தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
தற்போதைய சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி, போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது. அதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.
இவ்விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய கௌரவச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஸ்குமார் பேசும்போது ”தயாரிப்பாளர்கள் ஒன்றே குலம் என்று இருப்பவர்கள். நாங்கள் ஒரே குடும்பம். இங்கே எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம்.
இந்த அணிக்கு ஆதரவாக எஸ்.தாணு அவர்களும், டி.சிவா அவர்களும் தோள் கொடுப்பது இதன் ஒற்றுமைக்குச் சாட்சி. எங்களை வழிநடத்தும் ஜே.கே. ரீத்தீஷ், சேரன் அவர்களுக்கு நன்றி.
தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர் சங்கமாகத்தான் இருக்க வேண்டும். இதில் நடிகர் சங்கம் ஊடுருவ இடமில்லை. நடிகர் சங்க வாக்குறுதிகளையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களைப்போல நாங்கள் தரமற்ற விமர்சனம் செய்ய மாட்டோம். செயலில் காட்டுவோம்…” என்றார்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது “இந்த முன்னேற்ற அணியினர் வெறும் வாய்ச் சொல் வீரர்கள் அல்ல. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று விரிவாகப் பேசுவதில் விருப்பமில்லை. செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். எங்கள் அணி சார்பில் முதல்கட்ட செயல்பாடுகளாக 10 முக்கிய வாக்குறுதிகளும் 10 நலத்திட்டங்களும் இப்போது அறிவித்திருக்கிறோம்…” என்றார்.
தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “கடந்த காலத்தில் சங்கம் எதுவுமே செய்யவில்லை என்பது மிகவும் தவறு. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம். பல சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவர உதவியிருக்கிறோம். சிறு முதலீட்டுப் படங்கள் 125 படங்களில் 54 படங்களை சாட்டிலைட் உரிமைக்கு விற்றிருக்கிறோம். சேனல்கள் எப்.எம். விளம்பரக் கட்டணங்களை 2500 என்பதை 900 என்றும் 500 என்றும் குறைத்திருக்கிறோம்.
திருட்டு விசிடி பற்றி விஷால் இவ்வளவு பேசுகிறார். எங்கள் சங்கத்திற்கு அவரை அழைத்துப் பேசினோம். தமிழகம் முழுவதிலும் இருக்கும் பைரஸி பிரச்சினைகளை தமிழ்த் திரையுலகின் பிரதிநிதியாக அவரையே பார்த்துக் கொள்ளச் சொன்னோம். அதற்காக தனியாக ஆபீஸ் போட்டு, அதற்கான செலவுகளையும் தயாரிப்பாளர் சங்கமே ஏற்றுக் கொள்ளும் என்றுகூட சொன்னோம். முதலில் தலையாட்டிவிட்டு போனவர்தான் அதன் பின்பு அவரிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. உண்மையில் திருட்டு விசிடிக்களை ஒழிக்கும் ஆர்வம் அவருக்கு இருந்திருக்குமேயானால் அப்போதே வந்து அவர் பொறுப்பெடுத்து செய்திருக்கலாமே..? ஏன் செய்யவில்லை..?
விஷாலிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் அலுவலக நிர்வாகத்தினர் தொழில் முறை தயாரிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றோம். கேட்கவில்லை. அவர்கள் தினமும் ஓட்டல், பார்ட்டி, பணம், கவர், தங்கம் என்று தயாரிப்பளர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் எப்படி நேர்மை இருக்கும்..?
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி.. அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி.. என்பதைப் போல தவறானவர்களை உள்ளேவிட மாட்டோம். தயாரிப்பாளர்களின் வலி நடிகர்களுக்குத் தெரியாது. தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள் உணமையான தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும். பகுதி நேர தயாரிப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.
முன்னாள் எம்.பி நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, “இப்போது எடுக்கிற 100 படங்களில் 95 படங்கள் ஓடுவதில்லை. தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். படம் வெற்றி பெற்றால் நடிகர் முதல் லைட்மேன்வரை பங்கு போடுவார்கள். தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர் மட்டுமே தாங்க வேண்டும்.
நடிகர் சங்கத்தில் பாலமுருகன் என்கிற தன் பி.ஏ.வை வைத்து விஷால் நிர்வாகம் செய்கிறார். தகுதி இல்லாத அவர் அங்கே பல தவறுகளைச் செய்கிறார். கேட்க ஆளில்லை. 100 பேரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளார்கள். அப்படி ஒரு நிலை இங்கே வந்து விடக்கூடாது என்றுதான் இவர்களை நான் ஆதரிக்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். தம்பி டி.சிவாவை, முரளிதரன் முன் மொழிந்தபோது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜம் என்றாலும் சங்கம் இன்றைக்கு இருக்கும் நிலைமையில் தகுதியில்லாதவர்களின் கையில் சிக்கிவிடக் கூடாது என்று நான் நினைத்தேன்.
விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது. விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இந்த அணிக்கு ஆதரவாக வந்துள்ளேன்.
தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார் விஷால். சேரன் என்ன உன்னிடம் வந்து பணம் கேட்டாரா..? அவர் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர். அவரும் நீயும் ஒண்ணா.. விஷால்.. வாயை அடக்கிப் பேசு.. உனக்கு இப்போது நாவடக்கம் தேவை.
2012-ல் ‘நீதானே என் பொன் வசந்தம் ‘ படத்துக்கான சிக்கலில் கௌதம் மேனன் சிக்கலில் நின்றபோது நான் ஹைதராபாத்தில் இருந்தபோதும் அங்கிருந்தபடியே கெளதம் மேனனுக்கு ஒரு கோடி ரூபாயை உடனடியாக கடனாக வழங்கி அவரைக் காப்பாற்றினேன். அந்த நன்றிகூட அவருக்கு இல்லை..
பிரகாஷ்ராஜ் நல்ல மனிதர்தான். ஆனால் ஒரு நாள்கூட ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வந்த்தில்லை. அவர் மீது பல புகார்கள் சங்கத்திற்கு வந்தன. விசாரிக்க அழைத்தால் ஒரு நாள் ஹைதராபாத் மறுநாள் பெங்களூர், இன்னொரு நாள் மும்பை என்று ஓடிக் கொண்டேயிருப்பார். இப்படிப்பட்டவர் சங்கத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் சங்க வேலைகளுக்கு எப்படி நேரத்தை ஒதுக்குவார்..?
‘பாயும்புலி’ பட சிக்கல் வந்தபோது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா..? ஒரு முறை 50 லட்சம் ரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார். விஜய்யை ‘இளைய தளபதி’ என்று அழைத்தால் நீ ‘புரட்சித் தளபதி’ என்று போட்டுக் கொள்கிறாய்..? என்ன நினைச்சிக்கிட்டிருக்க..?
தம்பி விஷால்.. ஒண்ணு ஞாபகம் வைச்சுக்க.. தயாரிப்பாளர் சங்கத்தில் இப்போது சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். ஏற்கெனவே இந்த விஷால் நடித்த 12 படங்களினால் பல கோடி நஷ்டம். தயாரிப்பாளர்கள் தெருக்கோடிக்கு வந்துவிட்டார்கள். இப்போதுகூட நீ ஹீரோவா நடிச்ச ‘மதகஜராஜா’ படம் 30 கோடி பிரச்சினையில் வெளிவர முடியாமல் உள்ளது. அதற்காக நீ என்ன செய்தாய்..? படத்தை வெளியிட ஏதாவது முயற்சிகள் செய்தாயா..? இல்லையே..? உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் அனைத்தையும் வரும் 26-ம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.
ஞானவேல்ராஜா இப்போது என்னென்னவோ பேசுகிறார். ‘கொம்பன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா..? இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா…? நடிகர் சங்கத்தின் குழு, தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்ற நாம் அனுமதிக்கக் கூடாது..” என்று ஆவேசமாக பேசினார் தாணு.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.