2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் ‘கைதி’. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
இந்தப் படம் தமிழில் அதிரிபுதிரி ஹிட்டடித்துள்ளது. மேலும் இத்திரைப்படம் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதேபோல் இத்திரைப்படத்தின் 2-ம் பாகத்தையும் தான் உருவாக்கப் போவதாக படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் திடீர் அதிர்ச்சியாக இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கும் கேரளா நீதிமன்றம் தடை விதித்தது.
கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007-ம் ஆண்டு புழல் சிறையில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை தொகுத்து ஒரு கதையாக எழுதி அதை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொன்னாராம்.
அந்தக் கதை பிடித்ததால் அதை படமாக்கலாம் என்று சொல்லி அவருக்கு 10 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தாராம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. ஆனால் அதன் பிறகு ராஜீவ் ரஞ்சனை எஸ்.ஆர்.பிரபு பட வேலைகள் தொடர்பாக அழைக்கவே இல்லையாம்.
இந்த நிலையில் சமீபத்தில்தான் ‘கைதி’ படத்தைப் பார்த்திருக்கிறார் ராஜீவ் ரஞ்சன். தான் சொன்ன அதே கதையின் இரண்டாம் பாதியை அப்படியே ‘கைதி’ படத்தில் வைத்து படமாக்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனால் தனக்கு நஷ்ட ஈடாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு 4 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கேரளாவின் கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராஜீவ் ரஞ்சன்.
அவரது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.ஆர்.பிரபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, ‘கைதி’ படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யக் கூடாது. அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கக் கூடாது…” என்று தடை விதித்திருந்தார்.
இதன் பின்பு இந்த வழக்கில் நீதிமன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதிமன்றம் இடைக்கால தடையை ரத்து செய்து ராஜீவ் ரஞ்சன் தாக்கல் செய்த நஷ்ட ஈட்டு மனுவையே தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.