full screen background image

“பொதுக்குழுக் கூட்டம் நடத்த காமராஜர் அரங்கத்தை தர மறுத்தார்கள்…” – நடிகர் நாசரின் வருத்தம்..!

“பொதுக்குழுக் கூட்டம் நடத்த காமராஜர் அரங்கத்தை தர மறுத்தார்கள்…” – நடிகர் நாசரின் வருத்தம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்தப் பொதுக் குழுவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில், “இந்த அரங்கத்தை நிரப்பியிருக்கும் என் சக கலைஞர்களுக்கும், நிர்வாகக் குழு, செயற்குழு, நியமனக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கம்.

SIAA-GB-Meeting-2017-Stills-2

இது ஒரு முக்கியமான பொதுக் குழு. எங்களுடைய மூன்றாண்டு கால நிர்வாகம் இந்த பொதுக் குழுவோடு நிறைவு பெறுகிறது.

எங்கள் நிர்வாகத்தில் பல மதம் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், எங்கள் ஒரே நம்பிக்கை இந்த சங்கத்தை வழி நடத்துவதுதான். அது இந்த சங்கத்தை உருவாக்கிய ஆன்மாக்களின் நம்பிக்கை.

இந்த நடிகர் சங்கத்தின் மாற்றம் இந்த அரங்கில்தான் நடைபெற்றது. நாங்கள் நிர்வாகத்தை கையில் எடுத்தபோது, நினைத்ததை சொல்ல வேண்டும் என்ற அடிப்படை உணர்வு எங்களிடையே இருந்தது. அது மறுக்கப்பட்ட நிலையில் எங்களுக்குள் கிளர்ந்தெழுந்த தீ, பிளம்பாக இல்லாமல் ஒளி சுடராக மாறியது.

நமது பொதுக் குழு கூட்டம்  வழக்கமாக இங்கேதான் நடக்கும். ஆனால் நாங்கள் முதல் முறையாக பொதுக் குழு கூட்டம் நடத்த முனைந்தபோது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவேதான் அது லயலோ கல்லுரியில் நடத்தப்பட்டது. பெரும் மண விழா போல் அன்றைக்கு அதனை நாம் நடத்தினோம்.

SIAA-GB-Meeting-2017-Stills-4

இரண்டாவது பொதுக் குழு கூட்டம், பாதி ஏற்பாடு செய்த நிலையில் நட்ட நடு இரவில் அனுமதி மறுக்கப்பட்டது. நான் இங்கே அரசியல் பேசவில்லை. எட்டு மணி நேரத்தில் ஒரு குளிர் சாதன கூடாரம் அமைத்து பாரம்பரியமான கூட்டத்தை நடத்தினார்கள் என் தம்பிமார்கள். நான் அன்றைக்கு நடந்தவைகளை மேற்பார்வை பார்க்கும்போது நிர்வாகிகள் யாரும் சாப்பிடவில்லை. தூங்கவில்லை என்பதை அறிந்தேன். இவர்கள் நினைத்தால், ஒரு அரசியல் மாற்றத்தையே இங்கே கொண்டு வரலாம். இவர்களின் செயலை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

இது மிக நெகிழ்வான பொதுக் குழு. நான் எந்த நிலையில் இந்த அரங்கத்தைவிட்டு கடைசியாக  சென்றேனோ… அதற்கு நேர் எதிராக மன நிறைவோடு இந்த அரங்கத்தை பார்க்கிறேன்.

பூச்சி முருகனை கடைசி பொதுக் குழுவில் ‘உள்ளே வர வேண்டாம்’ என்றேன். இப்பொழுது அவர் மேடையில் அமர்ந்திருக்கிறார். இப்போது அவருக்கு மகிழ்ச்சியா என்று தெரியவில்லை.  ஆனால், எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவரது அடை பெயரை போன்றே அவரிடத்தில் இருந்து தொல்லையும் உண்டு. அன்பும் உண்டு.

இந்த பொதுக் குழுவுக்கான வேலைகள் நடைபெறும்பொழுது மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டேன். விஷால்   எனக்கு அவ்வப்போது நம்பிக்கையளிப்பார். இந்த மூன்றாண்டு காலக்கட்டத்தில் நேற்று இரவுதான் நான், கார்த்தி, விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நிர்வாக ரீதியாக கலந்துரையாடினோம். அப்போது நெகிழ்ந்தோம்.

SIAA-GB-Meeting-2017-Stills-8

நாளை பொதுக் குழு கூட்டம். ஒரு எதிர்ப்பும் இல்லை. ஒருவேளை இன்றைக்கு ஏதாவது பெரிதாக எதிர்ப்புகள் வரும் என்று நினைத்தோம். ஆனால் வரவில்லை. இப்போது இன்னும் பெருமையாக இருக்கிறது. இந்த மூன்றாண்டு காலத்தில் நாம் ஒரு நிலைக்கு வந்துவிட்டோம்.

எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது. அப்படி ஒரு வார்த்தை எங்கள் அகராதியில் இல்லை. கை கோர்த்து நின்றவர்கள் எதிர்த்தார்கள். வாழ்த்தியவர்கள் எதிர்ப்புரை வழங்கினார்கள். ஆனால் எதிப்பவர்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். ஏனெனில், அவர்கள் எங்களை மறைமுகமாக பலமாக்கினார்கள். எப்படி எதிர்கொள்வது என ஆசிரியர்களாக நின்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தனர்.

நாங்கள், எங்களது சுயநலத்திற்காக சங்கப் பொறுப்பிற்கு வரவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உணர்வு வந்ததும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம்தான் எங்களுக்கு வந்தது. இந்த மூன்றாண்டு காலத்தில் சங்கம் எப்படி நடந்தது என்பதற்கு பட்டியல் வேண்டாம். நீங்கள் கட்டுக்கோப்பாக இந்த அரங்கு நிறைய அமர்ந்திருப்பதே அதற்குச் சாட்சி..” என்றார் நெகிழ்வுடன்..!

இந்த விழாவில் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் நடிகர் சங்கத்தின் அறங்காவலர் குழுவின் தலைவரான ஐசரி கணேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜூனியர் பாலையா, பூச்சி முருகன், பசுபதி, ஸ்ரீமன், உதயா.A.L, ரமணா, பிரேம்குமார், நந்தா, விக்னேஷ், T.P.கஜேந்திரன், M.A.பிரகாஷ், அயூப்கான், பாலதண்டபானி, குட்டி பத்மினி, கோவை சரளா, சிவகாமி, சங்கீதா, சோனியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் சரவணன், அஜய் ரத்தினம், லலிதாகுமாரி, காஜா மொய்தீன், மருதுபாண்டியன், பழ.காந்தி, வாசுதேவன், காளிமுத்து, ஜெரால்டு மில்டன், ரெத்தின சபாபதி, K.K.சரவணன், காமராஜ், கலீலுல்லா ஆகிய நியமன செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Our Score