full screen background image

நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய்க்கு எதிராக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறிய கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் இன்று நீக்கியது.

நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காருக்கான நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பிறகு 2021 ஜூலை 8-ம் தேதியன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர் விஜய் குறித்து சில கருத்துக்களையும் வெளிப்படையாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அந்தத் தீர்ப்பில், “சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக சினிமாவில் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி விலக்கு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல… கட்டாயப் பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்திலிருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடமிருந்துதான் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது..” என்று அந்தத் தீர்ப்பில் நடிகர் விஜய்யை கடுமையாக சாடியிருந்தார். மேலும் இந்த வழக்கில் நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் அபராதமும் விதித்திருந்தார். இந்தத் தீர்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் விவாதப் பொருளானது.

இதையடுத்து இந்தத் தீர்ப்பினை எடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் நடிகர் விஜய்.

அந்த முறையீட்டில், “இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின. கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது. வழக்கு விவரங்களில் தொழிலைக் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. என்னை தேச விரோதியாக விமர்சித்து கருத்து கூறியதும் தேவையற்றது’’ என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அடங்கிய பெஞ்ச் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதியன்று விஜய் அபராத தொகை செலுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்கள்.

மேலும் அந்தக் காருக்கான நுழைவு வரியான 32 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகஸ்ட் 7-ம் தேதி செலுத்தப்பட்டுவிட்டது எனவும் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதியான எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்திருந்த எதிர்மறை கருத்துகளை நீக்கி நீதிபதிகள் இந்தத் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர்.

Our Score