full screen background image

வங்கியில் மோசடி செய்த பணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அருவா சண்ட’ படத்திற்கு தடை உத்தரவு..!

வங்கியில் மோசடி செய்த பணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அருவா சண்ட’ படத்திற்கு தடை உத்தரவு..!

‘அருவா சண்ட’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் எப்படியெப்படியெல்லாமோ திருட ஆரம்பிச்சிட்டாங்கப்பா..! இது ஒரு புதுவகையான வங்கி திருட்டு..!

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ராஜா தயாரித்துள்ள திரைப்படம் ‘அருவா சண்ட’. இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர் ராஜாவே ஹீரோவாகவும், மாளவிகா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். ‘சிலந்தி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இப்போது இந்தப் படத்திற்குத்தான் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மோசடி வழக்கின் காரணமாக தடை விதித்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் இருக்கும் ஸ்டேட் வங்கியின் மேலாளரான பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த இசக்கி ராஜா, மணிகண்டன், ஈஸ்வரன், சரண்யா, செல்லமுத்து உட்பட 10 பேர் வாகன கடன் ஆலோசகரான சித்ரா என்பவரின் ஆலோசனைப்படி சொகுசு கார்கள் வாங்குவதற்காக எங்கள் வங்கியில் 3 கோடியே 45 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றனர்.

கடன் ஆலோசகரான சித்ரா வங்கி லோன் வழங்கும் சாப்ட்வேரை ஹேக் செய்து இருக்கிறார். அதன் மூலம் கார்களை வாங்கும் நிறுவனங்களிடத்தில் நேரடியாகக் கொடுத்திருக்க வேண்டிய பணத்தை, இந்த 10 நபர்களின் வங்கி அக்கவுண்ட்டிற்கு சித்ரா டிரான்ஸ்பர் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தத் தொகையில் இருந்து கார்களை வாங்காமல் ஒயிட் கிரீன் புரொடெக்சன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ராஜா மற்றும் நடிகை மாளவிகா மேனன் ஆகியோரை வைத்து ‘அருவா சண்ட’ என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.

கார் வாங்குவதற்காக பெற்ற கடனைக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளும் வங்கிக்கே சொந்தமானதாகும்.

எனவே கடன் தொகையைச் செலுத்தாமல் அத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த மனு நிலுவையில் இருக்கும்வரையிலும் அருவா சண்ட படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.கார்த்திகேயன் ‘அருவா சண்ட’ படத்தை வருகிற 16-ம் தேதிவரையிலும் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த மனுவுக்கு இசக்கி ராஜா உட்பட 10 பேரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Our Score