‘உனக்கு 20 எனக்கு 18’ படத்தில் அறிமுகமான நடிகை ஷ்ரேயாவின் ஆக்டிங் கிராப், சீக்கிரமாக ஏறுமுகத்தில் இருந்தாலும், சூப்பர் ஸ்டாருடன் ‘சிவாஜி’ படத்திலும் நடித்த பின்பும் ஷெல்ப் எடுக்கவே இல்லை..! கடைசியாக அவர் நடித்த பெரிய படம் தனுஷின் ‘உத்தமபுத்திரன்’. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள்தான் இன்றளவும் டிவிக்களில் திரும்பத் திரும்ப வருகின்றன.. ஆனாலும் ஷ்ரேயா மட்டும் நஹி..!
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று வேறு மொழிகளில் கால் பதித்து வலம் வந்து கொண்டிருந்தாலும் பிரபல நடிகர்கள் பலரும் சின்ன வயசு ஹீரோயின்களையே கேட்டுக் கொண்டிருப்பதால் முதிர் கன்னி வயதில் இருக்கும் ஷ்ரேயா தமிழில் ஒற்றை பாடலுக்கெல்லாம் ஆட வந்திருந்தார்..
கடைசியாக ‘சந்திரா’ என்ற கன்னட, தமிழ் மொழிகளில் தயாரான படத்தில் அவர் நடித்த இளவரசி கேரக்டருக்காக வாள் சண்டை, களரி சண்டையெல்லாம் பயிற்சியெடுத்து செய்திருந்தார். அதுவம் வொர்க் அவுட்டாகவில்லை. இப்போது மறுபடியும் ஒரு இளவரசியாக வரப் போகிறாராம்..!
ஹைகிரீவா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.கிருஷ்ணன், P.R. சேதுராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படமா ‘ஸ்ரீராமானுஜர்’ படத்தில்தான் ஷ்ரேயாவுக்கு இந்த இளவரசி வேடம் கிட்டியிருக்கிறது.
கி.பி.1017-ல் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீராமானுஜர் மகான், இன்றளவும் இந்தியாவில் வைஷ்ணவத்தை பரப்பிய மகான்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த இவர், வைஷ்ணவத்தை பரப்பிய குற்றத்திற்காகவே சோழனால் நாடு கடத்தப்பட்டவர். நூறாண்டுகள் வாழ்ந்த இந்த துறவி தனது வாழ்நாளில் இந்தியா முழுவதும் யாத்திரைகள் செய்து வைஷ்ணவ மதத்தை பரப்பியிருந்தார்.
அப்போது டெல்லியை ஆண்ட பாதுஷாவின் படைகள் ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து வந்து அங்கிருந்த ரங்கநாதரின் சிலையைக் கவர்ந்து டெல்லிக்குக் கொண்டு சென்றுவிட்டதாம். அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்ற அரையர்கள் என்றழைக்கப்படும் வைணவ அந்தணர்கள் டெல்லிவரைக்கும் சென்று மன்னர் பாதுஷாவிடம் ரங்கநாதரின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரை மீட்டு கொண்டு வந்ததாக சரித்திரம்.. இதனை வைத்துத்தான் இப்போது அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி காலங்களில் ‘இராப்பத்து’, ‘பகல்பத்து’ விழாக்கள் உள்ளிட்டு நடத்தப்படுகின்றன.. அந்த டெல்லி பாதுஷாவின் மகள் பீவி நாச்சியாராக ஷ்ரேயா நடிக்கிறாராம்..!
ஹிந்தியையும் தாண்டி ஆங்கிலப் படங்களில்கூட நடித்திருக்கும் ஷ்ரேயாவின் நடிப்பு கேரியரில் இது நிச்சயம் முக்கியமான படமாக இருக்கும்.இந்திய சினிமாவின் என்சைக்ளோபீடியாவில் இந்த ஒரு படத்துக்காகவாவது ஷ்ரேயா நிச்சயம் இடம் பெறுவார் என்று நம்பலாம்..!