வித்தியாசமான கதைக் களங்களில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைத் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கைதி’.
நடிகர் கார்த்தியின் அசாத்திய நடிப்பில் உருவான இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் நரேன், அர்ஜுன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முன்னணி நாயகனான கார்த்தி நடித்த இந்தப் படத்தில் நாயகி கிடையாது. பாடல்கள் கிடையாது உள்ளிட்ட பல புதுமையான விஷயங்கள் இந்தப் படத்தில் கையாளப்பட்டது. கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் ‘கைதி’ என்பது குறிப்பிடத்தக்கது.
2015, அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது என்பது மிகவும் அபூர்வம். அது இந்தக் ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது.
இதன் தொடர்ச்சியாக தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தக் ‘கைதி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இதன் ஹிந்தி வடிவம் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.
தற்போது மேலும் ஒரு மைல் கல்லாக ரஷ்யாவிலும் இந்தக் ‘கைதி’ படம் பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது.
‘உஸ்னிக்’ என்ற பெயரில் ரஷ்யாவின் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் இத்திரைப்படம் ரஷ்ய மொழியில் வெளியாகிறது.
தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இதற்காக பல்வேறு விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. இந்த ‘உஸ்னிக்’ படத்தினை ரஷ்யாவில் ‘4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ்’ என்ற பட வெளியீட்டு நிறுவனம் வெளியிடுகிறது.
100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்த ‘கைதி’ திரைப்படம், ரஷ்யாவிலும் பிரம்மாண்டமான முறையில் வெளியாவதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.