ஒரு காட்சியிலேயே தனக்கான இடத்தை தக்கவைப்பதும், தன்னை திரும்பி பார்க்க வைப்பதும் வெகு சில நடிகர்களே. அத்தந்திரத்தை அறிந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் கருணாகரன்.
இந்த வருடத்தில் ‘ஜிகர்தண்டா’, ‘யாமிருக்க பயமே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’, ‘லிங்கா’ என வெற்றி படங்களை தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் ‘கப்பல்’படத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் நடிகர் கருணாகரன்.
‘கப்பல்’ படம் பற்றி பேசிய கருணாகரன், “இந்தப் படத்தில் ‘கனகா’ என்னும் கிராமத்து இளைஞனாக வருகிறேன். காதல், கல்யாணம் ஆகிய விஷயங்களை அறவே வெறுக்கும் நான் ஹீரோ வைபவ், ஹீரோயின் சோனம் பஜ்வா காதலுக்கு எதிராய் சிறு சிறு திட்டங்கள் தீட்டும் கூட்டத்தின் தலைவனாக நடித்திருக்கிறேன். ‘ஊரு விட்டு ஊரு வந்து…’ பாட்டுக்கு உயிர் கொடுத்து ஆடியது மறக்க முடியாத ஒன்று.
இந்தப் படத்தில் வைபவ்-சோனம் பஜ்வா ஜோடியை பிரிக்கும் பாவமோ என்னமோ.. எனக்கு கல்யாணமான மறுநாள் காலை 5 மணிக்கே இந்தப் படத்தோட ஷூட்டிங்கை வெச்சிடாங்க. ‘ஹனிமூன் எங்க?’ என்று கேட்டவங்ககிட்ட ‘எல்லாம் கப்பல்’லதான்னு சொல்லி சமாளிச்சேன். ஆனா நடந்தது என்னவோ ‘தனிமூன்’தான்..” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
“இப்படத்தை பார்த்த டைரக்டர் ஷங்கர் சாரும், அவரோட மனைவியும் என்னை வெகுவாக பாராட்டினார்கள். நானும் ’S’பிக்சர்ஸ் படத்துல நடிச்சிருக்கேன்னு சட்டை காலரை தூக்கி விட்டுக்கலாம். இந்தக் கப்பலில் எனக்கும் இடமளித்த ‘I’ ஸ்டுடியோஸ் நிறுவனத்தார்க்கு ‘காசு பணம் துட்டு Money’ வர வாழ்த்துக்கள்..” என்கிறார் கருணாகரன்.