மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் ‘பிக்கப்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பவர் ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா நடிக்கும் இத்திரைப்படத்தை எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தில் அமெரிக்காவில் வாழும் சுகிர் பொன்னுசாமி என்ற தமிழரும் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இந்த ‘பிக்கப்’ படத்தை மிகுந்த பொருட்செலவில் உருவாக்குவதற்காக சுகிர் பொன்னுசாமியுடன் இணைந்திருப்பதாக தயாரிப்பாளர் வினோத் குமார் கூறியுள்ளார்.
இப்படம் பற்றி இணை தயாரிப்பாளரான சுகிர் பொன்னுசாமி பேசும்போது, ”நான் அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் தகவல்களை சேகரிப்பது வழக்கம்.
சமீபத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும், வனிதாவும் திருமணம் செய்ததாக ஒரு புகைப்படம் கண்டேன். பிறகு அது அவர்களுடைய படத்தின் பப்ளிசிட்டி என அறிந்தேன். அப்போது சீனி ஸாருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவரை அலைபேசியில் அழைத்துப் பேசினேன்.
அப்போது அவர், “நீங்களும் எங்களோடு இப்படத்தின் தயாரிப்பில் இணைந்தால் படம் மிக பிரம்மாண்டமாக உருவெடுக்கும்…” என்று சொல்லி இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார்.
அதில் இருந்த நகைச்சுவை என்னை மிகவும் ரசிக்க வைத்தது. இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் கடும் மன உளைச்சலில் இருப்பதால் இப்படத்தை காண்பது மூலமாக அவர்களால் சிறிது நேரம் சிரிக்க முடியுமே என்ற காரணத்தினால் எனது வாழ் நாள் சேமிப்பை இப்படத்திற்கு முதலீடாக தர விரும்பினேன்.
எத்தனை கோடிகள் செலவானாலும் இந்த ‘பிக்கப்’ படம் மூலமாக எல்லோருக்கும் நகைச்சுவை விருந்து வைப்பதுதான் இந்தப் படக் குழுவினரின் நோக்கமாகும்..” என்றார்.