full screen background image

மணிரத்னத்திடம் பட்டபாடு – ரஜினி சொன்ன ரகசியம்.,!

மணிரத்னத்திடம் பட்டபாடு – ரஜினி சொன்ன ரகசியம்.,!

நேற்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நடை பெற்றது. 

இந.த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “இந்தப் படத்திற்கு 3 கதாநாயகர்கள் கல்கி, சுபாஸ்கரன், மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் கதையை அப்போது வாங்க பெரிய கூட்டம் இருந்தது. அப்போது இந்த கதையை எடுக்க முடியவில்லை. Part 1, part 2 என்று அப்போது கிடையாது.

சுபாஸ்கரன் இந்த மாதிரி படத்தை எடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். லண்டனில் வசிக்கும் சுபாஸ்கரன், ஒரு கால் செய்து UK பிரதமரை சந்திக்க முடியும். அந்த மாதிரி செல்வாக்கில் உள்ள அவர் இந்த படத்தை இங்கே எடுக்க காரணம் மணிரத்னம் என்னும் அசுரத்தனமான இயக்குநர் என்ற நம்பிக்கைதான்.

பாம்பேயில் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மணிரத்னம் வந்தால் எழுந்து நிற்பார்கள். அவரால் மட்டுமே இந்த படத்தை எடுக்க முடியும். முடிந்தது.

தளபதி படம் பண்ணும்போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். அப்போது ஹிந்தி படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.

மணி சாருடன் முதல் காம்பினேசன். முதல் நாள் படப்பிப்புக்கு சென்று, நல்லா பளிச்சின்னு மேக்கப் போட சொன்னேன். ஏன்னா.. மம்முட்டி ஆப்பிள் நிறம் போல் இருப்பார்.. நான் கருப்பாக இருந்தேன்.

என் ஸ்டைலில் மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்டியுமை கொண்டு வர சொன்னேன். எனக்கு லூசா பேண்ட், பனியன், சப்பல் கொடுத்தார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி.. நான் வழக்கமாக அணியும் பேண்ட், சர்ட் அப்புறம் நான் போட்டிருந்த வாக்கிங் ஷூ அணிந்து கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு போனேன்.

மணி சார் என்னை பாத்ததும்.. “என்ன இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணலையா.. பண்ணிட்டு வந்திருங்க”ன்னு சொன்னார். “மாத்தியாச்சு சார்.. இதுதான்”னு என்று சொன்னேன். அவரும் “சரி”ன்னு சொல்லிட்டு.. அவர் டெக்னீஷியன்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணிகிட்டிருந்தார்.

ரொம்ப நேரமாச்சி.. வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்ல. முதல் நாள் ஷூட்டிங் ஷோபனா கூட. ஷோபனா எல்லாரையும் கலாய்க்கிற பார்ட்டி. அவர்கிட்ட கேட்டா சரியா தெரியும்ன்னு நினைச்சி.. “என்ன நடக்குது.. இன்னும் ஒரு காட்சி கூட ஆரம்பிக்கவே இல்ல”ன்னு அவர்கிட்ட கேட்டேன்.

அவரும் விசாரிச்சிகிட்டு வந்து.. “என்னாச்சி.. டைரக்ட்டருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்னையா.. இன்னைக்கு ஷூட்டிங் முதல் நாள்.. வந்ததுக்கு ஷூட்டிங் முடிச்சி அனுப்பி வைச்சிகிட்டு.. அப்புறம் ஹீரோவா கமல போட்டுடலாம்ன்னு பேசிக்கிட்டிருக்காங்க”ன்னு சொன்னதும்.. ( அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது ) அப்பதான் புரிஞ்சது.. நம்ம இஷ்டத்துக்கு மேக்கப்பும் டிரஸ், ஷூவெல்லாம் போட்டுக்கிட்டு வந்ததுன்னு.. தெரிஞ்சது.

முதல் நாளே என்கிட்ட இதெல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்க..? அதுக்கு ஹீரோவை மாத்திடலாம் என்பதை மணி சொல்ல.. கேள்விப்பட்ட பிறகு.. அப்புறம் போய் அவங்க சொன்னபடி எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வந்து நடிச்சேன். அப்படி மணி சார் ஒரு கண்டிஷனான இயக்குநர்.

இப்படி மூணு நாள் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. நம்ம எப்பவுமே ஒவ்வொரு காட்சியிலுமே எப்படி நடிக்கணும்ன்னு ஒரு ‘டெம்ப்ளேட்’ வெச்சுருப்போம். (கமல் வாய் விட்டு சிரித்தார்) இதிலேயும் அப்படித்தான் நடிச்சிகிட்டிருந்தேன்.

ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். “இன்னும் பீல்.. கொடுங்க”ன்னு திரும்ப, திரும்ப சொல்லிகிட்டேயிருந்தார் மணி. இதுக்கு மேல என்ன பீல் பண்ண..? நாமதான் ஒரு டெம்ப்ப்ளேட் வைச்சிருக்கோமே.. அப்படித்தான் நடித்து முடிச்சேன்.

நான் அப்போ நடிச்சிக்கிட்டிருந்ததெல்லாம், தூக்குடா.. அடிடா.. அப்படித்தான். (அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது ) எப்படியோ அன்னைக்கு ஷூட்டிங் முடிந்தது.

தினமும் இது இப்படியே போய்கிட்டிருந்தா சரியா வராதுன்னு நினைச்சி.. கமலுக்கு போன் பண்ணி.. “10 டேக்.. 12 டேக்கெல்லாம் எடுக்கிறாரு.. இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி நடிக்க சொல்றாருன்னு” நடந்ததை எல்லாம் சொன்னேன். “இது மணி படம். நீங்க நடிக்கும்போதே நான் நினைச்சேன். சரியா மாட்டுனேங்களா.? மணிகிட்ட நான் எவ்வளவு அனுபவிச்சிருப்பேன்..” அப்படின்னார். 

“சரி. இப்போ என்ன பண்ணலாம்?”ன்னு கேட்டேன். “ஒண்ணு பண்ணுங்க.. எப்படி நடிக்கணும்ன்னு அவரையே நடிச்சி காட்ட சொல்லி, அதை அப்படியே மனசுல ஏத்திகிட்ட மாதிரி பொய்யா அதை அப்படியே நடிச்சிருங்க” என்று சொன்னார்.

நானும் கமல் சொன்னது மாதிரி மணிகிட்ட நடிச்சி காட்ட சொல்லி.. அதை அப்படியே தம் பிடிச்சுக்கிட்டு அங்கிட்டு இங்கிட்டுமா நடந்துக்கிட்டு.. பெருசா பீல் பண்ணின மாதிரி பொய்ய சொல்லித்தான் (மீண்டும் பலத்த கரவொலி) நடிச்சு முடிச்சேன்.

நான் புத்தகம் நிறைய படிப்பேன். ஆனால் 300 பக்கங்களுக்கு மேல இருந்தா.. படிக்கவே மாட்டேன். (அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது) எல்லாரும் “பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தீர்களா?” என்று கேட்டார்கள். நிறைய பக்கங்கள் இருந்ததால் படிக்கவில்லை.

“பொன்னியின் செல்வன்’ கதையில் உள்ள ‘வந்திய தேவன்’ கதாப்பாத்திரத்தில் யார் நடித்தால் நல்லா இருக்கும்..?” என ‘குமுதம் அரசு கேள்வி பதில்’ ஒன்றில், ஜெயலலிதா அவர்களிடம் ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு, ‘ரஜினிகாந்த்’ என ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார், ஜெயலலிதா அவர்கள்.

அடடான்னு .. எனக்கு ஒரே குஷியாக ஆனது. அன்றுதான் இந்தக் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். கல்கி இன்று இருந்திருந்தால் அவர் வீடு தேடி போய் காலில் விழுந்து வணங்கி இருப்பேன். ( அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது )

இந்த கதையில், நந்தினிதான் எல்லாமே. ‘பொன்னியின் செல்வி’ என்றுதான் இதற்குப் பெயர் வைத்திருக்க வேண்டும். இதை வைத்துதான், ‘படையப்பா’ படத்தில் உள்ள ‘நீலாம்பரி’ கதாபாத்திரமே உருவானது.

இந்தப் படத்தை மணி பிளான் பண்ணும்போது, “நான் பெரிய பழுவேட்டையர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும்” என மணியிடம் கேட்டேன். அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. “இதில் நீங்க நடிச்சீங்ன்னா.. உங்க ரசிகர்களிடம் நான் திட்டு வாங்கவா..?  உங்களை இந்த மாதிரி யூஸ் பண்ண நான் விரும்பவில்லை.” என்றார் மணி.

வேறு யாராக இருந்தாலும் நான் கேட்டதற்கு “வேண்டாம்” என்று சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால், மணி “வேண்டாம்” என சொன்னார். அதுதான் மணிரத்னம். hats off.

பழுவேட்டையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்த கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையராக சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும்போது எனக்கு தோன்றியது.

(புத்தகத்தில் வரும் அருண்மொழிவர்மணின் அறிமுக காட்சிவரை அதை அப்படியே சொன்னார் ரஜினி )

இந்த ‘பொன்னியின் செல்வனில்’ 40-வது அத்தியாயத்தில்தான் அருண்மொழி வர்மன் தோன்றுவார். இந்தப் படத்தில் அவரின் அறிமுகக் காட்சியை மணிரத்னம் எப்படி வைத்திருப்பார் என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்…” என்றார் ரஜினிகாந்த்.

Our Score