விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள திரைப்படம் ‘திமிரு புடிச்சவன்’.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஆதிரா, சிந்துஜா, வினோத், தீனா, கதிர், வினோத், செந்தில் குமரன், நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா, ஜாக் ராபின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் கணேஷா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ் பேசுகையில், “விஜய் ஆண்டனி சாருக்கு இது 9-வது படம், எனக்கும் இது 9-வது படம். அவருடன் இது எனக்கு 4-வது படம். திமிரு இருந்தாதான் நம்பிக்கை இருக்கும். நம் மூதாதையர்கள் மிகவும் கட்டுக் கோப்பாக இருந்தவர்கள், திமிரோடு இருந்தவர்கள். அதை கொஞ்சம், கொஞ்சமாக நம்மிடம் இருந்து எடுத்து விட்டார்கள். திமிரு என்பது நம் உரிமைகளை தட்டிக் கேட்பது. இந்த பெயரை தலைப்பாக வைக்க ஒரு திமிர் வேண்டும். அது விஜய் ஆண்டனி சாருக்கு இருக்கிறது…” என்றார்.
நடிகர் சம்பத் ராம் பேசும்போது, “இந்த ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன். விஜய் ஆண்டனி சார் திரையில் எத்தனையோ பேருக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். என்னையும் இந்த படத்தின் மூலம் அடுத்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறார். இரண்டாம், மூன்றாம் நிலையில் இருந்த தீனாவை மெயின் வில்லனாக்கியிருக்கிறார். அவரின் நம்பிக்கை நிச்சயமாக ஜெயிக்கும்…” என்றார்.
நடிகை ஆதிரா பேசுகையில், “எத்தனையோ நடிகர்கள், பெரிய ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் விஜய் ஆண்டனி சார் ரொம்பவே அர்ப்பணிப்பு உடையவர். மிகவும் எளிமையானவர். நிறைய பேரை திரையுலகில் தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து இதை செய்வார்…” என்றார்.
நடிகை சிந்துஜா பேசுகையில், “தமிழ் சினிமாவில் ஒரு திருநங்கையை ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த விஜய் ஆண்டனி, கணேஷா சாருக்கு நன்றி. முதல் திருநங்கை சப் இண்ஸ்பெக்டர் ப்ரீத்திகா அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எல்லோரும் பயந்து கண்டு கொள்ளாத ஒரு விஷயத்தை எந்தவித, தயக்கமும் பயமும் இல்லாமல் அதை கையாண்டு முடித்து வைத்தார். திருநங்கைகள் வாழ்வில் இந்த படம் முக்கிய திருப்பமாக இருக்கும்…” என்றார்.
தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா பேசும்போது, “இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், கணேஷா மிகச் சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். எந்தவொரு போலீஸ் கதையிலும் சொல்லப்படாத நிறைய விஷயங்களை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார். 25 காட்சிகள் நிச்சயமாக கைதட்டல் வாங்கும். மிகப் பெரிய நடிகர் பட்டாளத்தை இந்த படத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். 4 பசங்க மிரட்டியிருக்கிறார்கள். அனைவருமே தங்கள் கதாபாத்திரங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியாகும் தகுதி இந்த படத்துக்கு நிச்சயம் இருக்கிறது. கடந்த 3 மாத காலமாகவே தமிழ் சினிமாவுக்கு நல்ல நேரம். அதை இந்த படமும் தொடரும்…” என்றார் நம்பிக்கையுடன்.
நாயகி நிவேதா பெத்துராஜ் பேசும்போது, “படத்தின் கதையை சொல்லும்போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார். அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன், திடீரென மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். டப்பிங்கில் படத்தை பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. படம் முழுக்க புதுசு, புதுசா நிறைய செய்ய சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இந்த ‘திமிரு புடிச்சவன்’ இருக்கும்..” என்றார்.
படத்தின் இயக்குநரான கணேசா பேசும்போது, “ஃபாத்திமா மேடம் 7 மணி நேரம் கதையை கேட்டார். நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து முழுக் கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார். நான் கேட்ட எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார்.
ஒரு தயாரிப்பாளர் ‘கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குநரை வச்சி படத்தை பண்ணலாம்’ என சொன்னார். ஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர்தான் நல்ல படத்தை கொடுப்பார் என சொல்லி நான்தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
நான் பெரிய நடிகர்களை கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம் படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது…” என்றார் இயக்குநர் கணேஷா.
நாயகன் விஜய் ஆண்டனி பேசுகையில், “தனி மரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவுதான். எந்த ஒரு படத்திலும் இயக்குநர்தான் ஹீரோ. இந்தப் படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். என்னுடைய கடந்த இரண்டு படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குநருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை. இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன்…” என்றார்.
இந்த சந்திப்பில் விசுவல் எஃபெக்ட்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடன இயக்குநர் தஸ்தா, பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகர்கள் கதிர், வினோத், செந்தில் குமரன், நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா, ஜாக் ராபின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.