அடுத்தாண்டு நடைபெறவுள்ள 88-வது ஆஸ்கர் விருது போட்டியின் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான போட்டி பட்டியலில் இந்திய திரைப்படமான ‘கோர்ட்’ படமும் இடம் பெற்றுள்ளது.
மராத்தி திரையுலக புதுமுக இயக்குனர் சைதன்ய தமானேயின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் ‘கோர்ட்’. இந்திய நீதித்துறையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரும் வெற்றி கண்டது. சென்ற ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் 88-வது ஆஸ்கர் விருது போட்டிக்காக இந்த படம் தேர்வாகி உள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான வரிசையில் ‘கோர்ட்’ படம் இடம் பிடித்துள்ளது.
இது பற்றி இந்திய திரைப்பட கூட்டமைப்பு பொது செயலாளர் சுப்ரான்சென் கூறுகையில், ‘‘ஆஸ்கர் விருது போட்டியில் ‘கோர்ட்’ படம் தேர்வாகி இருக்கிறது. இந்த போட்டியில் 30 திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன..” என்றார்.
இந்தப் படத்தில் வீர சதிதர், விவேக் கோம்பர், கீதாஞ்சலி குல்கர்னி, பிரதீப் ஜோஷி, உஷா பானே, ஷிரிஷ் பவார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஷம்பஜி பகத் இசையமைத்திருக்கிறார். மின்னல் தேசாய் ஒளிப்பதிவு செய்ய ரிக்கவ் தேசாய் எடிட்டிங் செய்திருக்கிறார். Zoo Entertainment Private Limited சார்பில் விவேக் கோம்பர் தயாரித்திருக்கிறார். சைதன்யா தாம்கான் இயக்கியிருந்தார்.
ஏற்கெனவே இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றிருந்தது.
ஆஸ்கர் விருது போட்டிக்கு ‘கோர்ட்’ படம் தேர்வாகி இருப்பது மிகப் பெரிய கவுரவம் என்று அந்த படத்தின் கதாநாயகி கீதாஞ்சலி குல்கர்னி பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.
ஆஸ்கார் விருது போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட வரிசையில், இந்தியாவை சேர்ந்த ஒரு படம் தேர்வாகி இருப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.