தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாரினி நடிகையான நயன்தாராவும், தெலுங்கு நடிகரான கோபிசந்தும் நடித்துள்ள ‘ஆரடுகுலா புல்லட்’ என்ற தெலுங்கு படம் திரைக்கு வராமல் 9 வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை 2012-ல் தொடங்கினர். முழு படப்பிடிப்பையும் முடித்து அந்த வருடமே திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டிருந்தனர்.
முதலில் இந்தப் படத்தை ‘தேவதையைக் கண்டேன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘மலைக்கோட்டை’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘பட்டத்து யானை’, ‘மன்னர் வகையறா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் பிரபல தமிழ் இயக்குநரான பூபதி பாண்டியன்தான் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். அப்போது படத்தின் பெயராக ‘ஜெகன் மோகன் ஐ.பி.எஸ்.’ என்று வைத்திருக்கிறார்கள்.
ஆனால், கதை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பூபதி பாண்டியன் படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால், படம் மீண்டும் துவங்குவதில் பெரிதும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பி.கோபால் என்ற இயக்குநர் இந்தப் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
படம் முடித்து 2017-ல் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு U/A சான்றிதழ் பெற்றுள்ளது. ஆனால், அதன் பிறகும் பண நெருக்கடி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.
இந்த நிலையில் தற்போது இந்தப் படம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாம். இதனால் இத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.