தங்களுடைய படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு பின்பு சில மாதங்களுக்கு பிறகு நடிக்க மறுத்துவிட்டதால் நடிகை ஸ்ருதிஹாசனை வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று ஹைதராபாத் 21-வது சிட்டி சிவில் கோர்ட்டில் தடையுத்தரவை வாங்கிய பி.வி.பி. நிறுவனத்திற்கு ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகை ஸ்ருதிஹாசன் சொக்கத் தங்கம் என்று பதிலளித்துள்ளார்கள்.
இது குறித்து இன்று அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த அறிக்கையில், “பி.வி.பி. நிறுவனம் தயாரிக்கும் நாகார்ஜூனா-கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காததால் ஸ்ருதி மீது பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. குறிப்பாக, ‘அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி நடிகரின் படத்திற்குச் சென்றுவிட்டார்’ என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது.
எங்களது தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஹன்ஸிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்துவரும் ‘புலி’ படத்தில்தான் ஸ்ருதிஹாசன் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதிவரையிலும் நடிக்கவுள்ளார்.
தற்போது ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் ‘புலி’ படத்தில், இந்தியில் அக்சய்குமாருடன் ‘கப்பர்’ படத்தில், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘ஸ்ரீமந்துரு’ படத்தில்.. என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வருகிறார்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் அவர், ‘புலி’ படத்தினைப் பொருத்தமட்டில் சொன்ன தேதியில் படப்பிடிப்புக்கு வருவதும், அர்ப்பணிப்போடு நடிப்பதையும் ஒட்டு மொத்த பட யூனிட்டே பாராட்டி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற துளி பந்தாகூட இல்லாமல் அவர் எளிமையாக நடந்து கொள்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
‘புலி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தலக்கோணம் சுற்றுலா தளத்தில் நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டு மாதங்கள் ராத்திரி, பகலாகப் பணிபுரிந்து, காடும்-ஏரியும் சங்கமிக்கும் அந்த அழகான இடத்தில் இந்திய திரையுலகில் இதுவரையில் எந்தப் படத்திலும் பார்த்திருக்காத வகையில் ஒரு கிராமத்தை உருவாக்கியுள்ளார்கள்.
மேலே சொன்ன தேதியில் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மே மாதம் சுற்றுலா பயணிகள் தலக்கோணத்திற்கு வரவிருப்பதால் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டியது வரும். இதனால் எங்களுக்கு பெரும் பொருட்செலவு ஏற்படும் என்று எங்களது கஷ்டத்தை ஸ்ருதியிடம் தெரிவித்தோம். அதை புரிந்து கொண்டு இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்ட ஒரு படம் தன்னால் நின்றுவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் ‘புலி’ படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறார்.
அவர் கண்டிப்பாக வேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம். மேலும் தயாரிப்பாளர்களாகிய எங்களது கஷ்டங்களை மனதில் கொண்டு பல தேதிகளை எங்களுக்காக விட்டு தந்த ஸ்ருதிஹாசனுக்கு, எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..” என்று ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களான சிபு தமீன்ஸ், பி.டி.செல்வகுமார் இருவரும் விளக்கம் அளித்துள்ளார்கள்.
ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் இன்னொரு தயாரிப்பாளருக்கும் தெரியும் என்பார்கள். இந்த அறிக்கை அப்படியா சொல்கிறது..?