மிகவும் வித்தியாசமான கதை என்பதாலும், மிக சிறந்த முறையில் படமாக்கப்பட்ட விதத்தாலும் டீசர் வெளியான நாள் முதல் எல்லோருடையப் பாராட்டையும் பெற்றுள்ளது ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ திரைப்படம்.
“அதேபோல இந்தப் படத்தின் இசையும் பரவலாக பாராட்டினை பெறும்..” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் படக் குழுவினர்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிவ சரவணன் பல்வேறு இசை ஆல்பங்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இசை இன்று வெளியானது.
இதைப் பற்றி சிவ சரவணன் கூறும்போது, “இன்றைய நாள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாகும். என்னுடைய ஏழாவது வயதிலிருந்தே இப்படியான ஒரு நாளை எதிர்நோக்கி காத்திருந்தேன்.
‘உனக்கென வேணும் சொல்லு’ படத்தின் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம், ‘இந்தப் படத்தின் ஒவ்வொருப் பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். அதிலும் பின்னணி இசை படத்துக்கு உயிர் நாடியாக இருக்க வேண்டும்’ என்றார். பின்னணி இசைக்கு பெயர் போன இசைஞானி இளையராஜாவை கடவுளாகப் பூசிப்பவன் நான். எனது இயக்குநரின் அந்த சவாலை நான் ஏற்றுக் கொண்டேன்.
இப்பொழுது படம் பார்த்தவர்கள் பாராட்டும்போது நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போகிறேன். இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என்னிடம் மட்டுமல்ல… படத்தின் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகையரிடம் இருந்தும் மிக சிறந்த முறையில் திறமைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
எனக்கு இந்தப் படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஷானுக்கு எனது மனமார்ந்த நன்றி. என் இசைக்கு எழுத்து வடிவம் கொடுத்த பாடலாசிரியர்கள் ஜி.கே.பி., ஷெரினிக் விஸ்வநாதன் அவர்களுக்கும், உயிர் கொடுத்த பின்னணி பாடகர்கள் ஹரிசரண், ஸ்வேதா மோகன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வேல்முருகன் குரலில் ஒலிக்கும் ‘நாலு பாட்டில் சாராயம்’ பாடல் படம் பார்ப்போர் அனைவரையும் கவரும். இந்தப் பாடல் டீசர் மூலம் எனது பெயர் எல்லோரையும் சென்றடைந்து நான் பிரபலம் ஆனதும் எனக்கு ஒரு சந்தோஷமான விஷயம்தான்.
இந்தப் படம் அடுத்த மாதம் 17-ம் தேதி உலகெங்கும் வெளிவரவுள்ளது. இந்த நிமிடத்தில் கடவுள் என்னிடம் வந்து ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்றால் நான் கேட்பது என் பாடல்கள் ஹிட்டாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்..” என்று நீளமாக சொல்லி முடித்தார் புதுமுக இசையமைப்பாளர் சிவ சரவணன்.