எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பில் V.மதியழகன், R.ரம்யா ஆகியோர் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன.’
இந்த நிறுவனம் ஏற்கெனவே ‘ராஜா மந்திரி’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இதில் ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலைமையில் ‘ராஜா மந்திரி’ வெளியாகும் முன்னரே தங்களது அடுத்த படத்தையும் துவக்கிவிட்டார்கள். இவர்களது இரண்டாவது தயாரிப்பான இந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படத்தினை இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்குகிறார்.
இதில் ’திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ’நான் மகான் அல்ல’ராம் மற்றும் நிறைய புதுமுகங்களும் நடித்திருக்கின்றனர். பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான P.G.முத்தையா இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவை P.G.முத்தையா கையாள, இசையை ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, மற்றும் ’உறுமீன்’ படங்களின் இசையமைப்பாளரான அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை செல்வா R.K. கவனிக்க, பாடல்களை பா.விஜய் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ்(பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டை பயிற்சி தருகிறார் விமல்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் புகழ் பெற்ற பாடலின் முதல் வரியையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். மூன்றாம் தலைமுறை முதல் இன்றுள்ள சிறார்கள்வரை ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பெற்ற வரிகள் இவை.
சொன்னதும் சட்டென்று எல்லோரின் மனதிலும் இடம் பிடிக்கும் என்பதால் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ என்ற பாடல் வரியை படத்தின் தலைப்பாக வைத்தார்களாம்.
இந்தத் தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. தினம் தினம் பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் அதற்கான தீர்வுடன் விளக்கும் படம்தான் ‘மறைந்திருந்த பார்க்கும் மர்மமென்ன.’
தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ .