full screen background image

“அவமரியாதையாக பேசுவதை ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும்” – நடிகர் நாசர் எச்சரிக்கை

“அவமரியாதையாக பேசுவதை ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும்” – நடிகர் நாசர் எச்சரிக்கை

‘தேர்தலில் வெற்றி பெற்றால் நடிகர்-நடிகைகளிடம் தினமும் நிறை-குறைகளை கேட்போம்’’ என்று விஷால் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலையொட்டி விஷால் அணியினரின் ஆதரவாளர்கள் கூட்டம் சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்தக் கூட்டத்தில் விஷால் பேசும்போது,  “நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது பதவிக்காக அல்ல. நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டோம். அதற்கு சரியான பதில் எதுவும் இதுவரை வரவில்லை. நடிகர் சங்க கட்டிடம் எங்கே என்றுதான் கேட்டோம். பத்திரத்தை கேட்கவில்லை. கட்டிடத்தை கேட்டால் பத்திரத்தை காட்டுகிறார்கள்.

எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில்  சரத்குமார், ராதாரவி ஆகிய இரண்டு பேர் மட்டுமே கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அது சரியல்ல என்று கோர்ட்டு கூறியிருக்கிறது. அதற்கான விளக்கமும் இதுவரை சொல்லப்படவில்லை. பூச்சி முருகன் பற்றி அவதூறாக பேசுகிறார்கள்.

சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு ஆதரவு தெரிவித்து இருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவர் எந்த தயாரிப்பாளரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதற்கெல்லாம் வருகிற 18-ம் தேதி இரவில் பதில் தெரிந்து விடும்.

நாங்கள் கேள்வி கேட்டால், ஆபாசமாக பேசுகிறார்கள். சாதி பிரச்சினையை எழுப்புகிறார்கள். என் மீது வழக்கு போடுகிறார்கள். திருப்பி நான் வழக்கு போட்டால் தாங்க மாட்டார்கள்.

தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் எங்கள் அணியினர் அனைவரும் தினமும் கூட்டம் நடத்தி, நடிகர்-நடிகைகளிடம் நிறை-குறைகளை கேட்போம்..’’ என்றார் விஷால்.

நாசர் பேசும்போது, ‘‘நாங்கள் தனி நபர் அல்ல. எங்களை பற்றி ராதாரவி அவமரியாதையாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களைப் பற்றி அவமரியாதையாக பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?…’’ என்றார்.

கூட்டத்தில் நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், உதயா, ராஜேஷ், ஜூனியர் பாலையா, நடிகை குட்டி பத்மினி ஆகியோரும் பேசினார்கள். 

Our Score