ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஜய் சேதுபதி – பன்னீர்செல்வம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
எப்போதுமே சவாலான கதாபாத்திரங்களையும், அதே சமயத்தில் வலுவான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி, சமீபத்தில் இயக்குநர் பன்னீர்செல்வம் கூறிய கதையை கேட்ட அடுத்த கணமே, அதில் நடித்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கும் ஒரு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். நல்ல கதையம்சம் நிறைந்த படங்களை இயக்கும் ஒரு இயக்குநர் பன்னீர் செல்வம். நட்சத்திர நாயகனாக திகழும் ஒரு கதாநாயகன் விஜய் சேதுபதி. ரசிகர்களின் ரசனைகளை முழுவதும் பூர்த்தி செய்வதற்கு தேவையான இந்த மூன்று சிறப்பம்சங்களும் இந்த படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 13-ம் தேதி அன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் பிரபல இயக்குநர் லிங்குசாமி கலந்து கொண்டு வாழ்த்தினார்.
“ஏ.எம்.ரத்னம் சார் மற்றும் விஜய் சேதுபதி என இரண்டு மிக பெரிய தூண்களோடு நான் கை கோர்த்து இருக்கிறேன். ஒரு வளர்ந்து வரும் இயக்குநருக்கு இதைவிட பெருமை என்ன இருக்கிறது.? இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தன்னுடைய எழில்மிகு காட்சிகளால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி எங்கள் படத்தில் பணியாற்றுகிறார். தற்போது மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. நிச்சயமாக விஜய் சேதுபதியின் அசாத்திய நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படமாக இந்த படம் இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் பன்னீர்செல்வம்.









