full screen background image

‘கோச்சடையான்’ பற்றிய புரளிகளை நம்பாதீர்கள் – தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்..!

‘கோச்சடையான்’ பற்றிய புரளிகளை நம்பாதீர்கள் – தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்..!

வருமா, வராதா என்ற சந்தேகத்தை தினம்தினம் எழுப்பிக் கொண்டிருந்த கோச்சடையான் படம் அனைத்துத் தடைகளையும் தாண்டி வரும் 23-ம் தேதி திரைக்கு வருவது உறுதி என்கிறார்கள் அப்படத்தின் தயாரிப்பாளர்கள்.

இது தொடர்பாக அவர்கள் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை இது :

“ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் ‘கோச்சடையான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் ‘கோச்சடையான்’தான். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உடன் சரத்குமார், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளனர். படத்தொகுப்பு – ஆண்டனி. ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலிப்பதிவை கவனித்திருக்கிறார். கலை: வேலு, நடனம்: சரோஜ்கான், சின்னி பிரகாஷ், ராஜுசுந்தரம், உடைகள் வடிவமைப்பு: நீத்தாலுல்லா, சண்டைப் பயிற்சி: மிராக்கிள் மைக்கேல். கிரியேட்டிவ் கன்ஸல்டண்ட்டாக ஆர்.மாதேஷ் பணியாற்றி உள்ளார். செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ளார்.

முன்னதாக இப்படம் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவிருந்தது. ‘கோச்சடையான்’ 3-டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி உட்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில் நுட்பக் காரணங்களினால் தேதியை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  மாற்று தேதியையும் தெளிவுபடுத்தி இருந்தோம். இந்நிலையில், சில பத்திரிகைகள் மற்றும் இணையத் தளங்களில் ‘கோச்சடையான்’ படத்தைப் பற்றி உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.

‘கோச்சடையான்’ திரைப்படம் 6 மொழிகளிலும் 2-டி வடிவத்தில் தயாராகி ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3-டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. 3-டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.

இது தவிர, ஏற்கனவே சுமார் 4000 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டநிலையில், சென்னையில் முன் பதிவு துவங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்து  இருபத்தைந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. அதன் பிறகு மேலும் 2000 திரையரங்குகள் ‘கோச்சடையான்’ படத்தை திரையிட முன் வந்துள்ளன. 3-டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப கால அவகாசம் தேவைப்பட்டது.

ஈராஸ் இண்டர்நேஷனல் என்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் இப்போது வரும் மே-23-ம் தேதி அன்று வெளியாக தயார் நிலையில் உள்ளது. ஈராஸ் இண்டர்நேஷனல் என்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் படம் குறித்து வெளியான செய்திகள் தவறானவை. அவற்றை நம்ப வேண்டாம் என்றும், ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி கோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்…”

இவ்வாறு அவர்களது அறிக்கை சொல்கிறது..! இதையாவது நாம் உறுதியாக நம்புவோமாக..!

Our Score