full screen background image

“படம் ஆரம்பித்த 20-வது நிமிடத்தில் கிளைமாக்ஸ்” – ‘கைதி’ கார்த்தி பேட்டி..!

“படம் ஆரம்பித்த 20-வது நிமிடத்தில் கிளைமாக்ஸ்” – ‘கைதி’ கார்த்தி பேட்டி..!

Dream Warrior Pictures சார்பில் தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு,  S.R.பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து  தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கைதி’.

இப்படத்தில் கார்த்தி, நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் C.S. இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு செய்துள்ளார். N சதீஷ்குமார் கலை இயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து வசனம்  எழுதியுள்ளனர். ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தீபாவளியையொட்டி இத்திரைப்படம் நாளை அக்டோபர் 25, வெள்ளிக்கிழமையன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

இதையொட்டி கேரளாவில் பாலக்காட்டு நகரத்தில் இந்தக் ‘கைதி’ படத்தின் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்றைக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கார்த்தியும், நடிகர் நரேனும் கலந்து கொண்டனர்.

kaithi-movie-poster-2

இந்த விழாவில் நாயகன் கார்த்தி பேசுகையில், “ஒரு புதுக் கதை கேட்டுப் பாருங்கள்’ என்று லோகேஷ், என்னிடம் இந்தப் படத்தின் கதையைக் கூறினார்.

கதையைக் கேட்டவுடன் ‘இது சிறிய படமல்ல… ‘டை ஹார்ட்’, ‘ஸ்பீட்’ போல இருக்கும்’ என்று எனக்குள் தோன்றியது. பல கதாபாத்திரங்கள், பல மாஸ் காட்சிகள் என்று ஒரு கதைக்குள் பல விஷயங்கள் இருந்தன.

அதில் ‘காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் நரேனை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது’ என்று லோகேஷ் கூறியதும், நான் நரேனிடம் பேசினேன். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

நண்பருடன் சேர்ந்து திரைப்படத்திற்கு செல்லலாம். ஆனால், நண்பருடன் இணைந்து திரைப்படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அப்படித்தான் நரேனும் நானும் சந்திக்கும்போதெல்லாம் எப்போதும் சினிமா பற்றியே பேசிக் கொண்டிருப்போம்.

அதில் என்னென்ன வித்தியாசங்களைக் கொண்டு வருவது என்பது பற்றி பேசும்போது எங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று இருவரின் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கும். இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்போம் என்று இதுவரை கற்பனைகூட செய்ததில்லை. இயக்குநர் லோகேஷ் மூலம் இந்தக் ‘கைதி’ படத்தில்தான் அது சாத்தியமானது.

இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை, காதல் காட்சிகள் இல்லை. அவை இரண்டுமே இந்தக் கதைக்குத் தேவைப்படவில்லை. ஆனால், இதுவொரு பொழுதுபோக்கான படமும்கூட.

kaithi-movie-poster-3

இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது ‘டில்லி’ என்கிற என்னுடைய கதாபாத்திரம்தான். 10 வருட சிறை வாழ்க்கையை கழித்துவிட்டு வெளியே வந்த கதாபாத்திரம். சிறையில் இருக்கும்போது அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பெண் குழந்தையை அவன் பார்த்ததே இல்லை. அந்தக் குழந்தை எப்படி இருக்கும் என்பதுகூட அவனுக்குத் தெரியாது.

அவன் தன் குழந்தையை பார்க்க நினைக்கும்போது ஏராளமான தடைகள் வருகின்றது. 4 மணி நேரத்திற்குள் அவன் குழந்தையைப் பார்த்தாக வேண்டும். ஆனால், பார்க்கக் கூடிய வாய்ப்பு குறைந்து கொண்டே வரும். அதிலிருக்கும் திரில், இரவு நேர சாலை பயணத்தில் அடுத்த என்ன ஆபத்து வரும் என்று தெரியாது.

இப்படி படம் ஆரம்பித்து 20 நிமிடங்களிலேயே படத்தின் கிளைமாக்ஸ் ஆரம்பித்து விடும். அதிலிருந்து முடிவுவரை கிளைமாக்ஸ் காட்சிதான். சண்டை, நடிப்பு இரண்டுமே இதில் இருக்கும்.

நானும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா என்பதால் இந்த கதாப்பாத்திரத்துடன் என்னால் என்னை பொருத்திக் கொள்ள முடிந்தது.

என்னுடைய காட்சிகளை படமாக்க 36 நாட்கள் ஆகியது. டப்பிங் பேசும்போது இசை, ஒளிப்பதிவு, காட்சிகள், என்னுடைய நடிப்பு எல்லாமே புதுமையாக இருப்பதை உணர்ந்தேன். எல்லாமே முடிந்து முழு படமாக பார்க்கும்போது அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது.

படம் முழுவதையும் பார்த்த பின்பு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அவசியம் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆசையும் எங்களுக்குள் எழுந்துள்ளது..” என்றார்.

Our Score