கிராமம், அதன் மண், மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம்தான் ‘களத்தூர் கிராமம்’.
இப்படத்தை ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா சார்பில் ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் வெளியிடவிருக்கிறார்.
கிஷோர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக யக்னா ஷெட்டி நடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். மேலும், ‘தகராறு’ சுலீல் குமார், அஜய் ரத்னம், தீரஜ் ரத்னம், ரஜினி மகாதேவய்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – புஷ்பராஜ் சந்தோஷ், இசை – இசைஞானி இளையராஜா, பாடல்கள் – இளையராஜா, கண்மணி சுப்பு, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், நடனம் – நிர்மல், சண்டை பயிற்சி – மகேஷ்- ஓம் பிரகாஷ். எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன்.
இது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை என்று கூறலாம். ஒரு கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பையும், ஏமாற்றத்தையும் சந்திக்கும் அக்கிராம மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள். இறுதியில் வெல்வது மக்களா..? அல்லது போலீஸா…? என்பதுதான் இந்தக் ‘களத்தூர் கிராம’த்தின் கதை. இதுவொரு ஆக்சன் படம் என்றாலும் குடும்பத்தில் நிகழும் மனம் நெகிழவைக்கும் பாசப் பகுதிகளும் உண்டு.
இந்தக் கதையைக் கேட்ட நடிகர் கிஷோர் தான் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட வேறு படத்தின் தேதிகளை மாற்றி, இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விரைவிலேயே படப்பிடிப்பைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார்.
இது 1980-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரையிலும் நடக்கும் கதை என்பதால், அந்தக் காலத்திய பின்புலத்துக்காக நிறைய இடங்களைத் தேடியிருக்கிறார்கள். கதையின்படி களத்தூர் கிராமம் என்பது தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்து உள்ளதாக இருக்கும்.
ஆனால் வளர்ச்சி அடையாத இது மாதிரியான கிராமத்தைக் கண்டுபிடிக்க சுமார் 130 ஊர்களைப் பார்த்துள்ளனர். எதுவும் திருப்தியாக அமையாமல் இறுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் புதுப்பட்டி என்கிற ஊரை தேர்வு செய்துள்ளனர்.
சீமைக் கருவைகளை வெட்டி கரி மூட்டம் போட்டு பிழைக்கும் தொழிலை மையமாகக் கொண்ட கதைக் களம் என்பதால் அந்த ஊர், அச்சு அசலாக கதைக்கு ஏற்றார்போல் பொருந்தியதாம். இது தவிர கழுகுமலை, விளாத்திகுளம், சங்கரன் கோவில், முத்தலாபுரம் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படத்தின் கதையை இசைஞானி இளையராஜாவிடம் கூறி ஒப்புதல் பெற்றுக் கொண்ட பின்புதான் படப்பிடிப்புக்குச் சென்றிருக்கிறார்கள். எடுத்து வந்த படத்தைப் பார்த்து மகிழ்ந்து வியந்து பாராட்டிய இளையராஜா படத்துக்கு தனி ஈடுபாடு காட்டி பின்னணி இசை அமைத்து இருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். இதில் ஒரு பாடலை இசைஞானியே எழுதியுள்ளார். இதையே தங்கள் படத்துக்கு கிடைத்த தரச் சான்றிதழாக நினைத்துப் பெருமைப்படுகிறது படக் குழு.
“படத்தில் நடிக்கும்போது நடிகர் கிஷோர் அதிக ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் காட்டியிருக்கிறார். அந்தக் கிராமத்தில் தங்கியிருக்க வேண்டியபோது இருந்த எல்லாவித அசெளகர்யங்களையும் பொறுத்துக் கொண்டு ஒரு சாதாரண தொழிலாளியைப் போல ஒத்துழைப்பு கொடுத்ததை மறக்க முடியாது…” என்கிறார் இயக்குநர் சரண் கே.அத்வைதன்.
‘களத்தூர் கிராமம்’ படம் ஆகஸ்டில் வெளிவரும் பொருட்டு இறுதிக்கட்டமாக மெருகேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.