full screen background image

கொச்சின் ஹனீபா குடும்பத்திற்கு ‘அம்மா’ நிதியுதவி…!

கொச்சின் ஹனீபா குடும்பத்திற்கு ‘அம்மா’ நிதியுதவி…!

மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று கொச்சியில் நடந்துள்ளது.

சமீபத்தில் சாலக்குடி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் இன்னசென்ட் ‘அம்மா’ அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த்தை இந்தப் பொதுக்குழு நிராகரித்துவிட்டதாம். இன்னசென்ட்டுதான் தலைவராக நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்ள, தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார் இன்னசென்ட்.

இந்தக் கூட்டத்தில் முதுமையில் இருக்கும் நலிவடைந்த மூத்தக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் ‘கைநீதம்’ திட்டத்தின் கீழ் பாபு நம்பூதிரி, நாராயணன் குட்டி உள்ளிட்ட நான்கு மூத்தக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்குவதற்கும் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் நிதியுதவி பெறும் மூத்தக் கலைஞர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளதாம்..

மேலும் மறைந்த நடிகர் கொச்சின் ஹனீபா குடும்பத்திற்கு தேவையான நிதியுதவியை ‘அம்மா’ அமைப்பு தொடர்ந்து வழங்கும் என்று கூறியுள்ளது. அத்தோடு கூடவே விபத்தில் சிக்கி தற்போது வெறும் உடலாகக் காட்சியளிக்கும் ‘காமெடி கிங்’ ஜெகதி ஸ்ரீகுமாரின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும், அவருக்குத் தேவையான தொடர்ச்சியான மருத்துவ உதவிகளைச் செய்யவும் ‘அம்மா’ அமைப்பு ஒத்துக் கொண்டுள்ளது.

இந்த மருத்துவ உதவித் திட்டங்கள் மற்றும் செயல்பாட்டுகளுக்காக மலையாள நடிகர் திலீப், 25 லட்சம் ரூபாய் நன்கொடையும் கொடுத்திருக்கிறாராம்..! தற்போது 464 உறுப்பினர்களுடன் இருக்கும் ‘அம்மா’ அமைப்பு தென்னிந்தியாவிலேயே சிறப்பான நடிகர் சங்கமாக இருந்து வருகிறது..!

கிட்டத்தட்ட 90 சதவிகித மலையாள நடிகர், நடிகைகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ‘குறைந்தபட்சம் 3 திரைப்படங்களிலாவது நடித்திருந்தால் மட்டுமே அவர்கள் சங்கத்தில் சேர்க்கப்படுவார்கள்’ என்ற புதிய விதியையும் நேற்றைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். சங்க உறுப்பினர் கட்டணத்தையும் 50000 ரூபாயில் இருந்து. ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியிருக்கிறார்கள்.

நடிகர் வினீத் சீனிவாசன், நடிகை ஆன் அகஸ்டின் இருவரும் தற்போது இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லையாம். அதனால் இனிமேல் இவர்களுக்கு அம்மா சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தரலாமா வேண்டாமா என்பது பற்றிய விஷயம் இப்போது சங்கத்தின் நிர்வாகக் குழுவின் பரிசீலனையில் உள்ளதாம்.. விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இதில் காமெடி என்னவெனில், இந்த இருவருமே இதுவரையில் சங்கத்தில் சேருவதற்காக விண்ணப்பிக்க்க்கூட இல்லையாம்..!

வழக்கம்போல இந்தாண்டும் நடிகர் சுரேஷ்கோபி, இந்தப் பொதுக்குழுவைப் புறக்கணித்துள்ளார்..!

Our Score