full screen background image

“விஷால் விரைவில் காணாமல் போய்விடுவார்..” – நடிகர் ராதாரவியின் பேச்சு..!

“விஷால் விரைவில் காணாமல் போய்விடுவார்..” – நடிகர் ராதாரவியின் பேச்சு..!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 15-ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியினர் மாவட்டவாரியாக நடிகர் சங்க உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி தலைமையிலான குழு நேற்று மதுரை வந்தது. 

அவருடன் சங்கத்தின் துணைத் தலைவர் காளை, செயற்குழு உறுப்பினர் நடிகை குயிலி, ‘பசி’ சத்யா உள்ளிட்ட குழுவினர் மதுரையில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். பின்னர் அவர்கள் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை சந்தித்து ஆசி பெற்றனர். 

radharavi-team

பின்பு நிருபர்களிடம் ராதாரவி பேசும்போது, “எங்கள் சங்கத்தில் 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். சந்தா செலுத்தாதது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்காக 500 உறுப்பினர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம்.

அந்த வகையில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள உறுப்பினர்களை சந்தித்தோம். அடுத்து, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட உறுப்பினர்களை சந்திக்க உள்ளோம். மதுரையில் 120 உறுப்பினர்கள் உள்ளனர். 

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணி நூறு சதவீத வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நடிகர் சங்கத்துக்கு பொருத்தமான தலைவர் சரத்குமார்தான். தற்போது தேர்தல் நடத்தாவிட்டால் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கும் நிலை உள்ளது. தேர்தல் குறித்து நடிகர் விஷால் உள்பட சிலர் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். அதை சட்டப்படி சந்திப்போம்.

சினிமா துறையில் எனக்கு 30 ஆண்டு கால அனுபவம் உள்ளது. நடிகர் சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். நடிகர் சங்க கட்டட இடிப்பு குறித்து பொதுக்குழுவில் பேசியதற்கேற்பவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, தற்போது அவர்கள் ஏன் இந்தப் பிரச்சினையை எழுப்புகிறார்கள் என்பது எங்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வோம். சங்கத்தில் ஊழல் நடக்கிறது என பொதுவாக கூறுகிறார்கள். குறிப்பிட்டு சொல்வதில்லை. அது பற்றி கேட்டால், நடிகர் விஷால் கோபப்படுகிறார். சங்கத்தில் முக்கிய முடிவு எடுக்க பொதுக் குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே அவரது கேள்விக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை.

விஷால் பேசுவதைப் பார்த்தால் அவர் சொந்தமாக பேசுவதுபோல தெரியவில்லை. யாரோ தூண்டிவிட்டு அவரை இப்படி பேச வைப்பதுபோல தெரிகிறது. அவர்களின் பின்னணியில் அரசியல் இருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது. இதற்காக விஷாலை அழைத்துப் பேசும் அளவுக்கும் அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அவர் விரைவிலேயே காணாமல் போய்விடுவார்…” என்றார் ராதாரவி.

சங்கப் பிரச்சினையையும் தாண்டி தனி மனிதத் தாக்குதலாக இது போய்க் கொண்டிருக்கிறது..! எங்கு போய் முடியுமோ..?

Our Score