‘அறம் செய்ய விரும்பு’ என்கிற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகத்தில் நடைபெற்றது.
இதில் நடிகரும், அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா, திரு.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., ராஜகோபாலன், சா.மாடசாமி பத்திரிகையாளர் சமஸ், திரு.கல்வி மணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “முதல் தலைமுறை மாணவர்கள், தன் தாய், தந்தை படிப்பறிவு இல்லாமல், படிக்க தேவையான புத்தகம், பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த அகரம் கல்வி அறக்கட்டளை.
கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது அகரம் கல்வி அறக்கட்டளை. 2006-ம் ஆண்டில் இருந்தே அகரம் கல்வி அறக்கட்டளை இதையொரு சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக செய்து வருகிறது.
பல ஏற்றத்தாழ்வுகள் கொண்டதுதான் இந்த சமூகம். எல்லா தகுதியும், திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா…? பன்னிரண்டு வருடம் படித்த மாணவன் வறுமையின் காரணமாக கடைசியில் கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலே இந்த அகரம் கல்வி அறக்கட்டளை.
2006-ம் ஆண்டில் விதைக்கப்பட்ட அகரம் கல்வி அறக்கட்டளை 2010-ம் ஆண்டில் விதையானது. அகரம் கல்வி அறக்கட்டளையில் தன்னார்வலர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகளின் திறனை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை வழி நடத்துவதுதான் இந்த அகரம் கல்வி அறக்கட்டளையின் பணி.
2010-ம் ஆண்டில் 160 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பணம் தேவையில்லை அன்பும், அக்கறையும் இருந்தாலே எல்லாத்தையும் மாற்ற முடியும் என்பதை இந்த அகரம் கல்வி அறக்கட்டளையின் பயணம் உணர்த்தியது.
வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களை ஒதுக்கி சுயநலமின்றி இரண்டாயிரம் கிராமங்களை தேர்வு செய்து பின் தங்கிய மாணவர்களை தேர்வு செய்வது தன்னார்வலர்களின் முக்கியத்துவமாக இருக்கிறது.
அவர்கள்தான் எங்களது அகரம் கல்வி அறக்கட்டளைக்கு அச்சாணியாக செயல்படுகின்றனர். இவர்களில் 90 சதவீதம் முதல் தலைமுறையினர். 60 சதவீதம் பெண்கள், 40 சதவீதம் ஆண்கள் உள்ளனர்.
அன்பும், அக்கறையும் இருப்பவர்களால் மட்டுமே மாணவர்களை படிக்க வைக்க முடியும். ஒரு குழந்தையை படிக்க வைத்தாலே அக்குடும்பத்தில் எல்லா குழந்தைகளும் படிக்கும், இது போன்ற மகிழ்ச்சியான அனுபவமும் உண்டு.
அகரம் கல்வி அறக்கட்டளைக்கு வருடம் எட்டாயிரம் விண்ணப்பங்கள் வந்தாலும் அதில் ஐநூறு பேர்களையே எங்களால் படிக்க வைக்க முடிகிறது. பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் 45 சதவீதம் அதிகம்.
இந்தியா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தப் புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக கண்கள் கலங்கும். மக்கள் என்ன வாழ்கை வாழ்கிறார்கள் என்பது புரியும். யாராக இருந்தாலும் சரி அவர்கள் மூலம் ஒரு குழந்தையின் கல்வி மேற்கொள்ளப்படுகிறதோ அப்போதுதான் எங்களது அகரம் கல்வி அறக்கட்டளை முழுமையடையும்.
பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பல அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பற்றி வெளியில் பேசினால் மட்டுமே குறைகள் தீர்க்கப்படும்.
இப்போது மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும். இலவச கல்வி என்று இருப்பதனால் சில மாணவர்களால் படிக்க முடிந்தது. மதிய உணவு என்ற திட்டத்தின் மூலம் உணவுக்காகவாது கல்வி கற்றார்கள். இப்போது காணப்படும் கல்வியானது நடைமுறைக்கு சாதகம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
உலகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மாணவர்களுக்காக கல்வி துறையில் இருப்பவர்கள் நல்லதே செய்ய வேண்டும். கல்வியின் தரம் உயர வேண்டும். மதிப்பெண்களுக்காக மட்டுமே படிக்கும் நிலை மாற வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நூலகம் இல்லாத ஊரில்கூட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலைமை முற்றிலும் மாற வேண்டும்.
இந்தப் புத்தகம் இரண்டாயிரம் மாணவர்களின் வாழ்கையை மாற்றிய தன்னார்வலர்களின் சாட்சியாக அமைந்துள்ளது…” என்றார் சூர்யா.