உழைத்த காசில் இன்பம் இருக்காது. அடுத்தவர் காசில் துன்பம் இருக்காது. எனவே பணம் சம்பாதிக்க எந்த மோசடியிலும் நூதன தில்லுமுல்லுகளிலும் ஈடுபடலாம் என்பது இன்று படித்த இளைஞர்களிடம் பரவி வருகிற மனப்பான்மையாகும்.
அப்படி எண்ணம் கொண்ட 5 இளைஞர்கள் ஏழை, அப்பாவி மக்களையும் ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் நூதன மோசடிகளில் ஈடுபட ஒரு நிலையில் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளும்போது என்ன திருப்பம் நேர்கிறது என்பதை சொல்கிற படம்தான் ‘விஷயம் வெளியே தெரியக் கூடாது.’
இதில் செண்ட்ராயன், ஆர்யன், ‘மூடர் கூடம்’, குபேரன், ‘நாடோடிகள், நங்கன், அம்பா சங்கர், ஆகியோர் அந்த 5 கில்லாடிகளாக நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் அமிதா வருகிறார். இது கதாநாயகன்-நாயகி கதையல்ல, முழுக்க முழுக்க நகைச்சுவை நோக்கில் உருவாகும் படம். கலகலப்பான காட்சிகளாலும், விறுவிறுப்பான திருப்பங்களாலும் திரைக்கதையுடன் களைகட்டுகிறது.
கதையின் பெரும்பகுதி நெடுஞ்சாலைப் பகுதிகளில் நடக்கிறது. காரைக்குடி, திருமயம், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 45 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் ஒரே மூச்சில் முடித்து வந்திருக்கிறது படக் குழு.
இது ஒரு முழு நீள கலக்கல் காமெடிப் படம் என்று உத்திரவாதம் தருகிற ஏ.ராகவேந்திரா கதை பற்றி விரிவாகப் பேசத் தயங்குகிறார் காரணம் கேட்டால், “விஷயம் வெளியே தெரியக் கூடாது..” என்கிறார்.
“படத்தில் காதல் இல்லை, டூயட் பாடல் இல்லை, யதார்த்த முலாம் பூசிய நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது. படிக்காதவன் தவறு செய்தால் எளிதில் மாட்டிக் கொள்கிறான். படித்தவன் தவறு செய்தால் எளிதில் சிக்குவதில்லை. காரணம் அவன் தவறு செய்யும் போது தன் அறிவையும், படிப்பையும், திறமையையும் சட்ட நுணுக்கத்தையும் பயன்படுத்துகிறான். அப்படி தவறுகள் செய்யும் 5 இளைஞர்கள், ஒருவரது இன்னொருவனுக்குத் தெரியும்போது என்னாகிறது. கடைசிவரை குற்றத்திலிருந்து தப்பிக்க படிப்பறிவு உதவுமா? அவர்களுக்கு நேரும் முடிவு என்ன என்பதை இக்கால இளைஞர்களுக்கான பாடமாக இப்படத்தை எடுத்திருப்பதாக” கூறுகிறார் இயக்குநர் ஏ.ராகவேந்திரா.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையும் அமைத்து இயக்குபவர் ஏ.ராகவேந்திரா, ஒளிப்பதிவு – ஒளிக்குட்டி, கலை – ஏழுமலை, படத் தொகுப்பு – வில்சி, பாடல்கள் கெ.அருணாசலம், நடனம் – சங்கர், ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா, இணைத் தயாரிப்பு – கே.அருணாசலம், எஸ்.செந்தில் பாபு, எஸ்.தினேஷ்பாபு, நிர்வாகத் தயாரிப்பு – ஜி.அசோக்குமார், ஜி.தினேஷ் குமார். ஓபன் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பவர் வி.கணேசன்.
படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது..!