‘லிங்கா’ திரைப்படம் எந்தத் தடங்கலும் இல்லாமல் நாளை வெளியாகும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றம் இன்று ‘லிங்கா’ படத்திற்கெதிராக கொடுத்த தீர்ப்பில் 10 கோடி ரூபாய் வைப்புப் பணமாகக் கட்டச் சொல்லியிருந்தது. “அதனை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். லிங்காவையும் நாளை கண்டிப்பாக ரிலீஸ் செய்வோம்” என்று லிங்காவின் தயாரிப்பு நிறுவனமான ராக்லைன் எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரையில் இல்லாத அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த ‘லிங்கா’ படம் உலக அளவில் அதிகத் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
தமிழ்நாட்டில் 600 தியேட்டர்கள், ஆந்திராவில் 750 தியேட்டர்கள், கேரளாவில் 250 தியேட்டர்கள், கர்நாடகாவில் 200 தியேட்டர்கள், வட இந்தியாவில் 375 தியேட்டர்கள், வெளிநாடுகளில் 1000 ஸ்கிரீன்கள் என்று கிட்டத்தட்ட 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகிறது. இது இந்திய அளவில் நிச்சயம் சாதனையானதுதான். ‘லிங்கா’ இந்தி பதிப்பு வரும் டிசம்பர் 25-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
தமிழ்நாட்டில் பல நகரங்களில் இன்று இரவு 1 மணிக்கே சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடியற்காலை 4 மணி, காலை 6, 7 மணிக்கெல்லாம் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடாகியுள்ளன. ரஜினியின் ரசிகர்களின் ரஜினியின் இந்த 64-வது பிறந்த நாளை தங்களது தலைவனின் படத்தோடு முதல் முறையாகக் கொண்டாடப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் அதே சமயம்.. ரசிகர்களின் அளவுக்கதிமான ஆர்வத்தினால் தியேட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ள தொகையைவிடவும் அதிகமாக்கியிருக்கிறார்கள்.
சென்னையிலேயே 350, 300, 250 என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய விலை கொடுத்து தங்களது தலைவனுக்காக படத்தைப் பார்க்கும் ரசிகர்களின் இந்த குணம் ஆச்சரியம்தான் என்றாலும் ஒருவிதத்தில் தமிழ்ச் சினிமா துறைக்கு மிகப் பெரிய கெடுதல் என்பதையும் சொல்லித்தான் தீர வேண்டும்.
இது போலவே மற்ற பெரிய நடிகர்களின் படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களிடம் அதிக விலைக்கு டிக்கெட் விலையை வைத்து விற்றுத் தரும்படி கேட்கிறார்கள். அப்படி அதிக விலைக்குக் கொடுக்கும் தியேட்டர்களுக்கு மட்டுமே திரைப்படங்களை கொடுக்கிறார்கள்.. திருச்சியில் இன்று மதியம்தான் இந்தப் பிரச்சினை முடிந்தது..!
ஏற்கெனவே வரிவிலக்கு அளிப்பதினால் அரசுக்கும் வருவாய் இழப்பு. முறைப்படி ஒரு படத்துக்கு வரி விலக்கு கொடுத்தால் டிக்கெட் விலையைக் குறைத்துதான் கொடுக்க வேண்டும். ஆனால் தியேட்டர்காரர்கள் இத்தனை வருடங்களாக அநியாய கொள்ளையில் ஈடுபட்டு வரிவிலக்கினால் கிடைக்கும் பலனை சினிமா தியேட்டர்களுக்கு வரும் பொதுமக்களுக்கு வழங்காமல் தாங்களே பிடுங்கிக் கொள்கிறார்கள்..
இப்படி டிக்கெட்டுகளை பல மடங்கு விலையை அதிகமாக்கி நியாயமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரியையும் தராமல் ஏமாற்றுகிறார்கள். நுகர்வோரான ரசிகர் பெருமக்களையும் ஏமாற்றுகிறார்கள்..!
தயாரிப்பாளர்கள்-விநியோகஸ்தர்கள்-தியேட்டர்காரர்களின் இந்தக் கூட்டுக் கொள்ளையை யார் தடுப்பது..?
Our Score