4 V எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘வஞ்சம் தீர்த்தாயடா’.
இந்தப் படத்தை 1980-களில் மதுரையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதி, இயக்குகிறார் இயக்குநர் சுசி கணேசன்.
இந்தப் படத்துக்கு ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். இதற்கான ஒப்பந்தம் இன்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக இயக்குநர் சுசி கணேசன் இன்று இசைஞானி இளையராஜாவை சந்தித்து முன் பணம் வழங்கி மரியாதை செய்தார்.
இது குறித்து இயக்குநர் சுசி கணேசன் பேசும்போது, “கிராமத்து வாழ்க்கையில் ஊரணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா சாரின் இசையையும் ஒரு உணவாக உண்டு வாளர்ந்தவன் என்ற முறையில் எனது ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு அவர் இசையமைப்பதை பெருமையாக எண்ணுகிறேன்.
என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா சார் இசை அமைக்க வேண்டும் என்றிருந்த கனவு நான் முதன்முதலாக தயாரிக்கும் படத்தில் நிறைவேறி உள்ளது.
1980-களில் நடக்கும் இந்த கதையில் இளையராஜா சார் இசை ‘படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாகவே‘ இருக்கும்.
ஒரு இசை மாமேதையுடன் இந்தப் புத்தாண்டில் இணைந்து பணியாற்றுவது எனக்குக் கிடைத்த மாபெரும் கொடுப்பினை…” என்றார்.