நேற்று நடந்த ‘54321’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜனும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, “நான் நல்ல விஷயம் பேசினால் அதை பெரிதுபடுத்தி பிரச்சினையாக்கி விடுகிறார்கள். அதனால் என்னை யாரும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை..” என்று குறைப்பட்டுக் கொண்டார்.
அவர் மேலும் பேசும்போது, “இப்போதெல்லாம் யாரும் மனுஷனை நம்பிப் படமெடுப்பதில்லை. பேய், பிசாசை நம்பி எடுக்கிறார்கள். பேய், பிசாசுதான் படங்களை ஜெயிக்க வைக்கிறது. ராமநாராயணன் இருபது, முப்பது படங்கள் குரங்கு, நாயை நம்பி எடுத்தார். வெற்றியும் பெற்றார்.
இன்று ஏழைகள் தியேட்டருக்கு வருவது இல்லை. டிக்கெட் விலை 110 ருபாய். 5 பேர் தியேட்டருக்கு போனால் 550 ஆகிறது. தியேட்டரில் பார்க்கிங் மணிக்கு 50 ரூபாய் வாங்குகிறான். படத்துக்கு டிக்கெட் 110 ரூபாய். மூன்று மணி நேர பார்க்கிங் 150 ரூபாய், பாப்கார்ன், கோகோ கோலா 150 ரூபாயாம். அப்புறம் எப்படி தியேட்டருக்கு ஏழை மக்கள் வருவார்கள்..? அதனால எவனும் இப்போ தியேட்டருக்கு வரவே பயப்படுகிறான். டிக்கெட் விலை முதலில் குறைய வேண்டும்.
இப்போதெல்லாம் படம் நன்றாக இல்லை என்றால் ‘மச்சி உள்ளே வராதே’ என்று பேஸ்புக், வாட்ஸ்அப்பில் தட்டி விடுகிறான். இப்படித்தான் மவுத் டாக் அதிகமா பரவுது. ‘டிமாண்டி காலனி’ படம் இப்பவும் நல்லா ஓடுது. மவுத் டாக் பரவியதால்தான் இந்த நிலைமை. கோடி ரூபாய் விளம்பரத்தைவிட வாயால் பரவும் மவுத் டாக் பப்ளிசிடியினால்தான் படங்களுக்கு அதிகமாக விளம்பரம் கிடைக்குது.
நான் திருட்டு விசிடியை எதிர்த்து போராடினேன். திருட்டு விசிடியை விற்கிறவன் சுகமாக இருக்கிறான். நான் கஷ்டப்பட்டேன்.
இப்போதைய படங்களில் ஒரு கதாநாயகனை அடிக்க ஐநூறு பேர் கத்தியோடு வருவார்கள். ஐந்து, ஐந்து பேராக அடி வாங்கிவிட்டு போவார்கள். இவை எல்லாம் தேவையில்லாத செலவுகள். இப்படத்தை சிக்கனமாக எடுத்துள்ளார்கள்போலும் . இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேரை மட்டும் வைத்து ஒரே ரூமில் பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். பின்னாடி கூட்டமாக ஆடும் பெண்கள் எல்லாம் இல்லை. இந்த அளவுக்கு சிக்கனமாக படத்தைத் தயாரித்துள்ள இவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்..” என்றார்.