“விஷாலுடன் இணைந்து பணியாற்றுவது இனிமேல் நடக்காது…” என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.
‘துப்பறிவாளன்-2’ படம் தொடர்பாக அந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் மிஷ்கினுக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மிகப் பெரிய சண்டைக்கு இட்டுச் சென்றது.
ஒரு பொது மேடையிலேயே மிஷ்கின், விஷாலை கடுமையாகத் திட்டித் தீர்த்தார். இந்த நிலையில் ‘துப்பறிவாளன்-2’ படத்தை தானே இயக்குவேன் என்று விஷால் சொல்லியிருந்தும் இப்போதுவரையிலும் அந்தப் படம் மீண்டும் துவக்கப்படவில்லை.
இதற்கிடையில் விஷாலுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக இயக்குநர் மிஷ்கினிடம் கேட்டதற்கு “அதற்கு வாய்ப்பே இல்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
மிஷ்கின் அளித்த பதிலில், “விஷால் எனக்குத் தம்பி மாதிரிதான். அந்தக் கோபம் நிஜம். தன் கோபத்தால் மதுரையை எரிச்ச கண்ணகி மாதிரி எதுவும் நடக்கலை. அவன் நல்லாயிருக்கணும். ஆனால், அவன்கூட இனிமேல் கலைப் பயணம் இல்லை.
‘துப்பறிவாளன் 1’-ல் ‘பாட்டு வேண்டாம்’ன்னு சொன்னதுக்கு ‘சரி’ன்னு சொன்ன பெரிய மனுஷன் அவன். நாங்க இரண்டு பேரும் விடாக் கண்டன் கொடாக் கண்டன்கள்தான். அப்படித்தான் இருப்போம். அவன் 40 வருஷம் சினிமாவில் இருப்பான். நல்ல உழைப்பாளி. அவன் என் மேல் வைத்த அன்பையும், நான் அவன் மேல் வைத்த அன்பையும் மறக்க முடியாது…’’ என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.