சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த நான்கு நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று ரஜினி மேடையில் பேசியது தொடர்பாக பல வதந்திகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்த வண்ணம் இருந்தன. எனவே, நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று அதை தெளிவுப்படுத்தும்வகையில் மீண்டும் மேடையில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “என்னை வாழ வைத்த தெய்வங்களான என் ரசிக பெருகமக்களே… ஊடக நண்பர்களே… பத்திரிக்கை நண்பர்களே… அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
முதலில் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, கட்டுப்பாடா இங்கு வந்து இருந்தது.. பழகினது… இதெல்லாம் பார்த்து முதல்ல என்னோட சந்தோஷத்தை தெரிவிச்சிக்கிறேன்.
இந்த ஒழுக்கம்தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. ஒழுக்கமில்லைன்னு சொன்னா எந்த ஒரு காரியத்திலும் நாம முன்னேற முடியாது. அந்த ஒழுக்கத்தை நீங்க நல்லா கடைபிடிச்சீங்க, அதை அப்படியே எல்லா விஷயத்திலேயும் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த விழா ரசிகர்களை சந்திக்கும் விழாவாக ஏற்பாடு செய்து அற்புதமாக இதனை நிர்வகித்த சுதாகருக்கும் மற்றும் இவர்களுக்கு எல்லாம் நாயகனாக இருந்த என் உயிருக்கும் மேலான முரளிபிரசாத், சிவாராம கிருஷ்ணன், பாபா அவர்களுக்கும் அனைத்து ராகவேந்திரா மண்டப ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் ஜிம் பாய்ஸ், பொதுமக்கள், போலீஸ் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
முதல் நாள் நான் பேசியது என் ரசிகர்களுக்கு நான் அரசியல் வந்தால் எப்படி இருக்கணும் என்பதற்காக சொன்னது. அது இவ்வளவு பெரிய சர்ச்சையா, வாதப்பொருளா இருக்கும்னு நான் நினைக்கல. வாதங்கள், எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது. அதுவும் அரசியல்ல எதிர்ப்புதான் மூலதனமே. வாத விவாதங்கள் இருக்கலாம். ஆனால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போயிட்டாங்க…? அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில்தான் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.
நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு இப்போது 67 வயசு ஆகுது. ஆனால் 23 வருடங்கள்தான் கர்நாடகாவில் இருந்தேன். 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்க கூடவேதான் வளர்ந்தேன். கர்நாடகாவில் இருந்து ஒரு மராட்டியனாகவோ, கன்னடனாகவோ வந்திருந்தால்கூட நீங்க என்னை ஆதரிச்சு பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து என்னை நீங்க தமிழானகவே ஆக்கிட்டீங்க. எனவே நான் ஒரு பச்சைத் தமிழன். எங்க மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் ஊரில் பிறந்தவங்க அப்டீங்கறது நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.
நீங்க என்னை தூக்கிப் போட்டாலும் நான் இமயமலையில்தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். என்னை வாழ வைத்த தெய்வங்கள் என்னை மாதிரியே நல்லா இருக்கனும்னு நான் ஆசைப்படுறதல என்ன தப்புன்னு தெரியல. சரி அதுக்கு நீ என்ன சரி செய்வது அப்படீன்னு சொன்னா ஆமாம் இருக்காங்க.
தளபதி ஸ்டாலின் அவர்கள் திறைமையான நிர்வாகி.. அன்புமணி ராமதாஸ் நல்ல படிச்சவர்.. உலகம் முழுக்க சுற்றியவர்.. நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்கள். திருமாவளவன் தலித் மக்களுக்காக உழைக்கிறார். சீமான் போராளி.. அவருடைய சில கருத்துக்களை கேட்டு பிரமிச்சு போயிருக்கேன். அதுபோல இன்னும் சிலர் இருக்காங்க.. ஆனால் அமைப்பு கெட்டுப் போயிருக்கே.
அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களோட கண்ணோட்டம் கெட்டு போயிருக்கே…? எனவே முதலில் அமைப்பு சீர்படுத்தபட வேண்டும். ஜனங்களின் சிந்தனையை மாற்ற வேண்டும். அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த நாடு நன்றாக இருக்கும்…
என்னை பற்றிய விமர்சனங்களுக்கு என் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம். ஏனென்றால் எதிர்ப்பு இருந்தால்தான் வளர்ச்சியடைய முடியும். நம்மை பற்றிய அவதூறுகள், திட்டுகள், நிந்தனைகள் எல்லாமே செடி வளர தேவையான உரம் மாதிரி.. நம் வளர்ச்சிக்கு அவர்களே உதவுகிறார்கள்.
ஒரு முறை புத்தர் தன் சீடர்களோடு சென்றபோது, வழியில் வந்த ஒருவர் புத்தரை திட்டிக் கொண்டிருந்தார். அதை கேட்ட புத்தர் அமைதியாக நிற்க, உடன் வந்த சீடர்களும் அமைதியாக நின்றனர். அந்த நபர் சென்ற பின், சீடர்கள் புத்தரிடம் கேட்டனர். அதற்கு புத்தர் சொன்னார்.. அவர் திட்டிக் கொட்டினார். ஆனால் நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அது அவருடனேயே சென்றுவிட்டது… என்றார்.
பழைய காலத்தில ராஜக்கள்கிட்ட சைன்ய பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது.. ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். ஆனால், போர் வரும்போது நாட்டில் இருக்கும் சாதாரண ஆண் பிரஜைகளும் சேர்ந்து போரிடுவாங்க. அதுவரைக்கும் அவர்கள் தன் கடைமைகளை செயவார்கள். அதுபோல நாம் அனைவரும் அவரவர் கடமைகளை இப்போது ஒழுங்காக செய்வோம்.. நேரம் வரும்போது போர்க்களத்தில் இறங்குவோம்…” என்று முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார்.