full screen background image

ராஜபுத்திரன் – சினிமா விமர்சனம்

ராஜபுத்திரன் – சினிமா விமர்சனம்

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சஃபி தயாரித்துள்ள படம் ‘ராஜபுத்திரன்’.

கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.

மேலும் ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தங்கதுரை, இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார், டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார். ஏஐஸ் நௌஃபல் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி.

1990 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாச போராட்டத்தை உணர்வு பூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாக பதிவு செய்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் மகா கந்தன்.

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் பிரபு ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் து.

இந்த படம் நடக்கும் காலகட்டம் 1991-ம் ஆண்டு. தமிழகத்திலேயே மிக வறண்ட பொறுமையான ராமநாதபுரம் மாவட்டம்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.

விவசாய நிலங்கள் நிறையவே இருந்தாலும் வானம் பார்த்த பூமியாக இந்த ராமநாதபுரம் மாவட்டம் இருப்பதால் விளைச்சல் அதிகம் இல்லை. எப்பொழுது மழை பெய்யும் என்பது ஜோதிடர்களுக்கே தெரியாத ஒரு நிலைமை. மழையும் இல்லாமல் வெள்ளாமையும் இல்லாமல் வறட்சி பிரதேசத்தில் வறண்ட பாலைவனம் போல இருந்த அந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்போதைய காலகட்டத்தில் செல்லையா என்ற மனிதரின் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

செல்லையா ஊர் பெரிய மனிதர். ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். அவருடைய மனைவி இறந்துவிட்டார். தன்னுடைய மகனை மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார் செல்லையா. தன் மகனை யாரும் திட்டக் கூடாது. அடிக்கக் கூடாது. கண்டிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அதேபோல் தன் மகன் வளர்ந்து பெரியவன் ஆன பின்பும் அவனை வேலைக்கு போகவிடாமல் தடுக்கிறார். நீ ராஜா மாதிரி வாழ வேண்டிய பையன். நான் சம்பாதிக்கிறேன் என்று தன்னுடைய வயதுக்கும், தன்னுடைய சக்திக்கும் மீறி உழைக்கிறார் செல்லையா. பணம் சம்பாதிக்கவும் முயல்கிறார். ஆனால் முடியவில்லை. அனைத்து இடங்களிலும் கடன் வாங்கித்தான் குடும்பத்தை நடத்தி வருகிறார். இது மகனுக்கும் தெரியும்.

இதற்கு மேலும் தன் அப்பாவை கஷ்டப்படுத்த விரும்பாத மகன் பட்ட முத்து, அந்த ஊரில் பணக்கார முதலாளியான லிங்காவிடம் வேலைக்கு சேர்கிறார்.

அதே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றார்கள். அவர்கள் அங்கே இருந்து அனுப்புகின்ற பணத்திற்கு இந்திய அரசு வரி விதிப்பதால் அப்படி கொடுக்காமல் வெளிநாடுகளில் லோக்கலில் பணத்தை கொடுத்து அந்த லோக்கலில் கொடுத்த பணத்தை, இங்கே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்குமா லோக்கல் குழுக்களிடம் உண்டி பணமாக ஹவாலா முறையில் பணத்தை கொடுத்து பரிமாற்றம் செய்வது இப்போதுவரையிலும் நடந்து வருகிறது.

ப்படிப்பட்ட தொழிலைத்தான் செய்து வருகிறான் லிங்கா. அவனுடைய குழுவின் தலைமை அதிகாரி மீசை என்று அழைக்கப்படும் லிவிங்ஸ்டன். அந்தக் குழுவில் சேரும் பட்ட முத்து முதலில் குறைந்தபட்ச தொகையை கச்சிதமாக கொடுத்து நல்ல பெயர் எடுக்கிறான். அதனால் கொஞ்சம் அதிகமான தொகையை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அதையும் பட்ட முத்து கச்சிதமாக கொடுத்து வருகிறான்.

இந்த நேரத்தில் பக்கத்து ஊரில் இருக்கும் நாயகி கிருஷ்ண பிரியாவை பார்த்தவுடன் அவர் மீதும் காதல் கொள்கிறார் பட்ட முத்து. அந்தக் காதலும் துவக்கத்தில் மோதலாக ஆரம்பித்து பின்பு காதலாகவே மாறிவிடுகிறது. இந்தக் காதலுக்கு இரு தரப்புமே ஓகே சொல்ல… திருமணமும் நடத்தி விடுகிறது.

இந்த நேரத்தில் அதே ஊரில் லிங்காவுக்கு எதிராக தொழில் நடத்தி வரும் பெருமாள், மீசையை வைத்து லிங்காவை காலி செய்ய நினைக்கிறார். இதற்காக அவர் போட்டுக் கொடுத்த பிளான்படி பணம் கொண்டு போகுபவர்களை வழிலேயே வழிமறித்து அடித்து, உதைத்து பணத்தை பறித்து சென்று விடுகிறார்கள் சிலர்.

அதற்கு பிறகு பணத்தை பறிகொடுத்தவர் திரும்பி வந்து அழுகும் பொழுது அவரிடத்தில் அவருடைய வீட்டை, நிலத்தையோ பறித்துக் கொண்டு அவனை நட்டாற்றில் விடுகிறார் மீசை.

இதைப் போன்ற நிலைமை பட்ட முத்துவுக்கும் ஏற்படுகிறது. விஷயம் அறிந்து மகனைக் காப்பாற்ற வந்த செல்லையா ஆவேசம் கொண்டு வந்து தன்னுடைய வீட்டு பாத்திரத்தை லிங்காவிடம் தூக்கி எறிந்து விட்டு மகனை அழைத்துச் செல்கிறார். இன்னும் சில நாட்களில் மொத்தப் பணத்தையும் கொடுத்து வீட்டை மீட்பதாக சவால் விட்டு வருகிறார்.

இந்த சவாலில் அவர் ஜெயித்தாரா… இல்லையா… என்பதுதான் மீதமான கதை.

‘செல்லையா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு இந்தப் படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவருடைய அவ்வளவு வெயிட்டான உடம்பு மட்டும்தான் படத்தில் பார்க்கும்போது நமக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. இருந்தாலும் அந்த உடல் கட்டை ஒரு தகுதியாக வைத்துக் கொண்டு அப்பா என்ற அந்த கதாப்பாத்திரத்தில் தன்னுடைய மகன் மீது பாசத்தையும், அன்பையும், நேசத்தையும் கொடுத்து 1990 சினிமாக்களில் வந்த ஒரு அப்பாவை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ‘இளைய திலகம்’ பிரபு.

‘பட்ட முத்து’வாக நடித்திருக்கும் வெற்றி படத்தின் நாயகன் என்றாலும் நாயனுக்குரிய ஒரு அடிதடி பஞ்சாயத்து என்று நாயகர்களுக்கே உரித்தான பில்டப்புகள் எதுவும் இல்லாமலேயே ஒரு நல்லதொரு ஹீரோவாக படம் முழுவதும் நடித்திருக்கிறார்.

காதல் காட்சிகளில் ஒகே என்றாலும் ஆவேசம், கோபம், ஆத்திரம் என்று பல்வகை குணாதிசயங்களை காண்பிக்கும் காட்சிகளில் வெற்றிக்கு இன்னமும் அதிக பயிற்சி தேவை என்பது இந்தப் படத்திலும் தெரிகிறது.

நாயகி கிருஷ்ண பிரியா மிகச் சரியான தேர்வு. எப்படி தேடி கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை. மிக அழகான கிராமிய முகம். முதல் கட்சியில் அவ்வளவு ஆவேசமாக ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்து கொலை செய்கின்ற அந்தக் காட்சி பரபரப்பைக் கூட்டுகிறது. அப்படி ஒரு கோபத்தையும், வீரத்தையும், ஆத்திரத்தையும் காட்டி இருக்கிறார்.

கிருஷ்ண பிரியா இறுதிக் காட்சியில் தன்னுடைய மாமனாரின் மகன் பாசத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுவதோடு, அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தான் எழுதிய திரைக்கதைக்கு தானே சாட்சி என்பதைப்போல அனாதையாக நிற்கும் இடத்தில் நம் மனதை மிகவும் கவருகிறார்.

லிங்காவாக நடித்திருக்கும் புதுமுக வில்லன் விஜயன் வரவேற்கப்படக் கூடியவர். இவருக்கு இனிமேல் நிறைய படங்கள் கிடைக்கலாம். இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான தன்னுடைய மேனரிசம் மூலமாக நம்மை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.

மீசையாக நடித்த லிவிங்ஸ்டன், பெருமாளாக நடித்த ஆர்.வி.உதயகுமார், பிரபுவின் நண்பராக நடித்த இமான் அண்ணாச்சி மற்றும் நடித்தவர்கள் அனைவருமே இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இசைஞானி ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பு. கேட்கக் கூடிய அளவுக்கு பாடல்களும், இசையும் அமைந்திருக்கிறது. அதேபோல பாடல் வரிகளும் எளிமை, அழகு என்ற சொல்லலாம் பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார் இசையமைப்பாளர்.

ஒளிப்பதிவாளர் ஆலிவர் டேனியனின் ஒளிப்பதிவு கன கச்சிதம். ராமநாதபுரம் மாவட்டத்தின் வறண்ட பகுதியையும், வறட்சியையும் 1990-களில் இருப்பது போல் காட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் பிரயோத்தனப்பட்டு உள்ளடங்கிய ராமநாதபுரம் பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.

கிராமப் பகுதிகள், வீடுகள், சுற்றுப்புறங்கள் அனைத்துமே நம் பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும்படி காட்சிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

ராகேஷ் ராக்கியின் சண்டைக் காட்சிகளும் சிறப்புதான். அதிலும் லிங்கத்தின் இடத்தில் அப்பாவும், மகனும் வந்து சண்டையிடும் கட்சியை மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள். அதேபோல் கமலக்கண்ணனின் படத் தொகுப்பு சிறப்புதான்.

சிறு சில இடங்களில் திரைக்கதையாலேயே நம்மால் மனம் விட்டு சிரிக்க முடிகிறது. அந்த அளவுக்கு இயக்குனர் வெள்ளந்தியாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனாலும் ஒரு மிக எளிமையான கிராமத்து திரைப்படம்… ஒரு குடும்பத் திரைப்படம் என்ற வகையில் இந்தப் படத்தை நிச்சயமாக பார்த்து ரசிக்கலாம்.

RATING : 3.5 / 5

Our Score