full screen background image

“குறைந்த பட்ஜெட்டில் தரமான படமெடுத்தால் இங்கே மரியாதையில்லை”-வருந்தும் லட்சுமி ராமகிருஷ்ணன்

“குறைந்த பட்ஜெட்டில் தரமான படமெடுத்தால் இங்கே மரியாதையில்லை”-வருந்தும் லட்சுமி ராமகிருஷ்ணன்

‘ஆரோகணம்’ படத்தைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. இப்படத்தின்     பிரஸ்மீட்    நேற்று        முன்தினம்
செப்டம்பர் 26, மாலை 4 மணிக்கு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில், படத்தின் கதாநாயகன் சபீர், நாயகி பியா பாஜ்பாய், இன்னொரு நாயகியான ஸ்ருதி ஹரிஹரன், நடிகர்கள் தம்பி ராமையா, ஏ.எல்.அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவு வினோத்ராஜ். இந்தப் படம் ஒரு நெடுஞ்சாலையில் செல்லும் லாரியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

விழாவில் பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் கதையை பிட்டு பிட்டாக சொல்லப் போக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் டென்ஷனாகிவிட்டார். இடையிடையே “ஸார் ப்ளீஸ்.. கதையைச் சொல்லாதீங்க…” என்றுகூட சொல்லிப் பார்த்தார். ஆனாலும் ஏ.எல்.அழகப்பன் விடாமல் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சையும், ஹீரோவின் பின்னணியையும் சொல்லிவிட்டார். இதற்கு மேல் பேசினால் நடப்பதே வேறு என்பது போல லட்சுமி ராமகிருஷ்ணன் முறைக்க.. பட்டென்று டிராக் மாற்றி படத்தில் பங்கு பெற்ற அத்தனை பேரையும் வரிசையாகச் சொல்லி வாழ்த்திவிட்டு போனார்.

படத்தின் ஹீரோவான சபீர் மலையாள வரவு. பொதுவாக ஹீரோயின்களைத்தான் மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்வார்கள். இங்கே அப்படியே உல்டாவாகியிருக்கிறது. பாதி மலையாளம், பாதி தமிழுமாக கலந்து பேசினார். இப்படி பேசினால் தமிழ் ரசிகர்கள் எப்படி அணி திரள்வார்கள்..? நம்ம ரசிகர்களின் மனப்பான்மையே தெரியாம இருக்கிறார்களே..?

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில்,  “இந்த படத்தை ஒரு குவாலிட்டியான கமர்சியல் படமாக இயக்கியிருக்கிறேன். இந்த படத்துல நாலு கதை இருக்கு.. ஒரு க்ரைம், செண்டிமென்ட், காமெடி, சீரியஸ்ன்னு ஒரு கலவையாக இயக்கியிருக்கேன். இந்த படத்தின் டைட்டீல் ஒரு மாதிரி ரொமான்ஸாத்தான் தெரியும். ஆனா லாரியை மையமாகக் கொண்ட கதைன்றதால சில லாரிகளின் பின்னால் எழுதியிருக்கும் வாசகமான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்பதை டைட்டிலா வைச்சேன்.

குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் எடுத்தால் இங்கு மரியாதையே இல்லை.. நிறைய செலவு செய்து மிகப் பெரிய பட்ஜெட்டில் செய்தால்தான் அவரை இயக்குநர்கள் என்கிறார்கள். நான் செய்த தப்பு ‘ஆரோகணம்’ படத்தோட உண்மையான பட்ஜெட்டை வெளில சொன்னதுதான். ‘லட்சுமி ராமகிருஷ்ணன்தான.. அந்த 30 லட்சத்துல படத்தை முடிச்சுச்சே அதா..?’ என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த லோ பட்ஜெட் திட்டமே எனக்கு எதிரா போயிருச்சு.

ஆனால் இந்தப் படத்துல அது மாதிரியில்லை. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் அனூப் நீ பட்ஜெட்டை பத்தியே கவலைப்படாதே.. எவ்வளவு செலவுன்னாலும் பரவாயில்லை.. நீ பண்ணுன்னு சொன்னார்.. அதுனாலதான் இத்தனை பெரிய பட்ஜெட்ல என்னால படம் பண்ண முடிஞ்சது.. இந்தப் படத்தோட ஷூட்டிங்கை 75 நாள்ல முடிக்கிறேன்னு தயாரிப்பாளர்ட்ட சொல்லியிருந்தேன். ஆனா 65 நாள்லயே முடிச்சிட்டேன்.. லாரி… டிராவல்ன்னு நிறைய இடங்களுக்கு மாற வேண்டியிருந்ததால இத்தனை நாளாயிருச்சு..”  என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஒரு ஆண் இயக்குநருக்கு சவால் விடுவதை போல இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதை இந்தப் படத்தின் டிரெயிலரே காட்டியது..! வாழ்த்துகள் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு..!

Our Score