full screen background image

‘பார்க்கிங்’ பட இயக்குநருக்கு தங்க வளையம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்..!

‘பார்க்கிங்’ பட இயக்குநருக்கு தங்க வளையம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்..!

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’பார்க்கிங்’.

இத்திரைப்படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி படைப்பு ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது.

இதையொட்டி இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசும்போது, “படத்தை மிகப் பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம்குமார், தயாரிப்பாளருக்கு நன்றி. ஒத்துழைப்புக் கொடுத்த படக் குழுவுக்கு நன்றி. உங்களால்தான் என்னால் நன்றாக பணி செய்ய முடிந்தது. ‘பார்க்கிங்’ போல எங்களது அடுத்தடுத்தப் படங்களையும் வெற்றி பெற வையுங்கள்” என்றார்.

நடிகை பிரார்த்தனா பேசும்போது, “இந்தப் படத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. அபர்ணா கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநர் ராம் சாருக்கு நன்றி. என் கேரக்டர் பலருக்கும் கனெக்ட் ஆகி இருக்கு. ’எங்க வீட்டு பொண்ணு மாதிரி இருக்க’ என்று படம் பார்த்த பலரும் சொன்னார்கள். நமக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர் சினிஸ் சாருக்கு நன்றி” என்றார்.

நடிகை இந்துஜா பேசும்போது, “இந்த ’பார்க்கிங்’ படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் நுழைந்திருக்கிறது. இதற்கு முதலில் நான் மீடியாவுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள்தான் பெரிய ஓப்பனிங் கொடுத்தீர்கள்.

பார்வையாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படம் பண்ணும்போதே நல்ல படம் செய்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. நீங்கள் கொடுத்த அன்பு இன்னும் நல்ல படங்கள் அடுத்து செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்திருக்கிறது. இயக்குநர் ராமு ஸாருக்கும், படக் குழுவினருக்கும் நன்றி. மழை என்பதையும் தாண்டி மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நன்றி” என்றார்.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசும்போது, “மீடியா கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய் சேர்ந்தது. வெள்ளம், மழை என நிறைய இடையூறுகள் இருந்தாலும் இந்தப் படத்திற்கு மக்கள் நிறைய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்த சினிஸ் அண்ணனுக்கு நன்றி. லாக் டவுன் சமயத்தில் அவரிடத்தில் மூன்று கதைகளை நான் சொன்னபோது, இந்தக் கதையைச் செய்யலாம் என்று அவர்தான் தேர்ந்தெடுத்து சொன்னார். என் மீதும் படம் மீதும் சுதன் சார் அந்த அளவுக்குப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்போது படத்தின் ரிசல்ட் பார்த்து அவர் ஹேப்பி.

ஹரிஷ் கல்யாண் அண்ணனிடம் கதை சொல்லும்போது ஒரு பதட்டம் இருந்தது. ஆனால், அவரும் இந்தக் கதையில் ஈடுபாடு காட்டி நிறைய சப்போர்ட் செய்தார். எம்.எஸ்.பாஸ்கர் சார் லெஜெண்டரி ஆக்டர். படப்பிடிப்புத் தளத்தில் அந்தக் கதாபாத்திரத்திலேயே இருந்தார். படத்தில் வருவது போலயே ரொம்ப கோபமாக இருந்தார்.

படம் முழுவதுமே இந்துஜாவுக்கு கர்ப்பமாக இருப்பது போன்ற சவாலான கதாபாத்திரம். நல்ல படத்தில் நல்ல கதாபாத்திரம் என இந்துஜா ஒத்துக் கொண்டார். பிரார்த்தனா எல்லாமே சிங்கிள் டேக்கில் நடித்து விடுவார். படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்குமே நன்றி” என்றார்.

இணைத் தயாரிப்பாளர் சினிஸ் பேசும்போது, “ஒவ்வொரு நாளும் படத்தின் கலெக்‌ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. ஆனால், மழை வெள்ளத்தால் பாதிப்பு வருமோ என யோசித்தோம். ஆனால், திரையரங்குகளில் இப்போதுவரையிலும் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல கதையைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஹரிஷ், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், பிரார்த்தனா, ரமா என அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசும்போது, “இந்தப் படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. ராம், முருகேஷ், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, பிரார்த்தனா என இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. சில படங்கள் ஆரம்பத்தில் டல்லாக இருக்கும், போகப் போக பிக்கப் ஆகும். அப்படியான படங்கள் காலத்துக்கும் நிற்கும்.

படத்தில் கார் வாங்கும் சீனுக்காக படப்பிடிப்பிலும் நான் கோபமாக இருந்தது உண்மை. காட்சியை அப்படியே நிஜத்திலும் பின்தொடர வேண்டும் என நினைப்பேன். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையை நல்லவிதமாக படமாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் வெற்றிக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி” என்றார்.

கலை இயக்குநர் ராகுல் பேசும்போது, “இந்த ’பார்க்கிங்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் நல்ல படத்திற்கு ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி. இப்படத்தில் சிறப்பாக நடித்த ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது, “இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மீடியாவுக்கு நன்றி. இதன் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள்.

நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கே இப்படி நிற்கிறோம். இந்த வாய்ப்பினை கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் சார், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி.

இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய அடுத்தடுத்த படங்களிலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்குள் இப்போது கூடியுள்ளது..” என்றார்.

விழாவின் இறுதியில் படத்தின் இயக்குநரான ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையத்தைப் பரிசளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்..!

Our Score