தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பாராட்டுக்களை குவித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் தங்களது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி, மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
‘கைதி’ படத்தில் அதிரடியான பாத்திரத்தில் நடித்து, கவனம் ஈர்த்த நடிகர் நரேன் இப்படத்தில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தினை AAAR Productions சார்பில் திரு லவன் பிரகாசன் மற்றும் திரு குசன் பிரகாசன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்திற்கு தற்போதைக்கு ‘Production No-1’ தலைப்பிடப்பட்டுள்ளது.
டிராமா, திரில்லர் வகை படமாக உருவாகும் இப்படத்தை, அறிமுக இயக்குநரான ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார்.
இத்திரைப்படம் பற்றி AAAR Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லவன் பிரகாசன் மற்றும் குசன் பிரகாசன் இருவரும் பேசும்போது, “இது நாங்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம். தொடர்ந்து சிறப்பான கதைகள் கொண்ட, ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களளை தயாரிப்போம்.
குறிப்பாக புத்தம் புது ஐடியாக்களுடன் போராடும் புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இயக்குநர் ஸாக் ஹாரிஸ் லண்டனில் மிகப் பெரிய கல்லூரியில், திரைப்பட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
மேலும் தமிழ் சினிமாவில் பல்வேறு திறன்மிகு கலைஞர்களுடன் வேலை செய்துள்ளார். இத்திரைப்படத்தை மிக தரமான படைப்பாக உருவாக்குவார் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தமிழ் சினிமாவில் தங்களது தனித் திறமையால் பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஆகியோர் எங்கள் படத்தில் இணைந்ததில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. ஏற்கனவே அவர்கள் தமிழ் சினிமாவில், மிக தரமான படங்களில், வலுவான கதாப்பாத்திரங்களில் நடித்து, பெரிய அளவில் பாராட்டினைப் பெற்றவர்கள்.
மேலும் அனைவராலும் கொண்டாடப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி இருவருரின் கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்தது. நடிகர் கதிர் இப்படத்திற்கு பிறகு மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார்.
மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக மிகப் பெரிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
2021 வருட தொடக்கத்தில் படத்தை துவக்கி, 2021 கோடை காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
இப்படம் சென்னை மற்றும் கேரள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது…” என்றார்கள்.