ஹரி இயக்கிய ‘சேவல்’ என்ற வெற்றிப் படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜின்னா தயாரிக்கும் புதிய படம் ‘ரீங்காரம்.’
பாலா என்கிற புதுமுகம் நாயகன். பிரியாங்கா நாயகி. மற்றும் கலாபவன் மணி, ஜெயபாலன், சந்தியா ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயபாலன் இருட்டில் வாழும் ‘ஆடுகளம்’ பூதமாக வித்தியாச வேடம் தாங்கியுள்ளார். வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் சிங்கப்பூர் தீபன் சிரிக்க வைப்பார்.
இந்தப் படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரகனி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், மூர்த்தி, ‘அரசு’ சுரேஷ் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பரந்துபட்ட அனுபவம் பெற்றவர். ஒளிப்பதிவு இனியன் ஹரிஸ், இசை–அலிமிர்ஷா. இவர் ‘ஆதார்’, ‘புத்தனின் சிரிப்பு’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர்.
படத்தின் கதையைவிட அதன் திரைக்கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன் வந்ததாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஜின்னா.
*மிகப் பெரிய பொருட் செலவு, பிரமாண்டங்கள் மத்தியில் மனதைத் தொடும் கதைகளும் காட்சிகளுமே வெற்றி பெறும்; பேசப்படும் .அந்த வகையில் உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்தான் இந்த ‘ரீங்காரம்.’ இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நாளில் நடக்கும் கதை. கதையின் விறுவிறுப்புக்கும் வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று நினைத்து படத்தில் இரண்டு பாடல்களைத்தான் வைத்துள்ளோம். ஒன்றை ‘குட்டிப்புலி’ படத்தின் ‘அருவா மீச’ பாடலைப் பாடிய பத்மலதா பாடியுள்ளார். படத்தில் மலிவான காமெடி இல்லை. மனதிற்குள் ரசிக்கும் காமெடி உண்டு..” என்கிறார் தயாரிப்பாளர் ஜின்னா.
இது புதிய கதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். கோணங்களில் வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனால் இதை புதுசு என்று சொல்ல மாட்டேன்.
உலகத்தில் இருக்கிற எல்லா சொற்களும் சொல்லப்பட்டுவிட்டன. சொல்கிற வாய்கள்தான் வேறு வேறு என்பார்கள். இந்த உலகத்தில் புதுசு என்று ஒன்றும் கிடையாது. அதற்கான மூலம் என்றைக்கோ உருவாகியிருக்கும். அது மட்டுமல்ல இந்த மறதி என்று ஒன்று இருக்கும்வரை எல்லாமே புதிதாகத் தெரியும் என்று நினைப்பவன் நான். கோணங்களை வித்தியாசப்படுத்தி கதை சொல்லியிருக்கிறேன். உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பற்றி மட்டுமே பேசும் யதார்த்தமான படம்தான் ‘ரீங்காரம்’.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரும் இயல்பு மீறாமல் யதார்த்தம் கெடாமல் நடித்திருக்கிறார்கள். புதுமுக கதாநாயகனான பாலா. அவர் வேலையை சரியாக செய்து யதார்த்தத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். தூக்க முடியாத பாத்திரத்தைக்கூட தூக்கிட்டு நடந்திடலாம் ஆனால் கதாபாத்திரத்தை தூக்கிட்டு நடக்கிறது சுலபமல்ல. பாரத்தை முகத்தில் காட்டாமல் பாத்திரத்தை சுமந்து வாழ்ந்திருக்கிறார் கதாநாயகி ‘கங்காரு’ பிரியங்கா. ‘கங்காரு’ பிரியங்கா இனி ‘ரீங்காரம் பிரியங்கா’வாக ஆகிவிடுவார்.
எப்போதுமே எரியும் நெருப்பாக ஜொலிக்கும் கலாபவன் மணி .இதில் அடக்கமாக நடித்து ஆளுமை காட்டியுள்ளார். குத்திக் கிழிக்கிற கத்தி மாதிரி ‘ஆடுகளம்’ ஜெயபாலனும். ‘பசங்க’ சிந்தியா அம்மாவாகவும் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
இதுவரை 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் என்றுமே புதுமையை ரசிப்பவர்கள். புதிய கதை சொல்லிகளை ஆராதிப்பவர்கள்.. அந்த வரிசையில் இந்த ‘ரீங்கார’த்தையும் வரவேற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.