இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பற்றிய நினைவலைகளை இந்த வாரத்திய ‘ஜூனியர் விகடனி’ல் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
அது இங்கே :
“வடுகபட்டியில் என் கால்சட்டை நாட்களில் எனக்கு ஒரு கனவு இருந்தது. கலைஞர் எம்.ஜி.ஆர் – சிவாஜி – பி.சுசீலா – கே.பாலசந்தர் என்ற ஆளுமைகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. ஆனால் என் கனவுக்குரிய பாலசந்தர் என்னைச் சந்திக்க தொலைபேசியில் அழைப்பார் என்று நான் நினைக்கவில்லை.
கமல்ஹாசனின் ‘ராஜபார்வை’யில் ‘அந்தி மழை’ எழுதப்பட்ட நேரம்… ‘புதிய திரைமொழியோடு ஒரு கவிஞன் தமிழ் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறான்’ என்ற செய்தியை பாலசந்தருக்குச் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். அப்போது சொந்தமாக தொலைபேசியோ, வாகனமோ இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்த எனக்கு மாடி வீட்டுத் தொலைபேசியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. ‘உங்களுக்கு ஒரு போன்; உடனே வாருங்கள்’ என்று. நான் சென்று எடுத்தால் எதிர்முனைக்குரல் ‘நான் பாலசந்தர் பேசுகிறேன்’ என்றது. நான் நெகிழ்ந்தே போனேன். ‘நாளை என் வீட்டுக்கு வந்து சந்திக்க முடியுமா?’ என்று கேட்டார். மகிழ்ச்சியோடு ‘வருகிறேன்’ என்றேன்.
மறுநாள் காலையில் சாலையில் வந்து பார்த்தால் சென்னையில் முழு அடைப்பு. எந்த வாகனமும் ஓடவில்லை. ட்ரஸ்ட்புரத்திலிருந்து மயிலாப்பூர் வாரன் சாலைக்கு 35 நிமிடத்தில் நடந்து சென்றேன். வியர்வையோடு என்னைப் பார்த்த பாலசந்தர் வியந்து போனார். பாட்டெழுத வாய்ப்பு வரும் என்று போனால் வசனம் எழுத வாய்ப்பு தந்தார் பாலசந்தர்.
‘பாரதியார் வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். கமல்ஹாசன்தான் பாரதியார். நீங்கள் வசனம் எழுத வேண்டும்’ என்றார். அச்சத்தோடு ஒப்புக் கொண்டேன்… பாரதியார் குறித்த 300 நூல்கள் திரட்டி இரவு – பகல் குறிப்பெடுத்தேன். ஆனால் அந்தப் படம் தயாராகவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., பாரதியார் படத்தை அரசே தயாரிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில் பாலசந்தர் சோர்ந்து போனார். பின்னாளில் புதுக்கவிதையில் பாரதியாரின் சரிதை ‘கவிராஜன் கதை’யாக என்னால் எழுதப்பட்டதற்கு இயக்குநர் சிகரமே முழுமுதற் காரணம்.
அவர் மகா ரசிகர். குழந்தையை ‘இடுப்பிலுள்ள நந்தவனம்’ என்று ‘தண்ணீர் தண்ணீர்’ படத்துக்கு நான் எழுதியதை திரையுலகில் அவர் சொல்லாத ஆளில்லை. திருத்தம் சொன்னாலும் அது நெற்றிக்குப் பொட்டு வைத்தது மாதிரி நேர்த்தியாக இருக்கும்.
‘சிந்து பைரவி’யில் –
‘கவல ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேர வேணும்
அதுக்கும் பாட்டுப் படி
எண்ணியே பாரு
எத்தன பேரு
தங்கமே நீயும்
தமிழ்ப் பாட்டுப் பாடு’ – என்று எழுதியிருந்தேன்.
ஒற்றெழுத்தை அவர் ‘ம்’ என்று மாற்றினார். ‘தமிழ்ப் பாட்டும் பாடு’ என்று வருகிறபோது அது இரண்டு மொழிப் பாடல்களுக்கும் கட்டப்பட்ட பாலமாகிவிட்டது. அவர் தொழில் நுட்பக் கலைஞர் மட்டுமல்ல; தமிழ்நுட்பக் கலைஞர்.
அவர் கற்றுக் கொண்டேயிருந்தார். தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தார். தெரியாத செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் தயங்கியதே இல்லை.
‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்திற்கு ‘ஆவாரம் பூவு’ என்று ஒரு பாட்டு எழுதியிருந்தேன். ‘ஆவாரம் பூ என்றால் என்ன..?’ என்று கேட்டார். அது குறித்த விவரங்களையெல்லாம் விளக்கினேன். படம் பார்க்கும்போது பார்த்தால் ஒரு கயிற்றுப் பாலத்தில் வண்டி வண்டியாகக் கொண்டுவந்த ஆவாரம் பூக்களைக் கொட்டி நிரப்பியிருந்தார். பாட்டு வரிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை உள்ளவர்.
‘புன்னகை மன்னன்’ படத்தில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டில் ‘ஆரிரரோ யார் இவரோ?’ என்ற வரியை படமாக்கும்போதும் கேமராவையே தூளி கட்டி ஆட விட்டிருப்பார்.
பாலசந்தர் அவர்களுக்கு என் திரைவாழ்க்கை நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் வெற்றி தோல்வி என்று எது வந்தாலும் அதை சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் காலம் கொடுத்திருக்கிறது. இனி பெறப் போகும் எதுவும் வெற்றியுமில்லை; அடையப் போவது எதுவும் தோல்வியும் இல்லை.
ஆனால் 90-களில் நான் தோற்றுப்போய்விட்டதாக துவண்டு கிடந்தேன். 92-ல் ஒரே ஆண்டில் பாலசந்தரின் ‘கவிதாலயா’ மூன்று படங்களைத் தயாரித்தது. ‘வானமே எல்லை’ – ‘அண்ணாமலை’ – ‘ரோஜா’. மூன்று படங்களுக்கும் இயக்குநர்கள் வேறு, இசையமைப்பாளர்கள் வேறு – நடிகர்கள் வேறு. ஆனால் பாடலாசிரியர் மட்டும் ஒருவன் வைரமுத்து என்று எனக்குப் பெருவாய்ப்பு வழங்கியிருந்தார் பாலசந்தர்.
அந்த மூன்று படங்களுக்கும் என் உயிர் மூச்சையே ஊற்றி எழுதினேன். மூன்றும் வெற்றி பெற்றன. நான் இன்றுவரைக்கும் தொடரும் என் பாட்டுப் பாதை அவர் போட்டுக் கொடுத்தது.
கமல் மீது காதல் அவருக்கு. தன்னை விட்டு வளர்ந்து வெகுதூரம் போய்விட்டதில் ஒரு சின்ன ஆதங்கமும் அவருக்கிருந்தது. ‘அவன் நாத்திகனாகவே இருக்கட்டும்; அதை ஏன் வெளியே சொல்லி அலைகிறான்..?’ என்று என்னிடம் அவரைச் செல்லமாகக் கோபித்ததுண்டு. ‘அவர் கூப்பிட்டு வயலும் வாழ்வும் எடுத்தாலும் நான் நடிப்பேன்; அவர் மீது நான் கொண்ட பக்தி அப்படி’ என்று கமலும் என்னிடம் மனம் திறந்திருக்கிறார்.
‘ரஜினியை எப்படி தேர்வு செய்தீர்கள்..?’ என்று அவரிடம் ஆர்வமாக நான் கேட்டிருக்கிறேன். ‘கனவு மிதக்கும் அந்தக் கண்கள்… கலகம் செய்யும் கண்கள்… அதுதான் ரஜினியை நான் தேர்வு செய்யக் காரணம்’ என்று பல முறை சொல்லியிருக்கிறார்.
எங்கள் வாழ்வுக்குப் பக்கத்திலேயே வரமாக வந்த மாபெரும் கலைஞன் மறைந்துவிட்டார் என்ற செய்தி இதயத்தை உடைத்தெறிந்துவிட்டது. சில மரணங்கள் வெறும் செய்திகள். சில மரணங்கள் வாழ்வின் கடைசிச் சம்பவங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் பாலசந்தரின் மறைவு என்பது என் தகப்பன் இரண்டாம் முறை இறந்து போனதுபோல் துக்கமானது.
அன்று மாலை பாலசந்தர் இல்லத்தில் அவரது பூத உடலுக்குப் பக்கத்தில் ரஜினியும் நானும் கவிதாலயா நடராஜனும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், மகன் மதன் கார்க்கியும் இரண்டு மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து துக்கம் பேசிக்கொண்டிருந்தோம்.
மறுநாள் பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு வந்துவிட்டார் ரஜினி. மயான மேடைக்கு அருகே ரஜினியும், நானும், தங்கை ஐஸ்வர்யாவும் சோகம் கப்பிப்போய் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ரஜினி என்னைப் பார்த்துக் கேட்டார்.. ‘சாருக்கு நான் வாய்க்கரிசி போடவேண்டுமே..?’
நான் சம்பந்தப்பட்ட ஒரு நண்பரை அழைத்து அதற்கு ஏற்பாடு செய்து ரஜினியை வெளியே அனுப்பிவைத்தேன். இயக்குநர் சிகரத்துக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு மீண்டும் எங்களை வந்தடைந்தார். ஒரு தகப்பனாருக்கு மகன் செய்ய வேண்டிய கடைசி மரியாதையை செய்துவிட்ட நிறைவோடு ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார்.
பாலசந்தர் மார்பின் மீது கற்பூரம் கொளுத்தப்பட்டது. அது கொழுந்துவிட்டு குபுகுபுவென்று எரிந்தது. அந்த நெஞ்சில் எரிந்த 60 வருட அக்கினிதானே தமிழ் சினிமாவைப் புடம் போட்டுக் கொடுத்தது. அந்தக் கற்பூரத் தீ அணைந்துவிடலாம். அந்தக் கலைத் தீ அணையுமா? என்று கருதிக்கொண்டு கண்களில் நீர்முட்ட நின்றபோது…
‘தடக்’கென்ற சப்தத்தோடு உள் எரிவாயில் சென்று விழுந்தது பாலசந்தரின் உடல். உடனே திரை விழுந்தது; இரும்புத்திரை. கனத்த நெஞ்சோடு கலங்கிய கண்களோடு கலைந்தோம். பாலசந்தரின் கலை கலையப்போவது இல்லை..”
நன்றி : ஜூனியர்விகடன்