விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத் தொகுப்பாளரும், இயக்குநருமான P.R.விஜய் தயாரிக்கும் படத்திற்கு ‘பிக் பாக்கெட்’ என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.
P.R.விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிரேம், இசை – ஷாஜகான், எடிட்டிங் – அருண்குமார், சவுண்ட் மிக்சிங் – பிரேம், Di – ஜியாவுதீன், பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு – P.R.விஜய்.
இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – J.S.ஜூபேர் அகமத். இவர் ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ‘ரிவால்வர்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குநர் J.S.ஜூபேர் அகமத் பேசும்போது, “ஒரே நாள் இரவில் நடக்கும் கதை இது. இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை இது. பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிக் பாக்கெட் பற்றி ஒரு சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் கேரி பண்ணியது கிடையாது.
ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க பிட்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதை உருவாக்கி இருக்கிறேன். பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம். அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாஃபியா கும்பல் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்லியிருக்கிறோம்..” என்றார் இயக்குநர் J. S.ஜூபேர் அகமத்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது.
புதுச்சேரியின் முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் படப்பிடிப்பினை துவக்கி வைத்தார்.









