“மிஸ்டர் சந்திரமெளலி.” இந்த வசனத்தை இப்போது மத்திய வயதில் இருக்கும் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. காலங்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெயர் இது.
இயக்குநர் மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் திரைப்படமான ‘மெளன ராகம்’ படத்தில் ரேவதியின் தந்தையின் பெயர்தான் ‘சந்திரமெளலி’.
ரேவதியும், கார்த்திக்கும் ஒரு பூங்கா ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் தனது அப்பாவை பார்த்து ரேவதி பயந்து போக.. கார்த்திக்கோ ரேவதியை கலாய்ப்பதற்காக அடிக்கடி எழுந்து நின்று ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என்று அழைத்து அலப்பரை செய்வார்.
அந்த வசனத்தையே இன்றைக்கு ஒரு தமிழ்ச் சினிமாவின் தலைப்பாகவே வைத்திருக்கிறார்கள். அதிலும் அன்றைக்கு அந்த வசனத்தை பேசிய நடிகர் கார்த்திக்கே இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது இன்னும் சிறப்பான விஷயம்.
இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் வெற்றிகரமான முன்னாள், இந்நாள் ஹீரோக்களான அப்பா மகன்கள் இருவரும் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதுதான்.
நடிகர் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும்தான் இந்தப் படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். பாப்டா திரைப்படக் கல்லூரியின் நிறுவனரும், தயாரிப்பாளருமான தனஞ்செயன் தனது ‘Creative Entertainers and Distributors’ என்ற நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். இயக்குநர் திரு இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கேஸான்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த செய்தி இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பையும், பலத்தையும் கூட்டியுள்ளது. ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் மகேந்திரனும், அகத்தியனும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இக்கதையில் நடிகர் சதீஷ் தனது பாணி காமெடியில் அசத்தவுள்ளார். இந்த மெகா கூட்டணி ரசிகர்களை ஒரு விருந்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர் திரு பேசுகையில், “இந்தப் படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டு போயுள்ளது.
இயக்குநர் மகேந்திரன் சார், கார்த்திக் சார் மற்றும் அகத்தியன் சார் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. பல மடங்கு கூடியுள்ள எனது பொறுப்பை நான் நன்கு அறிவேன்.
படத்தின் தலைப்பே எங்களுக்கு ஒரு பெரும் பலமாகியுள்ளது. இந்த எல்லா விஷயங்களின் சங்கம்மும், இந்தப் படத்தை மிகப் பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கியுள்ளது…” என நம்பிக்கையோடு கூறினார் இயக்குநர் திரு.