‘தி போயட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் ‘ஜடா’.
‘பரியேறும் பெருமாள்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து அசத்தும் நாயகனான கதிர், இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். யோகி பாபுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஏ.ஆர்.சூர்யா, படத் தொகுப்பு ரிச்சர்ட் கெவின்.
வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங் கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து வெற்றி பெற்ற ‘பிகில்’ படத்திலிருந்து முற்றிலும் இந்தப் படம் மாறுபட்டது என்கிறார் இயக்குநர் குமரன்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து மாறி வருகிறது. பலர் இந்திய அளவில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர்களாக இருந்தாலும், சில காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். இந்த எதார்த்தமான உண்மையைக் கொண்டே இப்படத்தினை உருவாக்கியிருக்கிறோம்.
திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் அடுத்து என்னவாகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இதுவரையிலும் நீங்கள் கேள்விப்பட்டிராத 7’s கால்பந்தாட்டத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். நிச்சயமாக இந்தப் படம் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அதே நேரம் கதிர், யோகிபாபு காம்பினேசனில் படம் முழுக்க காமெடி பட்டாசாகவும் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது.