full screen background image

சென்னையில் கார்னிவெல் சினிமாஸின் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டன..! 

சென்னையில் கார்னிவெல் சினிமாஸின் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டன..! 

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி என்பவரால் 2014-ம் ஆண்டு ‘கார்னிவெல் சினிமாஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. 

அதுமுதல் இதுவரை 104 நகரங்களில் 400 முதல் 500 ஸ்கிரீன்களை நிறுவி, பல மல்டி பிளக்ஸ் திரையரங்கங்களை, நல்ல முறையில் நிர்வாகித்து வரும்  ‘கார்னிவெல் சினிமாஸ்’ நிறுவனம், தற்போது சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள  ஈ.வி.பி. சிட்டியின்  ஒரே வளாகத்தில் 6 திரையரங்குகளை மிகப் பிரமாண்டமாக அமைத்துள்ளது.

EVP – கார்னிவெல் சினிமாஸ் எனும் பெயரில் திகழும் இந்த மல்டி பிளக்ஸில் உள்ள 6 திரையரங்குகளில் ஸ்கிரீன்-1-ல் 213 இருக்கைகளும், ஸ்கிரீன்-2 மற்றும் 5-ல் 323 இருக்கைகளும், ஸ்கிரீன் 3 & 4-ல் 221 இருக்கைகளும், ஸ்கிரீன்-6-ல் 214 இருக்கைகளுமாக  இந்த மல்டி பிளக்ஸின் 6 திரையரங்குகளில் மட்டும் கிட்டத்தட்ட 1500 இருக்கை வசதிகள் உள்ளன.

அதே மாதிரி இங்குள்ள 1 திரையரங்கம் 4-கே  புரொஜெக்சன் வசதியையும், மீதி 5 திரையரங்குகள் 2 -கே புரொஜெக்சன் வசதியும் கொண்டவை.

மேலும், இத்திரையரங்க வளாகத்தில் தமிழக திரையரங்கங்களில் இதுவரை இல்லாத வசதியாக மகளிருக்கென பிரத்யேகமாக பிங்க் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இத்தனை வசதிகள், இத்தனை பிரம்மாண்டங்கள் இருந்தும் தமிழக அரசு நிர்ணயித்த டிககெட் கட்டணமும், அரசு அறிவுரைத்த மாதிரி ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வார நாட்களில் 4 காட்சிகளும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 காட்சிகளும் திரையிடப்படவுள்ளது.

IMG_8332

சென்னையில் EVP சிட்டியில் அமைந்திருக்கும்  இந்த ‘EVP – கார்னிவெல் சினிமாஸ்’ தியேட்டர்களின் திறப்பு விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது.

இந்தத் திறப்பு விழாவில் EVP குரூப் நிர்வாகி  ஈ.வி.பெருமாள்சாமி, அவரது மகனும் ஈவி.பி குரூப் எம்.டி.யுமான சந்தோஷ் ரெட்டி, கார்னிவெல் நிறுவனத்தின் எம்.டி.   P.V.சுனில், கார்னிவெல் நிறுவனத்தின் சென்னை நிர்வாகி  ஜுனித் உள்ளிட்டோர் தங்கள் குடும்ப சகிதமாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 

அவர்களுடன் பிரபல படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், விநியோகஸ்தர் அருள்பதி, இயக்குநர்கள் மிஷ்கின், ராம், பாபு கணேஷ், நட்சத்திரங்கள் வைபவ், சவுந்திரராஜன், ‘பேரன்பு’ சாதனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

IMG_8415

அதனைத் தொடர்ந்து, இந்த  ‘EVP-கார்னிவெல் சினிமாஸ் ஸ்கிரீன்-2’-வின் பிரம்மாண்ட அகண்ட திரையில், காண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும் டால்பி எஃபெக்ட் படமும், ‘விஸ்வாசம்’ படத்தில் இருந்து சில காட்சிகளும் விருந்தினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டு,  இத்திரையில் ‘பேரன்பு’ திரைப்படமும் முதன் முதலாக திரையிடப்பட்டது.

முன்னதாக. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசிய இயக்குநர் மிஷ்கின், “கடவுளுக்கு அப்புறம், நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரைகளைத்தான். எனவே, எல்லோரும் டி.வியில் சீரியல் பாருங்கள். இது மாதிரி பெரிய ஸ்கிரீனில் சினிமா பார்க்க வாருங்கள்.. பைரஸியை திருட்டு வி.சி.டி.யை திரும்பிக் கூடப் பார்க்காதீர்கள்…” என்றார்.

இயக்குநர் ராம் பேசுகையில், “எனது  ‘பேரன்பு’ திரைப்படம் இந்தத் திரையரங்கத்தில் முதல் சினிமாவாக திரையிடப்படுவதில் எனக்கு நிரம்ப சந்தோஷம்.. பெருமையாகவும் இருக்கிறது..” என்றார்.

IMG_2117

அதன் பின்பு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கார்னிவெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் P.V.சுனில், நிறுவனத்தின் சென்னை நிர்வாகி  ஜுனித் ஆகியோர் பேசினார்கள்.

அப்போது அவர்கள் பேசும்போது, “2012-ம் ஆண்டு கொச்சின் விமான நிலையம் அருகே முதன்முதலாக. எங்களது முதலாளியான டாக்டர்.ஸ்ரீகாந்த் பாஷி ஒரு திரையரங்கை உருவாக்கினார். இன்று சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் கிட்டத்தட்ட  500 ஸ்கிரீன்கள் உள்ளன.

சென்னையில் எங்களுடைய நிறுவனத்தின் சார்பில் உருவாகியிருக்கும் முதல் மல்டி பிளக்ஸ் தியேட்டர் இதுதான். இன்னும்  2 வருடங்களில் 100 தியேட்டர்களை தமிழகத்தில் கார்னிவெல் உருவாக்கும். உலகளவில் 1000 திரையரங்குகள் திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழில் திரைப்படத் தயாரிப்பிலும், விநியோகத்திலும் நேரடியாகவும் இறங்க உள்ளோம். 

எங்களுடன் E.V.P. நிறுவனத்தின் M.D.யான சந்தோஷூம் இணைந்து இந்த  E.V.P. CARNIVAL மல்டி பிளக்ஸ் திரையரங்கத்தை உருவாக்கியதும் நாங்கள் இணைந்ததிலும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஆவடி மற்றும், மதுராந்தகம் அருகில் 6 ஸ்கிரீன் மல்டி பிளக்ஸ் தியேட்டர் உருவாக்க உள்ளோம். 

மேலும், சென்னை சிட்டிக்குள் புதிய மால்கள் கட்டப்பட்டால் கார்னிவெல் சினிமாஸ் அங்கும் கால் பதிக்கும். அதுவரை இது மாதிரி சிட்டி லிமிட்டிற்கு வெளியே உருவாகியுள்ள தியேட்டருக்கு எங்கள் நிறுவனம் சார்பில் குறைந்தபட்சம் இரவு காட்சிகள் முடிந்தபின் போக்குவரத்து வசதியும் தர தீர்மானித்துள்ளோம். மற்றபடி, பாப்கார்ன் முதல் பார்க்கிங்வரை, மற்ற மால்களைவிட மலிவாக தர பேசி வருகிறோம்…” என்றனர்.

 

Our Score