இந்தியாவில் இதற்கு முன் இப்படியொரு படம் வந்ததில்லையே என்று அகில இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடி தீர்த்த படம் ‘மகாதீரா’. அதன் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி அந்தப் படம் ரிலீஸான நாளில் இருந்தே இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவராக உருமாறிவிட்டார்.
அதற்கடுத்து ராஜமெளலி இயக்கிய ‘நான் ஈ’ திரைப்படம் அவருடைய புகழை இன்னமும் ஒரு படி மேலே கொண்டு போனது. இப்போது அவருடைய இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் ‘பாகுபலி’ என்னும் திரைப்படம் அவரை ஹாலிவுட் லெவலுக்கு கொண்டு போகக் காத்திருக்கிறது என்பதை ‘பாகுபலி’யின் டிரெயிலரே சொல்கிறது..!
அதிகமான பொருட்செலவில் உச்ச நடிகர்களை வைத்து பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோ பிரபாஸ் நாயகனாக ‘ஷிவுடு’, ‘பாகுபாலி’ என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
தெலுங்குலகின் இன்னொரு ஹீரோவான ராணா டகுபதி ‘பல்லலாதேவா’ என்கிற வில்லனாக களம் இறங்கியிருக்கிறார். ‘தேவசேனா’வாக அனுஷ்காவும், ‘அவந்திகா’வாக தமன்னாவும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் சத்யராஜ், நாசர், ‘நான் ஈ’ சுதீப், ரம்யா கிருஷ்ணன், அதிவி சேஷ், ராகேஷ் வெர்ரே, மேகா ராமகிருஷ்ணா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு கே.கே.செந்தில்குமார். கலை இயக்கம் சாபு சிரில். பீட்டர் ஹெயின் சண்டை பயிற்சியை மேற்கொள்கிறார். கீரவாணி இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்களையும் தமிழ்ப் பதிப்பிற்கு வசனங்களையும் எழுதியிருக்கிறார் பாடலாசிரியரும், கவிஞருமான மதன் கார்க்கி.
வி.விஜயேந்திர பிரசாத்தின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. அர்கா பிலிம்ஸ் சார்பில் படத்தை ஷோபு யர்லகடாவும், பிரசாத் தேவநேனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தமிழ் பதிப்பினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தேனாண்டாள் பிலிம்ஸ் உடன் இணைந்து வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. படத்தின் டிரெயிலரை நடிகர் சூர்யா வெளியிட்டு பேசி படக் குழுவினரை வாழ்த்தினார்.
படத்தில் முன்னணி நடிகர், நடிகைகளுக்காக தனி வீடியோவை வெளியிட்டார்கள். பிரமாண்டத்தைவிடவும் பின்னணி இசையும், எடிட்டிங்கும் கலக்கியிருந்தன. ஒவ்வொருவரின் அறிமுக காட்சியும் படத்தை எங்கோ கொண்டு செல்லப் போவதை உணர்த்தியது.
படத்தின் டிரெயிலரை பார்த்தால் நிச்சயமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும் என்கிற எண்ணத்தை தோற்றுவித்துவிட்டது. ராஜமெளலியின் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 5 மொழிகளிலும் ரிலீஸாகவுள்ளது.
இந்தப் படம் இந்திய இயக்குநர்களில் முதன்மையானவர் ராஜமெளலி என்று உலக சினிமா இயக்குநர்கள் மத்தியில் பேசப்பட வைக்கவுள்ளது என்பது நிச்சயம்.
நிகழ்ச்சியில் நட்சத்திரங்களான அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், கதாசிரியர், இயக்குநர் ராஜமெளலி, ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.