full screen background image

நிழற்குடை – சினிமா விமர்சனம்

நிழற்குடை – சினிமா விமர்சனம்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நிழற்குடை’. 

தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – தர்ஷன் பிலிம்ஸ் – ஜோதி சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் – சிவா ஆறுமுகம், வசனம் – ஹிமேஷ் பாலா, இசை – நரேன் பாலகுமார், ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ், கலை இயக்குநர் – விஜய் ஆனந்த், படத் தொகுப்பு – ரோலக்ஸ், பத்திரிக்கை தொடர்பு – A.ஜான்.

இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும், பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள். அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன் மர்ம முடிச்சுகளுடன் ஒரு திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

மழையோ, வெயிலோ எது இருந்தாலும் வெளியில் சென்றாக வேண்டிய கட்டாயம் வந்தால் நம் கையில் வைத்திருப்பது குடை. வெயிலிலும், மழையிலும் நம்மை காப்பாற்றும் அந்தக் குடையைபோல… ஒரு குழந்தையை காப்பாற்றும் ஒரு அன்புத் தாயின் அரவணைப்புதான் இந்த நிழற்குடை’ திரைப்படம்.

விஜித்-கண்மணி இருவரும் காதல் தம்பதிகள். இதில் விஜித் இந்து. கண்மணி கிறிஸ்தவர். இருவரின் பெற்றோர்களும் இவருடைய காதல் திருமணத்தை ஏற்காததால், இவர்கள் இருவருமே தத்தமது பெற்றோர்களுடன் இப்போதுவரையில் பேசாமல் இருக்கிறார்கள். இப்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது பெண் குழந்தைக்கு இரண்டரை வயது ஆகிறது.

விஜித் ஐடி கம்பெனியிலும், கண்மணி ஒரு ஐடி கம்பெனியிலும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்குமே ஒரு மிகப் பெரிய கனவு உண்டு. அது என்னவெனில் அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என்பதுதான். அதுவரையிலான காலகட்டத்தில் இங்கே இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தை நிகாரிக்காவை பார்த்துக் கொள்வதற்காக ஒரு பெண்ணை வேலைக்கு வைக்கிறார்கள் தம்பதிகள். அந்தப் பெண் இவர்கள் இருவரும் அலுவலகம் சென்றவுடன் தன்னுடைய காதலனை வீட்டுக்கு வரவழைத்து வீட்டில் இருக்கும் சரக்கை காதலனுக்கு ஊற்றி கொடுத்து, கூடவே தன்னையும் தானமாக கொடுத்து அந்த வீட்டில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த விஷயம் கொஞ்சம் லேட்டாகக விஜித், கண்மணிக்கு தெரிய வர உடனேயே அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்குகிறார்கள். இப்போது வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால், கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் ஒவ்வொரு நாள் லீவு போட்டு வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம்.

இந்த நேரத்தில் குழந்தையின் பிறந்த நாளுக்காக அருகில் இருக்கும் அக்ஷயா முதியோர் இல்லத்திற்கு சென்று கொண்டாடுகிறார்கள் விஜித்தும், கண்மணியும்! அந்த இல்லத்தில் முதியவர்கள் அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்தமான பெண்மணியாக இருக்கிறார் ஜோதி என்ற தேவயானி.

ஈழத்தில் நடந்த கடைசி போரில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையை இழந்த ஜோதி, தமிழகம் வந்து இந்த முதியோர் காப்பகத்தில் இருக்கும் பெரியவர்களை பார்த்துக் கொள்வதை ஒரு சேவையாக செய்து கொண்டிருக்கிறார்.

அந்த விழாவில் குழந்தை நிகாரிகா ஜோதியுடன் மிகவும் ஒட்டிக் கொண்டதைப் பார்த்த கண்மணியும், விஜித்தும் ஜோதியைத் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்து குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார்கள்.

ஜோதிக்கும், குழந்தை நிகாரிகாவும் மிகவும் படித்துப் போய், பாசத்தை கொட்டி பழகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று நிகாரிகாவின் பெற்றோர்களுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்த விடுகிறது.

தேவயானிக்கோ இருப்புக் கொள்ளவில்லை. குழந்தை நிகாரிகாவை விட்டுப் பிரியவும் மனசில்லை. இந்த நேரத்தில் தம்பதியினர் தங்களது குடியிருப்பில் நடத்தும் பிரிவுபசார விருந்தின்போது குழந்தை நிகாரிகா காணாமல் போய்விடுகிறாள்.

அந்தக் குழந்தையை தேடி அனைவரும் அலைகிறார்கள். கடைசியாக போலீசிலும் புகார் கொடுக்கிறார்கள். போலீஸ் குழந்தையை யார் கடத்தி இருப்பார்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டு ஒவ்வொருவரிடமும் விசாரிக்க… யாரிடமும் குழந்தை இல்லை.

அப்படியானால் அந்தக் குழந்தை எங்கேதான் சென்றது?.. குழந்தையை யார்தான் கடத்தி வைத்தார்கள்.. கடைசியில் குழந்தையை மீட்டர்களா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஜோதிம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி படம் முழுவதையும் தாங்கி இருக்கிறார். அவருடைய செண்டிமெண்ட் நடிப்பும், அழுகையும், பரிதவிப்பும், குழந்தைகள் மீதான பாசமும்.. பெற்றோர்களுக்கு அவர் சொல்லும் அறிவுரையும்தான் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படமாக மாற்றி இருக்கிறது.

தேவயானியின் மிகச் சிறந்த அனுபவ நடிப்பு இந்தப் படத்திற்கு ஒரு மிகப் பெரிய பலம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறார் தேவயானி.

அப்பாவாக நடித்திருக்கும் விஜித் ஒரு பக்கம் அமெரிக்க ஆசையுடனும், இன்னொரு பக்கம் மனைவி, மகள் மீதான பாசத்திலும் கற்றுண்டு கிடப்பவர் கடைசியாக குழந்தை காணாமல் போகின்ற பொழுது அப்படி பரிதவித்து போய் தேடுகிறார். அலைகிறார்… கடைசியாக உண்மை தெரிந்த அவர் மனம் மாறும் கட்டம்தான் படத்தின் ஒரு முக்கிய டர்னிங் பாயிண்டு. அதைக்கூட மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார் விஜித்.

சீரியல் நடிகையான கண்மணி இந்தப் படத்தில் இந்த குழந்தையின் அம்மாவாக நடித்திருக்கிறார் அவரால் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கான ஒரு சிறந்த நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.

மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, தம்பியாக நடித்தவர் மற்றும் படத்தில் மற்றைய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இயக்குநரின் மிகச் சிறப்பான ஒரு இயக்கத்தினால் இந்தப் படத்தில் நடித்த யாருமே சோடை போகவில்லை என்று உறுதியாக சொல்லலாம்.

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு ஒரு மிகப் பெரிய பலம். முதல் காட்சியிலிருந்து கடைசிவரையிலும் குழந்தைகளையும், அனைத்து நடிகர்களையும் மிக அழகாக காட்டியிருக்கிறார். சில பல காட்சிகளில் திரைக்கதையின் வேகத்தை கூட்டுவதற்காக அவர் செய்திருக்கின்ற ஒரு சின்ன சின்ன நகாசு வேலைகள்கூட ரசிக்கும்படியாக இருக்கிறது.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பாடல்களைவிடவும் பின்னணி இசையில் மிக அழகான ஒரு இசையமைப்பை தந்திருக்கிறார். அதிலும் விஜித் தன்னுடைய அலுவலக அறையில் பிஸினஸ் பேசிக் கொண்டே அவ்வப்பொழுது வந்து ஜன்னலை எட்டிப் பார்த்து குழந்தை எப்படி இருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டே இருக்கின்ற அந்த தருணத்தில் ஒலிக்கும் பின்னணி இசையும், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அந்த இளைஞனை காட்டுகின்றபொழுதும், கடத்தல் விசாரணை தொடர்பான காட்சிகளின் பின்னணி இசையும் அபாரம் என்றே சொல்லலாம்.

இப்போதைய நவநாகரீக உலகத்தில் பணத்தைத் தேடி அலைகின்ற ஒரு வாழ்க்கைச் சூழலில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்ல குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் வேலைக்குக்கூட இப்பொழுது தனியாக வேலை வாய்ப்பகமெல்லாம் வைத்து விட்டார்கள். அந்த அளவுக்கு இப்போது அதற்கு தேவை இருக்கிறது.

குழந்தைகள் பெற்றோர்களிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றுதான். அந்த அன்பினை யாரோ ஒரு பெண்மணி வந்து கொடுத்துதான் அந்தக் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்கின்ற நிலைமை இருந்தால் பின்பு பெற்றோர்கள் எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது.

இதையும் கடைசியாக அந்த பெற்றோர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். குழந்தைகளின் வாழ்க்கையைவிடவும் பணம் சம்பாதிப்பது என்பது முக்கிய விஷயமே அல்ல.. குழந்தையை வளர்க்கின்ற அளவுக்கு பணம் கையில் இருந்தாலே போதும். ஆனால் வாழ்க்கைச் சூழலில் நம்மைவிடவும் பணம் சம்பாதித்து அந்தளவுக்கு குழந்தையையும் வளர்க்க வேண்டும் என்று நினைப்பதே ஒரு முட்டாள்தனம்தான். அதையும் இந்தப் படத்தில் அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தவர்கள் பெற்றோர்களின் ஆசிர்வாதம் இல்லாமல் நிச்சயமாக நீடுழி வாழ முடியாது. சந்தோஷமாக வாழ முடியாது. அந்த பெற்றோர்களின் மனதை கரைத்து அவர்களுடன் இணைந்து இயல்பாகி வழக்கம்போல் அம்மாவுக்கு பிள்ளையாகவும் அப்பாவும் மகனாகவும் இருந்து தங்களுடைய குழந்தையும் அவருடைய அரவணைப்பில் வளர்த்தெடுப்பதுதான் மிகச் சிறந்த பண்பு. அதுதான் குடும்பம் என்கின்ற ஒரு அமைப்பின் முக்கிய நோக்கம்.

அந்த நோக்கம் மிகவும் உயர்வானது. அதை எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாரும் முறித்துக் கொள்ளக் கூடாது என்கின்ற ஒரு நல்லதொரு விஷயத்தை இந்த திரைப்படத்தின் மூலமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதற்காகவே அந்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

குடும்பத்துடன் பார்க்கும்படியாக ஒரு திரைப்படமும் வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட அப்படி ஒரு திரைப்படங்கள் வந்தால் தேடிப் பார்த்துவிட வேண்டும் என்று நினைப்பதுதான் ஒரு சிறந்த சினிமா ரசிகனின் செயலாக இருக்க முடியும்.

அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படியாக அமைந்திருக்கும் திரைப்படம்தான் இந்த ‘நிழற்குடை’ திரைப்படம்.

அவசியம் தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.

RATING : 3.5 / 5

Our Score