full screen background image

தீராக் காதல் – சினிமா விமர்சனம்

தீராக் காதல் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G.R.சுரேந்தர்நாத் இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

ரொமான்டிக், ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் மொழியின் இலக்கணம் மீறாத தலைப்பில் இருந்தாலும், வாழ்க்கை இலக்கணத்தை மீறத் துடிக்கிற கதை.

நம் சமூகத்தில் முன்பெல்லாம் எக்ஸ் லவ்வர்களை சந்திப்பது மிகவும் அரிது. ஆனால் இந்த ஜெனரேஷனில் மனைவியைவிட, எக்ஸ் லவ்வருடன்தான் அதிகமான டச்சில் இருக்கிறார்கள். அந்த டச் எல்லை மீறினால் இருவரின் குடும்பத்துக்குள்ளும் என்ன நடக்கும் என்பதுதான் இ்ந்தப் படத்தின் கதை.

ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷூம் கல்லூரி காலத்தில் காதலர்கள். இரண்டு வீட்டாரின் எதிர்ப்பினால் காதல் கை கூடாமல் தனித்தனியே பிரிந்துவிட்டனர். தற்போது ஜெய்க்கு ஷிவதா நாயருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அமைதியாக. சந்தோஷமாக உள்ளனர் இத்தம்பதியினர்.

இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் பார்த்து வைத்த அம்ஜத்தை திருமணம் செய்திருக்கிறார். அம்ஜத் மிகவும் முரட்டுத்தனமானவராகவும், கோபக்காரராகவும் உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷை அடித்து, உதைத்து சித்ரவதை செய்கிறார்.

இந்த நேரத்தில் ஆபீஸ் வேலையாக மங்களூருக்கு ரயிலில் செல்லும் ஜெய், வழியில் பாலக்காடு ரயில் நிலையத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார். பிரிந்தவர் கூடினால் மகிழ்ச்சி திளைக்குமே.. அதிலும் பிரிந்த காதலர் கூடினால்..?

மங்களூரில் முன்னாள் காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் தொடாமலேயே டீசண்ட்டாக தங்களது காதல் நினைவுகளை அசை போட்டுவிட்டு ஊர் திரும்புகின்றனர்.

சென்னை வந்தவுடன் ஐஸ்வர்யா, ஜெய்யை திரும்பத் திரும்ப தொடர்பு கொள்ள.. ஜெய் பயந்து போய் ஐஸ்வர்யாவின் நம்பரை பிளாக் செய்துவிடுகிறார். ஆனால், ஐஸ்வர்யாவின் வீட்டில் அம்ஜத்துடனான சண்டை உச்சக்கட்டத்துக்குப் போகிறது.

டைவர்ஸ் ஒன்றுதான் ஒரே வழி என்று நினைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டைவிட்டு வெளியில் வந்து ஹாஸ்டலில் தங்குகிறார். தற்போது தனக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டுமே என்றெண்ணி ஜெய்யை அணுக நினைக்கிறார். ஜெய்யோ அருகில் வர மறுக்கிறார்.

இதனால் ஐஸ்வர்யா கோபம் கொண்டு ஜெய் இருக்கும் அபார்ட்மெண்ட்டில் அவருக்கு எதிர்வீட்டிலேயே குடி வருகிறார். இது ஜெய்க்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. மேலும் ஷிவதாவுடனும் ஐஸ்வர்யா பழகத் துவங்க.. இருதலைக்கொள்ளி எறும்பு போல தவியாய் தவிக்கிறார் ஜெய்.

ஒரு கட்டத்தில் ஜெய்-ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பு ஷிவதாவுக்குத் தெரிய வர, அவர் கோபம் கொண்டு தன் அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறார். தனியே தவித்துப் போய் நிற்கிறார் ஜெய்.

ஒரு பக்கம் கடல்.. மறுபக்கம் நெருப்பு என்கிற கதையாக முன்னாள் காதலிக்கும், மனைவிக்குமான பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ஜெய்யின் கதை, இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்தக் ‘தீராக் காதல்’ படத்தின் சுவையான கதை.

ஜெய் தனது இயல்பான தோற்றத்திற்கும், நடிப்பிற்கும் பொருத்தமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அன்பான கணவனாகவும், செல்லமான அப்பாவாகவும் வீட்டுக்குள் வளைய வரும் அவரது அந்த அமைதியான நடிப்பு மிகவும் அருமை.

முன்னாள் காதலியான ஐஸ்வர்யாவை சந்திக்கும்போது, பழைய காதல் நினைவுகளுடன் பேசும் காதலனாகவும் ஜெய்யின் நடிப்பு நிறைவுதான். இதையும் தாண்டி இரண்டு பேருக்குமிடையில் மாட்டிக் கொண்டு பரிதவிக்கும் அந்தச் சிக்கல் சிங்காரவேலனாக மாறும்போது தன் நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். பெறுகிறார்.

இரண்டாம் பாதியில் திரைக்கதையின் பதற்றமான காட்சிகளுக்கேற்ப தன்னால் முடிந்த அளவுக்கான எமோஷனல் நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வீட்டுக்குள் ஐஸ்வர்யாவை மறைத்துவைத்துவிட்டுத் தவிக்கும் காட்சியில், ஐயோ பாவம் என்று நாமே சொல்லும் அளவுக்கு இருக்கிறது அவரது நடிப்பு.

ஐஸ்வர்யா ராஜேஷ்தான் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். அவரது ஆரண்யா’ கதாபாத்திரம்தான் மொத்தப் படத்திற்கும் முதுகெலும்பு. முதலில் சில காட்சிகளில் நம்மிடமிருந்து  பரிதாப உணர்வைப் பெற்ற ஐஸ்வர்யா, இடைவேளைக்குப் பின்பு வில்லித்தனமாக மாறும்போது கொஞ்சம் நமது கண்டனத்தையும் பெறுகிறார். ஆனால், இறுதியில் தன்னை உணர்ந்து ஜெய்-வந்தனாவை விட்டு விலகிப் போகும்போது மொத்தக் கை தட்டலையும் வாங்கிச் சென்றுவிட்டார்.

அவர் தனது கணவனிடமிருந்து பெரும் அடி, உதைகளைப் பார்க்கும்போது பரிதாபமே ஏற்படுகிறது. கணவரைப் பிரிந்து வாழும் தனிமையின் வலியிலிருந்து விடுபடப் போராடும்போது தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்.

ஐஸ் தனது கொடுமைக்கார கணவனான அம்ஜத் கானை அடிக்கும்போதும், ஜெய்யின் அபார்ட்மெண்ட்டு்க்கே குடி வரும்போதும் தியேட்டரில் கை தட்டல் தூள் பறக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய ஆக்சன் நடிப்பும், சைலண்ட் நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறது.

வந்தனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிவதா அழகு தேவதையாக ஜொலித்திருக்கிறார். தனது கதாப்பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கச்சிதமாக வழங்கியிருக்கிறார் ஷிவதா. அலுவலகப் பணியின் அழுத்தத்தையும் மீறி வீட்டுக் கடமைகளையும் செய்ய மறுக்காத குடும்பத் தலைவியாக ஷிவதா தனது பாந்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். தான் இரண்டாம் முறையாக கர்ப்பந் தரித்திருப்பதை ஜெய்யிடம் சொல்ல முயலும் காட்சியில் அவரது நடிப்பு சிறப்பு. ஐஸ்வர்யாவை போலவே நடு ரோட்டில் ஐஸ்-ஜெய் கட்டிப் பிடிக்கும் காட்சியில் தனது முகபாவனையிலேயே கை தட்டல்களைப் பெற்றுள்ளார்.

அஜ்மத் கொடுமைக்கார, மூர்க்கத்தனமான கணவனாக பயம் வரும் அளவுக்கு நடித்துள்ளார். குழந்தை ஆர்த்தியாக வ்ரிதி விஷாலும் தன் சுட்டித்தனத்தாலும், வசீகரமான பேச்சாலும் நம்மைக் கவர்கிறார். “ராத்திரி பெட்ல படுக்குறேன். காலைல பார்த்தா தரைல படுத்திருக்கேன். எப்படி?” என்று குழந்தை ஆர்த்தி அப்பாவியாய் கேட்கும் கேள்வி இப்போது நாடு முழுவதும் கேட்கப்படும் கேள்விதான்..!

ஜெய்யின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீக்கும்  சில கை தட்டல்கள், சிரிப்பலைகளுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமளிக்கிறது. மங்களூருவின் அழகையும், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதாவின் அழகையும், நடிப்பையும் அட்சரப் பிசகாமல் கேமிராவில் பதிவு செய்திருக்கிறார். ஷிவதாவின் அழகு கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருக்கிறது.

சித்து குமாரின் இசையில் இரண்டு பாடல்கள் இருந்தும் ‘உசுராங்கூட்டில்..’ என்ற பாடல் மட்டும் கேட்க வைக்கிறது. பாடல்களை விடவும் பாடல் காட்சிகளில் காதலை கடத்தும் மாண்டேஜ் காட்சிகளை பெரிதும் ரசிக்க முடிகிறது

படத் தொகுப்பாளர் பிரசன்னா முதல் பாதியைக் இன்னும் சிரத்தையுடன் தொகுத்திருக்கலாம். ஜெய், ஷிவதா, ஐஸ்வர்யா மூவரின் அலுவலகங்களும் ஒன்று போல காட்சியளிப்பது ஏன் என்று தெரியவில்லை.

கதாசிரியர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் பல இடங்களில் அழுத்தமாகவும், இப்போதைய யூத்துகளுக்குப் பிடிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. சிறிது பிசகினாலும் கதை கந்தலாகிவிடும் அளவுக்கு இருந்த முக்கோணக் காதலை கடைசியில் இரண்டாக்கி நேர் செய்திருக்கிறார் வசனகர்த்தா. அவருக்கு நமது பாராட்டுக்கள்.

முன்னாளைய காதலர்கள் இந்நாளில் சந்தித்துக் கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள்தான் இந்தப் படத்தின் ஒன் லைன். இதே பார்மெட்டில் பல திரைப்படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன என்றாலும் இந்தப் படம் லேட்டஸ்ட் நேட்டிவிட்டியோடு சொல்லப்பட்டிருப்பதால் தப்பித்தது எனலாம்.

முதற் பாதியில் முன்னாள் காதலர்கள் பிரிந்தது தொடர்பாகவும், அவர்களிடையே இன்னும் காதல் இருக்கிறதா.. இல்லையா என்பது பற்றியே திரைக்கதை ஓடுவது சற்று அயர்ச்சியை தந்துவிட்டது.

ஜெய் தனது முன்னாள் காதலியுடனான பேச்சைத் தொடர்வதற்காக நடு இரவில் வந்தனா பேச மறுப்பதை காரணமாக்கிக் காட்டுவதும், அம்ஜத்தின் டார்ச்சரை தாங்கிக் கொள்ள முடியாமல் தனக்கு ஆறுதலுக்கு ஒரு ஆள் தேவை என்பதால் ஐஸ்வர்யா, ஜெய்யை நாடுவதுமாய் திரைக்கதை அமைத்திருப்பது நேர்மையானதுதான்.

அம்ஜத்தின் மூர்க்கத்தனம் ப்ளஸ் முட்டாள்தனத்தைக் காட்டுவதற்காக ஐஸ்வர்யாவை அவர் அடித்து, உதைக்கும் காட்சியை இப்படி ராவாக வைத்திருப்பது கொடுமையாக உள்ளது. இதைக் காட்சிப்படுத்தியவிதம் நம் மனதை பெரிதும் தொந்தரவு செய்கிறது. இதை இயக்குநர் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

தான் படும் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள ஒரு ஆள் தேவை.. அது தன் முன்னாள் காதலன் ஜெய்யால்தான் முடியும் என்று ஐஸ்வர்யா சொல்வது ஒரு ஐடி நிறுவனத்தில் பொறுப்பான வேலையில் இருக்கும் ஆரண்யா என்ற கதாப்பாத்திரம் செய்யக் கூடியதல்ல.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கும் தன் முன்னாள் காதலருக்குத் தொல்லைகள் கொடுப்பதும், அவரை பின் தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்வதெல்லாம் முட்டாள்தனமாகவே தோன்றுகிறது. இதற்கு நியாயம் கற்பிப்பதுபோல “எனக்கு புடிச்ச வாழ்க்கையை கௌதம் மூலமாத்தான் அமைக்க முடியும். அதை நான் விரும்புறது தப்பில்லையே’ என்று ஐஸ்வர்யா பேசுவது  நியாயமற்ற விஷயமே.

இப்படி முற்பாதியில் காதலை இழந்ததால் பாதிக்கப்பட்டவராக வந்து நம் பரிதாபத்தைச் சம்பாதிக்கும் ஐஸ், பிற்பாதியில் நம் அனைவருக்கும் வில்லியாக மாறுவது அவர் மீது பரிதாப உணர்வை வர விடாமல் செய்துவிட்டது.

ஜெய்யும், ஐஸூம் சற்று எல்லை கடந்திருந்தால்கூட இந்தப் படம் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதையாகியிருக்கும். அதோடு ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கும் இன்னொரு பெண்ணின் ஆசை என்கிற ரீதியில் ஐஸின் கதாப்பாத்திரம் பார்க்கப்பட்டிருக்கும்.

ஆனால் அப்படி செல்லாமல் மிகுந்த கவனத்துடன் ஒழுக்க நெறிகளையூட்டி, இரு தரப்பினரின் கண்ணியத்தையும் மீறாத வகையில் படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநரின் திறமை பாராட்டுக்குரியது.

முதல் பாதியில் திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாகவும், இரண்டாம் பாதியில் கை தட்டலை விடாமல் வாங்கிக் கொண்டேயிருக்கும்படியாக திரைக்கதையையும் அமைத்திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதி போலவே, முதல் பாதியையும் வடிவமைத்திருந்தால் படம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும்.

கல்யாணமானவர்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்த்தால் தன் எக்ஸ் உடன் நாகரீகமாகப் பழகுவார்கள். மனைவியுடன் அன்பாக இருப்பார்கள். இது ஒன்றுதான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் நல்ல பெயர்.

RATING : 3.5 / 5

Our Score