இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை அடைந்தன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக 5 திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அறிவித்திருந்தார்.
இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநரான லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குநர்களான சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குநர்களும் புதிதாக தயாரிக்க உள்ள அந்த 5 திரைப்படங்களையும் இயக்க உள்ளதாகவும் இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார்.
இதில் இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் ’ரைட்டர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு, நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.