா காந்தி தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படத் தொகுப்பு துறையில் பயின்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தமிழக அரசின் திரைப்பட விருது பிரிவில் சிறந்த படத் தொகுப்பாளருக்கான மாணவ விருதை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர். இவர் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பேத்தியாவார். இவர் தமிழ் திரை உலகின் முதல் பெண் படத் தொகுப்பாளர் என்ற சிறப்புக்குரியவர்.

இது ஒரு சைக்காலஜி திரில்லர் திரைப்படம். இதுவரை நாவல்களிலோ திரைப்படங்களிலும் சொல்லப்படாத கதை கருவும் ‘கீனோ’ என்ற கதாபாத்திரமும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.

யாருமே இல்லாத இடத்தில் யாரோ ஒருவர் தன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பதாக நினைப்பதும் தன்னை கவனச் சிதறல் செய்ய வைத்து தன்னை துன்புறுத்துவதாகவும் நினைத்துக் கொள்ளும் ஒருவிதமான மன நோய்க்கு பெயர் ‘கீனோபோபியோ’. இதுதான் இந்த படத்தின் கதை கரு.

ஹூண்டாய் கார் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வரும் மகாதாராவின் மனைவி ரேணு. மகன் சிவா சுகந்த்.

மகாதாராவின் மனைவி கையில் படமே இல்லை என்றாலும் ஒரு வீடு சொந்தமாக வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பொழுது இருந்து வீடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மகன் சிவா பள்ளி மாணவன் ஆனால் அவனுக்குள் இப்போது ஒரு பிரச்சனை இருக்கிறது

அவன் எங்கே சென்றாலும் தனியாக ஒரு வெற்றிடத்தைப் பார்க்கும் பொழுது திடீரென்று அதே இடத்தில் ஒரு உருவம் தலையில் முகமூடி அணிந்து கொண்டு நின்றபடி “நான்தான் கினோ” என்கிறது. அந்த கீனோவை பார்த்து தரன் என்ற சிவா மிகவும் பயப்படுகிறான்.

சிவா எங்கு சென்றாலும் பின் தொடர்கிறான் கீனோ. பள்ளிக்கு சென்றாலும் வருகிறான். இதனால் மிகவும் டிஸ்டர்ப்பான ஒரு மனநிலையில் இருக்கிறான் சிவா.

இந்த நேரத்தில் சிவாவின் அம்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்துவிட அவர் ஆஸ்திரேலியா சென்று விடுகிறார்

இப்போது வீட்டில் அப்பா மகாதாராவும் மகன் சிவாவும் மட்டுமே!

இந்த நேரத்தில் திடீரென்று ஷோ ரூமில் ஏற்படும் ஒரு சின்ன குழப்பத்தில் மகாதாராவின் வேலை பறி போகிறது இதனால் அவர் பெரிய வீட்டில் குடியிருக்க முடியாமல் தன்னுடைய நண்பரின் வீட்டுக்கு குடியேறுகிறார் மகனுடன்.

அந்த புதிய வீட்டில் இருக்கும்போது கீனோவின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு போகிறது.

இப்போது வேறு வழியில்லாமல் மகனுக்கு மன நல சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் மகாதாரா.

அடுத்து என்ன நடக்கிறது? மனநிலை சிகிச்சை பெற்று சரி ஆனானா? அல்லது அந்த கீனோவை துரத்தி அடித்தார்களா? உண்மையில் அந்த ‘கீனோ’ என்பது யார்?..

இந்த கேள்விகளுக்கான விடைதான் இந்த ‘கீனோ என்ற திரைப்படம்.

அப்பாவாக நடித்திருக்கும் மகாதாரா ஒரு அப்பாவித்தனமான அப்பா கேரக்டரை செய்திருக்கிறார். தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

அதேபோல் அவருடைய மனைவியாக நடித்தவர்… இப்படி ஒரு கிறுக்குத்தனமான மனைவி எங்காவது இருப்பாரா என்பது சந்தேகம். அப்படி ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்.!

தன்னுடைய பேச்சிலேயே நம்மை கிண்டலாக சிரிக்க வைத்திருக்கிறார் ரேணு.

இன்னொரு பக்கம் மகனுக்கும், கீனோவுக்குமான மன தொடர்பு. அதுதான் படத்தின் மைய முடிச்சு.

ஒவ்வொரு முறையும் கினோவை பார்க்கும்பொழுது சட்டென்று தன்னுடைய தலையை திருப்பிக் கொண்டு பயப்படும் அந்த கணத்தில் சிவாவின் நடிப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது.

அவர் மட்டுமே இந்தப் படத்தை தனித்து தாங்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனாலும் அவருடைய பயமுறுத்துதல், பயப்படுதல் இன்னமும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில், படத்தின் நடிப்பவர்களை பயப்படுத்துவதை விட படம் பார்ப்பவர்களை பயமுறுத்தினால்தான் அந்தப் படம் ஒரு திரில்லர் படம் என்று அர்த்தம்.

இந்தப் படத்தில் அது  ஒட்டு மொத்தமாக மிஸ்ஸிங் என்பது வருத்தமான ஒரு விஷயம்.

படத்தில் நடித்திருக்கும் ஏனைய கேரக்டர்களும் ஓரளவுக்கு இயக்குநர் சொன்னதை அப்படியே செய்து காண்பித்துவிட்டு போயிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு படத்தில் நிச்சயம் பாராட்டுக்குரியதுதான் என்றாலும் ரொம்ப சின்ன பட்ஜெட் படத்திற்கு எந்த அளவுக்கு ஒளிப்பதிவை கொஞ்சம் தரமாக கொடுக்க முடியுமா அதைத்தான் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் இசை என்ற பெயரில் இசையமைப்பாளர் செய்திருக்கும் கொடுமை நிச்சயம் தாங்க முடியவில்லை. படத்தின் கடைசி டைட்டில் ஓடுகின்ற வரையில் காதை ரிப்பேர் செய்யும் அளவுக்கு இசையை வலிந்து அடித்து ஆடி இருக்கிறார்.

படத்தின் எடிட்டர் கொஞ்சம் மனம் வைத்து எடிட்டிங் டேபிளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட காட்சிகளை இன்னமும் கொஞ்சம் நெருக்கி, நறுக்கித் தந்திருந்தால் இந்தப் படம் ஒரு கம்ப்ளீட் திரில்லர் திரைப்படம் என்று ஒரு பெயராவது எடுத்திருக்கும்.

படத்தின் இயக்குநர் திவாகர் இந்த படத்தின் கதையை திரைக்கதை வசனம் எழுதி பாடல்கள் எழுதி, இசை அமைத்து படத்திற்கு ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து படத்தை இயக்கமும் செய்திருக்கிறார்.

இத்தனை பொறுப்புகளையும் தான் ஒருவனை சுமந்ததால் இயக்கம் என்பதில் மட்டும் நிறையவே குறைகளை சேர்த்து வைத்திருக்கிறார்.

அந்த போபியோ என்பதை சொல்வதற்காக மனநல மருத்துவர் வந்து சொல்கின்ற அந்த காட்சிகள் முழுவதையும் பின்னணி இசை சேர்த்து அடித்துப் போட்டதில் நமக்கே டயர்ட் ஆகிவிட்டது. ஒரு விஷயத்தில் தீர்வு சொல்லுகின்றவிதம் நிச்சயம் இதுவல்ல…!

இது தியேட்டரில் படம் பார்க்க வரும்  ரசிகர்களுக்கு நிச்சயமாக பெரும் தொந்தரவை கொடுக்கும்.

தன்னால் முடிந்த அளவுக்கான இயக்கத்தை மட்டுமே அவர் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் நம் மனதை தொடுகின்ற அளவுக்கு நடிக்காமல் போனது நமது துரதிருஷ்டம்.

இது ஒரு திரில்லர் படம்… சஸ்பென்ஸ் படம்… பேய் படம்… அமானுஷ்ய படம்.. சைக்காலஜி திரில்லர் படம்….. என்றெல்லாம் பல்வேறு வகையில் நாம் சொல்ல வேண்டிய இந்த திரைப்படத்தை அப்படி சொல்லாமல் வைத்துவிட்டது நிச்சயம் இயக்குநரின் தவறுதான்.

அந்த வகையிலான ஒரு இயக்கத்தை இயக்குனர் செய்திருப்பதால் இந்த கண்டனங்கள் மொத்தத்தையும் இயக்குநர் மட்டுமே தாங்கிக் கொள்ள வேண்டும்.

RATING – 2.5 / 5

Our Score